ஃபாஸ்டேக் வாயிலாக ரூ.60,000 திருட்டு.. என்ன டெக்னிக் யூஸ் பண்ணாங்க தெரியுமா? கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க!
டோல்கேட்டுகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகக் கூறி அறிமுகம் செய்யப்பட்டதே ஃபாஸ்டேக். இதனைக் கொண்டே சைபர் கிரைம் மோசடியாளர்கள் மூதாட்டி ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையை திருடி இருக்கின்றனர். இதற்காக அவர்கள் பயன்படுத்திய விநோத யுக்தி பற்றிய முழுமையான விபரத்தையே இந்த பதவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
சுங்க சாவடிகளில் எளிய முறையில் கட்டணம் வசூல் செய்வதற்காக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டதே ஃபாஸ்டேக் திட்டம். டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக நீண்ட காலமாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், அதைக் களையும் பொருட்டே மத்திய அரசு ஃபாஸ்டேக்கை அறிமுகப்படுத்தியது. வாகனங்கள் ஒவ்வொரு முறையும் டோல் கேட்டைக் கடக்கும்போது தானாகவே இந்த ஃபாஸ்டேக் டோலுக்கான கட்டணத்தைச் செலுத்தும்.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கான ஸ்கேன் கோடே ஃபாஸ்டேக் ஸ்டிக்கரில் இடம் பெற்றிருக்கும். இதை ஸ்கேன் செய்வதற்கான சென்சார்கள் டோல்கேட்டுகளில் இருக்கும். இவையே ஃபாஸ்டேகில் இருந்து கட்டணத்தை தானே எடுக்கும். டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டே இந்த சிஸ்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இது நொடிப் பொழுதில் கட்டணத்தைச் செலுத்தும் சிஸ்டம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிஸ்டத்தில் இருந்தே மோசடியாக பணம் களவு செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிர்ச்சிகரமான புகார் 81 வயதுமிக்க மூதாட்டியிடம் இருந்தே பெறப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பென்சன் டவுணில் வசித்து வருபவர் மேரி ஜான். இவருடைய ஃபாஸ்டேக் இணைக்கப்பட்ட வங்கி வாலட்டில் இருந்தே பணம் களவாடப்பட்டுள்ளது. ரூ. 60 ஆயிரம் பணம் சுரண்டப்பட்டிருப்பதாக மூதாட்டி தெரிவித்துள்ளார். முதலில் அவருடைய பேடிஎம் அக்கவுண்டில் இருந்து அடையாளம் தெரியாத வேறொரு வாகனத்தின் ஃபாஸ்டேக்கிற்கு ரீசார்ஜ் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து புகார் தெரிவிப்பதற்காக அந்த மூதாட்டி ஓர் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டிருக்கின்றார். இதற்கு பின்னரே அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக ரூ. 60 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 12ம் தேதி அன்று மேரிக்கு ஓர் குறுஞ்செய்தி வந்திருக்கின்றது. அதில் ஃபாஸ்டேக் பேலன்ஸ் அடையாளம் தெரியாத வாகனத்திற்கு பயன்படுத்தியிருப்பதாக செய்தி இடம் பெற்றிருந்தது. இதுகுறித்த புகார் அளிக்க தொடர்பு கொள்ளுமாறு அதே குறுஞ்செய்தியில் 01204456456 எனும் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த எண்ணை தொடர்புக் கொண்ட போதே மோசடி அரங்கேறியிருக்கின்றது. இந்த எண் மோசடியாளர்களின் எண் ஆகும். இதைத் தொடர்புக் கொண்டு புகார் தெரிவித்தபோதே நயவஞ்சமாக பேசி அந்த மோசடியாளர்கள் வங்கிக் கணக்கில் இருந்து 60 ஆயிரம் ரூபாயை சுருட்டி உள்ளனர். முதலில், தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட ஃபாஸ்ட் ரீசார்ஜ் கட்டணத்தை திரும்பி தருவதாக ஆசை வார்த்தை கூறிய அவர்கள், இதற்காக சில முக்கிய விபரங்கள் வேண்டும் என கூறியிருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே பேடிஎம் கணக்கின் அனைத்து விபரங்களையும் மூதாட்டிக் கொடுத்திருக்கின்றார். மோசடி நடக்க இருக்கின்றது என்பதை சிறிதும் உணராமல் அவர் முக்கிய தகவல்களை கொடுத்திருக்கின்றார்.
இதன் பின்னரே தொடர்ச்சியாக அவருடைய கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருக்கின்றது. முதலில் 12.20 மணி அளவில் ரூ. 39,999-ஐ மோசடி கும்பல் திருடி இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக ரூ. 2 ஆயிரம் வீதம் ஐந்து முறை வரை அவர்கள் எடுத்திருக்கின்றனர். இதோடு விடாமல் அடுத்ததாக மதியம் 1.20 மணி அளவில் ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 1,999 என திருடி இருக்கின்றனர். இதனால் கலங்கி நின்ற மூதாட்டி செய்வதறியாமல் தற்போது காவல்துறையின் உதவியை நாடியிருக்கின்றார். முதலில் வங்கியின் உதவியையே அவர் நாடி இருக்கின்றார்.
அங்கு யுபிஐ வாயிலாக இருவர்களின் கணக்குகளுக்கு இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. தஹமித் அன்சாரி மற்றும் புரசோத்தமா ஆகிய இருவர்களின் வங்கி கணக்கிற்கே பணம் செலுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே ஜேசி நகர் காவல்நிலையத்தில் மூதாட்டி புகார் தெரிவித்திருக்கின்றார். புகாரை அடுத்து வங்கி நிர்வாகம் தெரிவித்த இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மோசடிதாரர்களின் பினாமியாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவேதான் உங்களின் தனிப்பட்ட எந்த விபரத்தையும் முகம் தெரியாதவர்களுக்கு வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும், புதிய டெக்னிக்குகளை பயன்படுத்தி மோசடியாளர்கள் பணத்தை திருடி வருகின்றனர். குறிப்பாக, மோசடி கும்பல்கள் வயதான மற்றும் அப்பாவி மக்கள்களைக் குறி வைத்து இந்த மோசடி பின்னணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிக்கு ஆளாகும்போது உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது 112 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








