30 டயர், 100 அடி நீளம், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்த லாரிக்கு ரூ1 லட்சம் அபராதம்!
காற்றாலைக்காக இறக்கையை கொண்டு சென்ற கனரக வாகனம் ஆறு நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அந்த வாகனத்திற்கு ரூபாய் 1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் போலீசார் இந்த அபராதத்தை விதித்துள்ளனர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது கனரக வாகனங்கள் மிகப்பெரிய அளவிலான பொருட்களை எடுத்துச் செல்வதை நம்மால் பார்க்க முடியும். முக்கியமாக காற்றாலைக்கு தேவையான இறக்கைகள் தேசிய நெடுஞ்சாலை வழியாக அந்தந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் போது நாம் இப்படியான வாகனங்கள் செல்வதை பார்க்க முடியும்.

காற்றாலைக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் இந்த வாகனங்களுக்கு முன்னால் எஸ்கார்ட் செய்ய வாகனங்கள் மற்றும் வாகனத்திற்கு பின்னாலும் எஸ்கார்ட் செய்ய வாகனங்கள் என மிகப் பெரிய அளவில் பணியாட்களை கொண்டே இந்த இறக்கை எடுத்துச் செல்லப்படும். பகல் நேரத்தில் இது நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் போக்குவரத்துக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்பதால் இவ்வாறான கனரக பொருட்கள் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே எடுத்துச் செல்லப்படும்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை எடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு இப்படியாக காற்றாலைக்கான இறக்கையை ஏற்றி செல்லும் கனரக வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்பொழுது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த வாகனத்தை பார்க்கும் போது பகல் நேரத்தில் பயணிக்க முடியாது என்பதற்காக நிறுத்திருக்கலாம் என கருதினர்.

இந்த வாகனத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இருந்தாலும் ஒரு நாள் தானே என அப்போது மக்கள் எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டு ஆறு நாட்கள் ஆகியும் இந்த வாகனத்தை எடுத்துச் செல்ல யாருமே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பகுதியை சேர்ந்த மக்கள் போலீசில் குறிப்பிட்ட இந்த காற்றாலை இறக்கையை எடுத்துச் செல்லும் கனரக வாகனம் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள சர்வீஸ் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்த கனரக வாகனத்தை வந்து சோதனை செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பகல் நேரத்திற்காக காத்திருக்கவில்லை அவர்கள் காற்றாலை இறக்கையை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் காரணமாக நிறுத்தி வைத்ததாக தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து நெருக்கடியாக இருந்ததாக கூறி குறிப்பிட்ட அந்த வாகனத்திற்கு ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.

பொதுவாக கனரக வாகனங்கள் என்பது அரசு அனுமதி பெற்ற பின்பே தனியார் நிறுவனங்கள் மூலம் காற்றாலை இறக்கைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இப்படியாக அவர்கள் எடுத்துச் செல்லும்போது அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது அதே நேரம் அவர்கள் பயணத்திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின்பே பயணத்தை துவங்க வேண்டும் என பல விதிமுறைகள் இருக்கிறது.
இதையும் மீறி ஏதாவது பிரச்சனைக்காக வாகனம் நீண்ட நேரம் நிறுத்தப்பட்ட நேர்ந்தால் அவர்கள் போக்குவரத்திற்கு எந்த விதமான இடையூறும் இல்லாத வகையில் வாகனத்தை நிறுத்த வேண்டும். முடிந்த வகையில் தனியார் இடத்திற்கு வாகனத்தைக் கொண்டு சென்று அங்கு நிறுத்த வேண்டும். ஆனால் பொது சாலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டால் அதற்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.
அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இப்படியாக கனரக வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்படுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதனால் மக்களுக்கும் சரி போக்குவரத்து போலீசாருக்கும் சரி மிகப்பெரிய தலைவலி தான். தனியார் நிறுவனத்திற்கும் இதனால் பெரும் இழப்பு ஏற்படும். இதனால் தனியார் நிறுவனங்கள் இதை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை துவங்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காற்றாலை என்பது நம் நாட்டிற்கு மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அதே நேரம் இது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் இதை போக்குவரத்து செய்ய வேண்டும். இதற்காக பயணத்தை திட்டமிடும்போதே சரியான வகையில் தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கும்படி பார்த்து திட்டமிட வேண்டும். சரியாக திட்டமிடல் இல்லாததாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









