கோடி கோடியா சம்பாதிச்சாலும் சென்ட் கூட அடிக்க முடியாது! ரகசியத்தை போட்டு உடைத்த பைலட்!
நம்மில் பெரும்பாலானோருக்கும் பெர்ஃப்யூம் (Perfume) பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். உடல் துர்நாற்றங்களை குறைத்து, புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள பெர்ஃப்யூம்கள் உதவுகின்றன. ஆனால் விமானங்களை இயக்குவதற்கு முன்பாக பைலட்கள் பெர்ஃப்யூம்களை பயன்படுத்த மாட்டார்கள் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான்.
இந்தியாவில் விமான நிறுவனங்கள் மற்றும் அனுபவம் ஆகிய காரணிகளை பொறுத்து, ஒரு ஆண்டுக்கு கோடிக்கணக்கில் கூட, பைலட்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் எவ்வளவுதான் அதிகமாக சம்பாதித்தாலும் கூட, விமானங்களை இயக்குவதற்கு முன்பாக பைலட்கள், பெர்ஃப்யூம்களை பயன்படுத்த மாட்டார்கள். இதற்கு பின்னால் உள்ள காரணம் சுவாரஸ்யமானது.

பைலட்டும், பைலட்களுக்கு பயிற்சி வழங்குபவருமான கேப்டன் Tomar Awdhesh என்பவர், சமீபத்தில் யூடியூப் (YouTube) தளத்தில் வீடியோ (Video) ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு: பைலட்களுக்கும் பெர்ஃப்யூம்கள் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால், லேஓவர்களின்போது (பயணத்தின்போது இடையே கிடைக்கும் ஓய்வு), ட்யூட்டி ஃப்ரீ ஷாப்களில், பெர்ஃப்யூம்களை நாங்கள் வாங்குவோம்.
ஆனால் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவும், பைலட்கள் மது அருந்தியுள்ளனரா? என்பதை கண்டறிய பரிசோதனை (Breathalyser Test) மேற்கொள்வது வழக்கமான ஒரு நடவடிக்கையாக உள்ளது. இந்த பரிசோதனையில் பிரச்னை ஏற்பட கூடாது என்பதற்காகவே, விமானங்களை இயக்குவதற்கு முன்னால், பைலட்கள் பெர்ஃப்யூம்களை பயன்படுத்துவதில்லை.

அதாவது பெரும்பாலான பெர்ஃப்யூம்கள் ஆல்கஹால் சார்ந்தவை. அதாவது அவற்றில் ஆல்கஹால் இருக்கும். எனவே பெர்ஃப்யூம் பயன்படுத்தியிருந்தால், அவை பரிசோதனை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பரிசோதனையில் பயன்படுத்தப்படும் டிவைஸ்கள் உணர்திறன் மிக்கவை. 0.0001 சதவீதம் ஆல்கஹால் இருந்தால் கூட, அவை கண்டறிந்து விடும்.
எனவே பைலட்கள் பெர்ஃப்யூம் பயன்படுத்தியிருந்தால், அதில் உள்ள ஆல்கஹாலை கண்டறிந்து, பரிசோதனை முடிவு அவர்கள் மது அருந்தியிருந்ததாக வரும். இதன் காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படலாம். அத்துடன் பைலட்கள் மிக கடுமையான நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடலாம். பெர்ஃப்யூம்கள் பயன்படுத்தினால், மது அருந்தாமலேயே பைலட்கள் இது போன்ற பிரச்னைகளை எல்லாம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
எனவேதான் விமானங்களை இயக்குவதற்கு முன்னால், பைலட்கள் பெர்ஃப்யூம்களை பயன்படுத்துவது கிடையாது. இவ்வாறு கேப்டன் Tomar Awdhesh தனது வீடியோவில் கூறியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், டிஜிசிஏ என சுருக்கமாக அழைக்கப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA - Directorate General of Civil Aviation) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கையில், பைலட்கள் உள்பட விமான பணியாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஆல்கஹாலை உள்ளடக்கிய பெர்ஃப்யூம்கள் மற்றும் மவுத்வாஷ் போன்றவற்றை பயன்படுத்துவதை பைலட்கள் உள்ளிட்ட விமான பணியாளர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Breathalyser Test-ல் முடிவுகள் தவறாக வரலாம் என்பதுதான் இதற்கு காரணம். அதேபோல் ஆல்கஹாலை கொண்ட மருந்துகளை சாப்பிடும் விமான பணியாளர்கள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக, தங்களது விமான நிறுவனத்தின் டாக்டர்களை கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விமானங்களை இயக்குவது என்பது, வெறும் திறன்களை மட்டும் அடிப்படையாக கொண்டது கிடையாது. அது மிகவும் கடுமையான பல்வேறு வித்தியாசமான விதிமுறைகளையும் உள்ளடக்கியது ஆகும். அப்படியான ஒரு விதிமுறைதான், விமானங்களை இயக்குவதற்கு முன்பாக பைலட்கள் பெர்ஃப்யூம்களை பயன்படுத்த கூடாது என்பதாகும்.
இது கேட்பதற்கு உங்களுக்கு மிகவும் விசித்திரமாக தோன்றலாம். ஆனால் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களை எல்லாம் மனதில் வைத்தே, இது போன்ற ஒரு விதிமுறையை உருவாக்கியுள்ளனர். ஆனால் விமானங்களை இயக்குவதற்கு முன்பாக மட்டும்தான் பைலட்கள் பெர்ஃப்யூம்களை பயன்படுத்த மாட்டார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் பெர்ஃப்யூம்களை பயன்படுத்த தடை எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications








