மனசுல தனுஷ்னு நெனப்பு! ஜன்னலை உடைத்து பஸ்ஸில் ஏறிய பெண்ணுக்கு ஷாக்! டிரைவர் செய்த காரியத்தால் ஆடி போய்ட்டாங்க!
கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பகுதிகளில் ஒன்று இல்கல். இது கைத்தறி சேலைகளுக்கு பெயர் பெற்றது. இந்த ஊரை சேர்ந்த லட்சுமி என்ற பெண், சமீபத்தில் ஹூலிகி பகுதிக்கு சென்றிருந்தார். இங்கு பிரபலமாக ஹூலிகி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் வழிபாடு நடத்துவதற்காகவே லட்சுமி சென்றிருந்தார். ஆனால் அவர் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பும்போது, பஸ்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை. நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ்கள் எதுவும் நிறுத்தப்படாத காரணத்தால், லட்சுமி விரக்தியடைந்தார். அப்போது அந்த வழியாக பஸ் ஒன்று வந்தது.

அது கொப்பல்-ஒசபேட்டை இடையே பயணிக்கும் நான்-ஸ்டாப் பஸ் ஆகும். ஏற்கனவே விரக்தியில் இருந்த லட்சுமி, இந்த பஸ்சும் நிறுத்தப்படாத காரணத்தால், கர்ணன் பட தனுஷ் பாணியில் கல் ஒன்றை எடுத்து அந்த பஸ்ஸின் மீது வீசினார். இதனால் பஸ்ஸின் ஒரு ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. திடீரென ஜன்னல் கண்ணாடி நொறுங்கியதால், டிரைவர் முத்தப்பா பஸ்ஸை நிறுத்தினார்.
இது நான்-ஸ்டாப் பஸ் என்பதால், இவரேதான் பஸ்ஸில் கண்டக்டராகவும் பணியில் இருந்தார். இதற்கிடையே பஸ் நின்ற பிறகு, லட்சுமி அதில் ஏறி கொண்டார். ஆனால் பஸ் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது. அங்கு லட்சுமி மற்றும் பஸ் டிரைவர்/கண்டக்டர் முத்தப்பாவிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் முடிவில் லட்சுமிக்கு 5 ஆயிரம் ரூபாயை காவல் துறை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர். இந்த அபராத தொகையை லட்சுமி செலுத்தி விட்டார். அத்துடன் தனது செயலுக்கு அவர் மன்னிப்பும் கோரினார். கர்நாடக மாநிலத்தில் இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்ட பஸ்ஸின் டிரைவர்/கண்டக்டர் முத்தப்பா கூறுகையில், ''லட்சுமி தவறான இடத்தில் நின்று கொண்ருந்தார். அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு எதிர் திசையில்தான், அவர் செல்ல வேண்டிய ஊருக்கான பஸ் ஸ்டாப் உள்ளது. ஆனால் இதை உணராமல் தவறான பகுதியில் அவர் காத்து கொண்டிருந்தார்.
அத்துடன் எங்களது நான்-ஸ்டாப் பஸ். எனவே வழியில் எங்குமே நிறுத்த மாட்டோம்'' என்றார். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் லட்சுமி ஆத்திரமடைந்த காரணத்தால், அவருக்கு அனைவர் மத்தியிலும் அவப்பெயர் ஏற்பட்டிருப்பதுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்ட செலவும் ஆகியிருப்பது கவலைக்குரிய விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசு பஸ்கள் மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படுபவை. மக்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி கொண்டிருக்கும் அவற்றை ஆத்திரத்தில் சேதப்படுத்துவது சரியான விஷயம் அல்ல. அத்துடன் ஒரு சிலர் இப்படி அத்துமீறி நடந்து கொள்வதால், மக்களின் பயணம் பாதிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றதால், அந்த பஸ்ஸில் பயணித்த அனைவரும் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஆகிய காரணங்களுக்காக, பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய வேண்டும் என மக்களை அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள், மக்கள் மத்தியில் பொது போக்குவரத்து மீதான நம்பகத்தன்மையை குறைத்து விடும்.
இது நடந்தால், அனைவரும் தங்கள் சொந்த கார் அல்லது டூவீலர்களில்தான் பயணம் செய்ய விரும்புவார்கள். பின்னர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். அத்துடன் அதிக வாகனங்கள் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். அனைவரும் இதை உணர்ந்து செயல்படுவது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








