தானியங்கி டெஸ்லா காரில் பிறந்த உலகின் முதல் குழந்தை!! பென்சில்வேனியாவில் நடந்த அதிசயம்!
உலகிலேயே முதல்முறையாக தானியங்கி டெஸ்லா காரில் பெண் ஒருவர் குழந்தையை ஈன்றுள்ளார். இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பென்சில்வேனியாவை சேர்ந்த இரு குழந்தைகளுக்கு தாயான பெண்மணி ஒருவர் உலகளவில் ட்ரெண்டாகி உள்ளார். காரணம், இயக்கத்தில் இருந்த டெஸ்லா காரில் இவர் குழந்தையை ஈன்றெடுத்திருப்பது தான். இது நிச்சயம் பலரது கவனத்தை ஈர்க்கக்கூடிய விஷயமாகும்.

அமெரிக்காவை சேர்ந்த செய்திதளம் ஒன்று இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறுள்ளது. 33 வயதான யிரன் ஷெர்ரி என்பவர் தனது கணவர் கீட்டிங் ஷெர்ரி (34) மற்றும் அவர்களது 3 வயது மகன் ராஃபா உடன் மகனின் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்திற்கு டெஸ்லா காரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.

கர்ப்பமாக இருந்த யிரன் ஷெர்ரி, இந்த பயணத்தின்போதே வழி தாங்காமல் காரிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேவ் லில்லி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த குழந்தை தான் உலகின் முதல் டெஸ்லா பேபியாக கருதப்படுகிறது. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகனின் பள்ளிக்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.

வீட்டில் இருந்து கிளம்பும்போதே அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த யிரனுக்கு சற்று இடுப்பு வலி இருந்துள்ளது. அவரது கணவர் கீட்டிங் ஷெர்ரி தான் அவரை எப்படியோ பக்குமாக காருக்குள் அமர வைத்துள்ளார். இருவரும் அவர்களது டெஸ்லா காரின் முன் இருக்கைகளில் அமர்ந்துக்கொள்ள, அவர்களது மகன் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டுள்ளான்.

இவர்கள் சென்ற கார் பின்னர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டுள்ளது. அப்போது யிரனுக்கு வலி மேலும் அதிகரிக்க, அவரது கணவர் வலியால் துடிக்கும் அவரது மனைவியை ஆசுவாசப்படுத்துவதற்காக, ஆட்டோ பைலட் மோடிற்கு காரை கொண்டுவந்து, மருத்துவமனைக்கு செல்ல உத்தரவிட்டுள்ளார். இதற்கு இன்னும் 20 நிமிடங்கள் ஆகும் என்பது போல் காரின் டேஸ்போர்டு காட்டியுள்ளது.

யிரன் ஷெர்ரியும் மருத்துவமனைக்கு செல்லும் வரையில் எப்படியாவது வலியை பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் பொறுக்க முடியாமல், இயக்கத்தில் இருந்த காருக்குள்ளேயே குழந்தையை பெற்றுள்ளார். பயணம் துவங்கிய போது காருக்குள் மூன்றாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, இந்த புதிய மனிதரின் வருகையினால் இடையில் நான்காக அதிகரித்துள்ளது.
பிறகு என்ன செய்வது என்றே புரியாமல் இருந்த கீட்டிங் ஷெர்ரி உடனடியாக தனக்கு தெரிந்த மருத்துவருக்கு போன் செய்து பிறகு என்ன செய்ய வேண்டும் என கேட்டறிந்துள்ளார். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க, யிரனை பின் இருக்கைக்கு அழைத்து செல்லாமல் முன் இருக்கையிலேயே அவருக்கும், குழந்தைக்கும் இடையே இருந்த தொப்புள் கொடியை வெட்டியுள்ளார் அவரது கணவர்.

தற்போது குழந்தை மேவ் லில்லி மற்றும் தாய் யிரன் ஷெர்ரி இருவரும் நலமாக உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் உதவி இல்லாமல் குழந்தையை பெற்றெடுப்பது கடினமான காரியமாகும். அதிலும் கார் போன்ற ஓர் குறுகிய பகுதிக்குள் அதனை காட்டிலும் கஷ்டம்.
யிரன் ஷெர்ரிக்கும் சரி, அவரது கணவருக்கும் சரி அந்த சமயத்தில் பல உழைப்புகள் தேவைப்பட்டிருக்கும். அதனை காட்டிலும், வேகமாக செயல்படும் அதே நேரத்தில் காரின் இயக்கத்தை பாதிக்காமல் இருப்பதும் முக்கியமானதாக அந்த சமயத்தில் அவர்களது மண்டைக்குள் ஓடியிருக்கும். ஏனெனில் தவறாக ஏதேனும் ஒரு பொத்தானையோ அல்லது ஆட்டோ பைலட் மோடிற்கு இடையூறாக ஏதாவது ஒன்றையோ செய்து இருந்தால், அது விபத்தில் சென்று முடியவும் வாய்ப்புள்ளது.

ஆனால் நல்ல வேளையாக அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த சம்பவம் நிச்சயமாக இவர்களுக்கு சாகும் வரையில் மறக்காது. பிறந்த குழந்தையிடம் வளர்ந்தபின் கூற ஒரு சுவாரஸ்யமான கதை இவர்களுக்கு கிடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு ஏன், டெஸ்லா காரிலேயே இயக்கத்தின்போது பிறந்ததால், அந்த குழந்தைக்கும் டெஸ்லா கார்களுக்கும் இடையே ஒரு பிணைப்பு காலம் முழுவதும் வரலாம்.

இந்த டெஸ்லா காரை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க விரும்புவதாக இந்த தம்பதியினர் பின்னர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்திற்கு ஏகப்பட்ட புகழ்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கிடைத்த வண்ணம் உள்ளன. அவற்றில் இந்த தம்பதியினர் நன்றியும் ஒன்றாக இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








