மல்லையாவுக்கு 3 மணிநேரத்தில் ஜாமீன்... கார் ஓட்டி 2 பேரை கொன்ற பெண்ணுக்கு ஒரு மணிநேரத்தில் ஜாமீன்!
இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு மூன்று மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், புனேயில் விபத்தை ஏற்படுத்திய பெண் ஒருவருக்கு ஒரு மணிநேரத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை புனே நகரில் நடந்த விபத்து ஒன்றின் சிசிடிவி கேமரா காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்கச் செய்தது. அங்குள்ள ஷாப்பிங் மால் எதிரில் சாலையை கடப்பதற்காக சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் நின்றிருந்த 5 பேர் மீது அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் சாலை தடுப்பில் நின்று கொண்டிருந்த 3 வயது குழந்தை உள்பட 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில், இஷா என்ற குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அந்த குழந்தையின் தாயார் பூஜா உள்பட மற்ற 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பூஜா சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல் இப்போது கிடைத்துள்ளது.

இந்த பயங்கர விபத்து தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி வந்தவர் சுஜாதா ஜெய்பிரகாஷ் ஷெரோஃப் என்ற பெண்மணி என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

அதில், காரை ஓட்டும்போது திடீரென அயர்ந்து விட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அதேநேரத்தில், காரை ஓட்டும்போது சுஜாதா ஜெய்பிரகாஷ் போனில் பேசியபடி வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

கைது செய்யப்பட்ட ஒரு மணிநேரத்தில் சுஜாதாவுக்கு போலீசார் ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது. இதுதான் தற்போது பலருக்கும் கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயம். இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு மூன்று மணிநேரத்தில் ஜாமீன் தரப்பட்டது.

இது பெரும் விவாதப் பொருளாக இருந்தது. இந்த நிலையில், கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான பெண்ணிற்கு கைது செய்யப்பட்டு ஒரு மணிநேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட விவகாரமும் இப்போது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
கார் ஓட்டி இரண்டு பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுஜாதா புனே நகரை சேர்ந்த ஷெரோப் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








