பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன தெரியுமா? பெற்றோர்களை ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் காரணம்!
பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வண்ணங்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட நிறத்தில் இருப்பதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். வாகனங்களின் டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளன? விமானங்களின் இருக்கைகளுக்கு ஏன் பெரும்பாலும் நீல நிறம் வழங்கப்படுகிறது? என்பது போன்ற சந்தேகங்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே விளக்கம் வழங்கியுள்ளது.

இந்த வரிசையில் இந்தியாவில் பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன? என்பதற்கான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன? என எப்போதாவது நீங்கள் யோசித்திருக்க கூடும். இதற்கு பின்னால் ஏதேனும் அறிவியல் காரணம் உள்ளதா? என்ற சந்தேகமும் உங்களுக்கு எழுந்திருக்கலாம். இவை அனைத்திற்கும் இந்த பதிவு விடையளிக்கிறது.

தொலைவில் இருந்து கூட நம்மால் மஞ்சள் நிறத்தை மிக எளிதாக காண முடியும். மழை, மூடுபனி ஆகிய சூழல்களிலும் கூட மஞ்சள் நிறத்தை நாம் தொலைவில் இருந்து எளிதாக பார்க்கலாம். அதுமட்டுமல்லாது, பல்வேறு நிறங்களை நாம் ஒன்றாக பார்க்கும்போது, மஞ்சள் நிறம்தான் நமது கவனத்தை முதலில் ஈர்க்க கூடியதாக இருக்கும்.

அத்துடன் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மஞ்சள் நிறத்தின் பக்கவாட்டு புற பார்வை (Lateral Peripheral Vision), சிகப்பு நிறத்தை காட்டிலும் 1.24 மடங்கு அதிகமானது. தலையை திருப்பாமலோ அல்லது கண்களை நகர்த்தாமலோ நம்மை சுற்றி உள்ள பொருட்களை பார்க்க கூடிய நிலைதான் புற பார்வை என குறிப்பிடப்படுகிறது.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால் நீங்கள் நேராக பார்க்கவில்லை என்றாலும் கூட, உங்களால் மஞ்சள் நிறத்தை எளிதாக காண முடியும். அதாவது உங்களுக்கு பக்கவாட்டில் மஞ்சள் நிற வாகனம் வருகிறது என வைத்து கொள்வோம். அதை நீங்கள் நேருக்கு நேராக பார்க்கவில்லை. இருந்தாலும் பக்கவாட்டில் மஞ்சள் நிற வாகனம் வந்து கொண்டிருப்பதை உங்களால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

இதன் காரணமாகதான் பள்ளி பேருந்துகளில் மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது. எனவே குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டிற்கும் பாதுகாப்பாக சென்று வர முடியும். அதே நேரத்தில் பள்ளி பேருந்துகளை எப்படி இயக்க வேண்டும்? என்பது தொடர்பாக சில வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதன்படி 'பள்ளி பேருந்து' என்ற வார்த்தை பேருந்தின் முன்பும், பின்பும் கண்டிப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஒரு வேளை பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதாக இருந்தால், 'பள்ளி பணி' என்பது கண்டிப்பாக சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் பள்ளி பேருந்துகள் அனைத்திலும் முதலுதவி பெட்டிகள் இருப்பதும் கட்டாயம். முதலுதவி பெட்டியுடன் தீயணைப்பானும் பள்ளி பேருந்துகளில் இருப்பது அவசியம். அதேபோல் பள்ளி பேருந்துகளின் ஜன்னல்களில் கிடைமட்டமான க்ரில்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் பேருந்தில் பள்ளியின் பெயரும், தொலைபேசி எண்ணும் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








