டிரெயின்ல போறவங்க உசுரெல்லாம் பெருசு இல்லையா என்ன?.. ரயில்ல சீட் பெல்ட் கொடுக்காததன் காரணம் என்ன தெரியுமா?..
கார்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 2-பாயிண்ட், 3-பாயிண்ட் மற்றும் 4-பாயிண்ட்னு பன்முக சீட் பெல்டு (Seat Belt)கள் வழங்கப்படுகின்றன. ஆனால், நாள் ஒன்றுக்கு ஆயிரக் கணக்கில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மிக அதிக வேகத்தில் பயணிக்கும் ரயில்களில் ஒற்றை பாயிண்ட் சீட் பெல்ட்கூட வழங்கப்படுவதில்லை.
என்றைக்காவது ஏன் நாம் பயணிக்கும் ரயில்களில் சீட் பெல்ட் வழங்கப்படுவதில்லை என நீங்கள் யோசிச்சு பார்த்தது உண்டா?, ஒருவேளை எங்களைபோலவே இதுபற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பின் உங்களுக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பயணிகளின் பாதுகாப்பில் சீட் பெல்ட் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இந்த அம்சம் கார்களில் இருக்கும், விமானங்களில் இருக்கும், ஏன், விலை உயர்ந்த டிரக்குகளில் கூட இருக்கும். ஆனால், நாள் ஒன்றிற்கு ஆயிரக் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில்களில் இந்த அம்சம் இடம் பெறுவதில்லை.
நவீன கால ரயிலான வந்தே பாரத்-இல்கூட சீட் பெல்டுகள் இல்லாமல் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. ரயில்களில் சீட் பெல்ட் வழங்கப்படாமல் இருப்பதனால் ரயில் பயணங்களில் ஆபத்து இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். மற்ற போக்குவரத்துகளைப் போலவே ரயில் போக்குவரத்திலும் அதிக ஆபத்துகள் தென்படுகின்றன.

சமீபத்தில், மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் உள்ள சிங்பூர் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஓர் ரயிலில் இருந்த பைலட் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
அது சரக்கு ரயிலாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் பெரிய அளவில் ஏற்படவில்லை. இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கு கிரீஸில் பயங்கர ரயில் விபத்து ஒன்று அரங்கேறியது. இது ஓர் பயணிகள் ரயில் ஆகும். எனவே இந்த விபத்தில் உயிர் சேதம் பலமடங்கு அதிகமாக ஏற்பட்டது.

துரதிரஷ்டவசமாக 35-க்கும் அதிகமானோர் ரயில் விபத்தினால் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர். இது போன்று மிகப் பெரிய அளவில் காவு வாங்கக் கூடியதே ரயில் விபத்துகள் ஆகும். இருப்பினும் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அம்சம் வழங்கப்படுவதில்லை.
இந்தியாவில் மட்டும்தான் இந்த நிலைமையா என கேட்டால், இல்லை. உலகளவில் இதே நிலைமைதான் தென்படுகின்றது. இதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், ரயிலில் பயணிப்பவர்கள் சுதந்திரமாக சுற்றி வர வேண்டும் என்பதே ஆகும். நம்மில் பலர் ரயில் போக்குவரத்தை பல்வேறு காரணங்களுக்காக விரும்புகின்றனர்.

மிக முக்கியமாக அதில் மிகவும் ரிலாக்சாக பயணிக்க முடியும், தேவைப்படும்போது நடமாட முடியும், பக்கத்து கம்பார்ட்மென்டில் உள்ள உறவினர்கள் அல்லது நண்பர்களை சந்திக்க முடியும். இதுமாதிராயன சுதந்திரமான அனுபவத்திற்கே ரயில் போக்குவரத்து மிகவும் ஃபேமஸானதாக இருக்கின்றது. இந்த சுதந்திரத்தை தடுக்க கூடாது என்பதில் உலக நாடுகள் அதிக கவனத்துடன் இருக்கின்றன.
மேலும், பெரும்பாலான ரயில்கள் பல மணி நேரம் டிராவலைக் கொண்டதாக இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் சீட் பெல்ட் உருவாக்கப்பட்டு அதைக் கட்டாயமாக்கினால், அது சிறைத் தண்டனையைப் போன்று இருக்கும். இதுவும் சீட் பெல்டுக்கான அவசியம் ரயில்களில் இல்லாமல் போவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
ரயில்கள் அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் அதனுள் மிக சுலபமாக நடமாட முடியும். ஆனால் கார்களில் அது முடியாது. சுதந்திரமாக தண்ணீர்கூட குடிக்க முடியாது. ஆனால், ரயில்களில் டீ-யைகூட அசால்டாக குடிக்க முடியும். இதற்கு தண்டவாளங்களே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன.
இவையே ரயில் இயக்கத்தை சீராகவும், ஸ்மூத்தானதாகவும் மாற்றுகின்றது. சின்ன அலுங்கள்-குலுங்கள்கள்கூட ரயில்களில் இருக்காது. இந்த அனுபவங்களுடன் மேலும் சுதந்திரமான பயண அனுபவத்தை வழங்க வேண்டியே ரயில்களில் சேஃப்டி பெல்டுகள் வழங்கப்படுவதில்லை. அதேவேளையில், உலக நாடுகள் சில தங்களுடைய ரயில்களில் சீட் பெல்டை அமைத்து சோதனைச் செய்திருக்கின்றன.
100க்கு 26 சதவீதம் பேர் மட்டுமே இருக்கையில் அமர்ந்து சீட் பெல்டை அணிந்தவாறு பயணித்திருக்கின்றனர். மற்றவர்கள் சுதந்திரமாக அமர்ந்துக் கொண்டும், ஒரு சிலர் வேறு கம்பார்ட்மென்டில் இருக்கும் தங்களுடைய நண்பர்களைப் பார்பதற்காக அங்கும், இங்குமாக அலைந்துக் கொண்டும் இருந்திருக்கின்றனர். ஆகையால், மக்கள் பலர் ரயில் பயணங்களின்போது சீட் பெல்ட் அணிய தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
இதேபோல், ரயில்களில் சீட் பெல்ட் இருந்தாலும், விபத்தின்போது அது பெரிய அளவில் பாதுகாப்பை வழங்காது எனவும் சில ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ரயில்கள் பிற வாகனங்களைக் காட்டிலும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அவை விபத்தைச் சந்திக்கும்போது இருக்கைகளே தூக்கி எறியப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மிகப் பெரிய ரயில் விபத்துகளில் செய்யப்பட்ட பகுப்பாய்வின் வாயிலாகவே இந்த தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. அதேநேரத்தில், சில ஆராய்ச்சி முடிவுகள் ரயில் போக்குவரத்தில் மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், சேஃப்ட்டி பெல்டுகளுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட இருக்கைகளை பயன்படுத்த அறிவுறுத்துகின்றன. அந்த இருக்கைகள் எந்த மாதிரியான சூழலாக இருந்தாலும் பாதுகாப்பு வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் விபத்து அரிதினும் அரிதாகவே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், ரயில் பயணம் மற்ற பயணங்களைக் காட்டிலும் சற்றே பாதுகாப்பானதாக உள்ளது. எனவே சீட் பெல்ட் அல்லாமல் வேறு வழிகளில் பயணிகளுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
