ஒரே ரயில் பெட்டியில ஏகப்பட்ட ஊர் பெயரை எழுதி வச்சிருக்காங்க ஏன் தெரியுமா? நம்ம ரயிலை கண்டுபிடிப்பது எப்படி?
ரயிலில் பயணிக்கும் பலருக்கும் கோச்களின் ஒரே நேரத்தில் வேறு வேறு ஊர்ப் பெயர்கள் மற்றும் வேறு வேறு ரயிலின் எண்கள் இருப்பதைப் பார்த்து குழப்பம் ஏற்பட்டிருக்கும். ஏன் இப்படி ரயில்களில் உள்ள ஒரே போர்டில் பல ரயில்களின் எண்களை எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதை விரிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே இந்தியாவின் போக்குவரத்துத் துறையின் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. குறைவான செலவில் நீண்ட தூரம் பயணிக்க ரயில்கள் தான் ஏற்ற போக்குவரத்து வாகனமாகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் ரயில்களில் பயணித்து வருகின்றனர்.

ரயில் கோச்சுகளில் அது எந்த ரயில் எனக் குறிப்பிடப்பட்ட வகையில் ஒரு போர்டு கொடுக்கப்பட்டிருக்கும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ரயிலில் அது கிளம்பும் ஊர் மற்றும் சேரும் ஊர் ஆகிய ஊர்களின் பெயர்கள் மட்டுமே அந்த போர்டில் இருந்தது. ரயிலில் கிளம்பும் ஊரிலிருந்து சேரும் ஊருக்கும் பின்பு அங்கிருந்து கிளம்பி மீண்டும் திரும்பி வரும் ஊருக்கும் என இரண்டு ரயில் எண்கள் மட்டுமே அதில் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் சமீப ஆண்டுகளாக ரயில்வேயில் பயன்படுத்தப்படும் கோச்சுகளில் ஒரே கோச்சில் மக்களைக் குழப்பும் வகையில் இரண்டு மூன்று ரயில்களின் பெயர்களும் ஐந்து ஆறு ரயில்களில் எண்களும் அச்சிடப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. தான் ஏற வேண்டிய ரயில் எது என்பதில் பலருக்குக் குழப்பம் வருகிறது.
இப்படி ஒரே பெட்டியில் இரண்டு மூன்று ரயில் குறித்த தகவல்கள் ஏன் அச்சிடுகிறார்கள்? என்ற கேள்வி பலருக்கும் வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ரயில்வே துறையின் பின்பற்றப்படும் ரேக் ஷேரிங் என்ற முறைதான். இந்த முறை காரணமாகத் தான் ஒரே ரயில் பெட்டியில் பலவிதமான ரயில்களின் பெயர்களும் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரேக் ஷேரிங் முறை என்றால் என்ன? : இதற்கு உதாரணமாக நாம் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ரயிலை எடுத்துக் கொள்வோம். இதில் 12638-12637 என்ற பாண்டியன் சூப்பர் பாஸ்ட் ரயில், 16795 -16796 சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 12654 - 12653 மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயிலின் தகவல்கள் ஒரே பெட்டியில் அச்சு செய்யப்பட்டுள்ளது.
இதில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9:35 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி அதிகாலை 5:15 மணிக்குச் சென்னைக்குச் சென்று விடுகிறது. மறுமார்கமாக சென்னையிலிருந்து இரவு 9:40 மணிக்குக் கிளம்பி அதிகாலை 5:25 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது. இந்த ரயில் காலை 5:15 மணிக்குச் சென்னையைச் சென்றடைந்த உடன் பின்பு இரவு வரை காத்திருப்பு ரேக்கில் நிறுத்தப்பட்டு வந்தது.
அப்பொழுது சும்மா இருக்கும் இந்த ரயில் பெட்டிகளைச் சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் காலை 7:15 மணிக்குச் சென்னையில் கிளம்பி மதியம் 2:30 மணிக்குத் திருச்சியைச் சென்றடைகிறது. அதாவது 5:15 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை வரும் ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்து காலை 7:15 மணிக்குச் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக அனுப்புகின்றனர்.
இப்படி ஒரே ரயில் பெட்டிகளை இரண்டு ரயில்களுக்குப் பயன்படுத்துவதால் ரயில் பெட்டிகளை போதுமான அளவு பயன்படுத்த முடிகிறது. மாறாக ஒரே இடத்தில் காத்திருப்பிலிருந்தால் ரயில்வே நிர்வாகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரே இடத்தில் இருப்பதால் ரயில் பெட்டிகள் அதிகம் சேதமடைகிறது. இதைக் குறைக்கவே ரயில் பெட்டிகளைப் பகிரும் முறை கொண்டுவரப்பட்டது.
இப்படியாக ரயில் பெட்டிகள் பகிரும் முறையே தான் ரேக் ஷேரிங் என அழைக்கப்படுகிறது. இப்படியாக ஒரு ரயில் எத்தனை ரயில்களுடன் ரேக் ஷேரிங்கில் இருக்கிறதோ அந்த ரயில்களின் பெயர்கள் மற்றும் எண்கள் எல்லாம் ஒரே பலகையில் அச்சிடப்பட்டு ரயில்வே கோச்சில் பொருத்தப்பட்டிருக்கும்.
இதனால் ஒவ்வொரு முறையும் ரயில்வே கோச்சுகளில் பலகையை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. நிரந்தரமாக ஒரே பலகை இருக்கும். ரயில்வே நிர்வாகம் உடனடியாக குறிப்பிட்ட ரயிலை இந்த மார்க்கத்திற்குச் செல்லும் ரயிலாக மாற்றி விட முடியும். ரயில்வே நிர்வாகம் அதன் வசதிக்காக இந்த முறையை பின்பற்றுகிறது.
தினசரி ரயில்களில் மட்டுமல்ல வாராந்திர ரயில்களிலும் இந்த ரேக் ஷேரிங் முறை அதிகம் இருக்கும். குறிப்பாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயங்கும் ரயில்கள் மற்ற நாட்களில் வேறு ரூட்டில் இயங்கும் படி இதை ரேக் ஷேரிங் செய்திருப்பார்கள். இந்த ரேக் ஷேரிங் முறைக்குப் பிறகு தான் ரயில் பெட்டிகளில் இவ்வாறு ஒரே போர்டில் பல ஊர்களின் பெயர்கள் அச்சு செய்யப்பட்டுள்ளன.
இதனால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கப் பயணிகள் முதலில் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் அறிவிப்புகளைப் பார்க்க வேண்டும். அந்த அறிவிப்பில் நீங்கள் பயணிக்க வேண்டிய ரயில் எந்த நடைமேடையில் நிற்கிறது என்பதை செக் செய்த பின்பு. அந்த நடைமேடையில் உள்ள ரயில் பெட்டியில் நீங்கள் பயணிக்கும் ரயிலில் என் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.
இப்படியாக ரயில் பெட்டிகளில் உள்ள பெயர்களில் நீங்கள் பயணிக்கும் ரயில் பெயரும் இருந்தால் அது நிச்சயம் உங்கள் ரயில் பெட்டி தான். அதில் துணிந்து நீங்கள் ஏறிக்கொள்ளலாம். இந்த ரேக் ஷேரிங் முறையால் ஒரே போர்டில் பல ரயில்களின் பெயர்கள் எழுதப்படும் வழக்கம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு பல ரயில்களில் பயணிகள் மாறி ஏறிக் குழம்பினர். தற்போது இந்த குழப்பம் ஓரளவுக்குத் தீர்ந்தாலும் முழுமையாகத் தீரவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ரயில்வேக்கு ரேக் ஷேரிங் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அதே நேரம் இவ்வாறான பலகையில் பல ரயில்களின் பெயர்கள் இருப்பதால் பயணிகள் குழம்பி வருகின்றனர். இதைத் தவிர்க்க ரயில் பெட்டிகளில் உள்ள பெயர் பலகையை டிஜிட்டல் பெயர்ப் பலகையாக ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்ய வேண்டும். இதனால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்


Click it and Unblock the Notifications








