விமானத்திற்குள் ரொம்ப சூடாருக்கு... காற்று வாங்க இறக்கை மீது நடந்து ஷாக்காக்கிய பெண்...
சில மனிதர்கள் அவர்களது ஒழுக்கத்தாலும், வலிமையினாலும் நம்மை கவர்ந்துவிடுவர். ஆனால் சிலரோ கவன குறைவினால் அவர்கள் பயப்படுவது மட்டுமில்லாமல் நம்மையும் சேர்த்து பயப்பட செய்துவிடுவர். அதுபோன்ற ஒரு சம்பவத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

நம்மில் பலருக்கு விமானத்தில் செல்வதே கனவாக இருக்கும் நிலையில் துருக்கியை சேர்ந்த பெண் பயணி ஒருவர் விமானத்தின் இறக்கையின் மீது நடந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். இதுகுறித்து உக்ரைன் சர்வதேச விமான நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் இரு குழந்தைகளுக்கு தாயான பெண் பயணி ஒருவர் போயிங் 737-86என் விமானத்தின் அவசர கதவை திறந்து இறக்கையின் மீது நடந்துள்ளார். உள்ளே மிகவும் வெப்பமாக இருப்பதாக கூறி காற்றோட்டத்திற்காக வெளியே வந்த அவரை துருக்கியின் பொழுதுபோக்கு நிறைந்த நகரமான அண்டால்யாவில் இருந்து உக்ரைன் தலைநகர் கியேவிற்கு கொண்டு சென்று தரையிறக்கியதாக கூறப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள இதுகுறித்த வீடியோவில் அந்த பெண் மிக எளிமையாக வெளியில் தரையில் நடப்பதுபோல் விமானத்தின் இறக்கையில் நடந்து செல்கிறார். சிறிதுநேரம் வெளியே நின்றபின் மீண்டும் அவராகவே அவசர கதவு வழியாக உள்ளே சென்றுவிடுகிறார்.

இந்த விமான பயணத்தை அவர் தனியாக மேற்கொள்ளவில்லை, அவரது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் மேற்கொள்கிறார் என்பதும், குழந்தைகளின் பள்ளி திறப்பதற்கு முன்னதாக குடும்ப விடுமுறைக்காக தான் அவர்களது இந்த பயணம் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விமானம் நின்ற பிறகே அந்த பெண் இந்த சர்க்கஸ் வித்தையை நிகழ்த்தியுள்ளார். எதன் அடிப்படையில் கூறுகிறோம் என்றால், அவருடன் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், விமானம் தரையிறங்கியது, கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் விமானத்தை விட்டு இறங்கிவிட்டனர்.

அப்போது நான் பார்க்கையில், அந்த பெண் விமானத்தின் வால் பகுதியில் இருந்து அவசரகால வெளியேறும் வழி வரையில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் நடந்து கொண்ட்டிருந்தார். பிறகு அவசரகால கதவை திறந்தவர், வெளியே வந்துவிட்டார்.

அந்த சமயத்தில் நானும் அவர்களது இரு குழந்தைகளும் விமானத்திற்கு வெளியே வந்து கொண்டிருந்தோம். சரியாக எனக்கு அடுத்து நின்று கொண்டிருந்த அவரது குழந்தைகள் மிகவும் ஆச்சிரியப்பட்டு, ‘எங்களது அம்மா' என அவரை பார்த்து கூறினார்கள் என தெரிவித்தார்.

இந்த காட்சியைக் கண்டதும், விமானி போரிஸ்பில் விமான நிலையத்தின் எல்லைக் காவலர்கள், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியோரை வரவழைத்தார். விமானப் பாதுகாப்பு விதிகள் மற்றும் உள்நோக்கத்தின் நடத்தையை முழுவதுமாக மீறியதற்காக விமான நிறுவனங்கள் அந்த பெண்மணியை "தடுப்புப்பட்டியலில்" (black list) சேர்த்துள்ளதாக டைம்ஸ் நவ் செய்திதளம் தெரிவிக்கிறது.

அதேநேரம் சோதனைகள் மூலம் அவர் குடிபோதையிலோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியோ இல்லை என்பது உறுதியானது. உக்ரைன் சர்வதேச விமான நிறுவனம் அனைத்து விதங்களிலும் விசாரித்தபின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முனையம் D-யின் வாயில் 11-க்கு அருகில் நின்ற பிறகு பிஎஸ் 6212 அன்டால்யா-கியேவ் விமானத்தின் பயணி ஒருவர் விமானத்தின் அவசரகால வெளியேறலை சட்டவிரோதமாக திறந்து, அதன் இறக்கையை நோக்கி சென்றுள்ளார்.

பயணி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறைக்காக இந்த பயணத்தை மேற்க்கொண்டிருந்தார். தலைமை விமானி உடனடியாக போரிஸ்பில் விமான நிலையத்தின் விமானப் பாதுகாப்பு, எல்லை சேவை, போலிஸ் மற்றும் மருத்துவ மையத்தை வரவழைத்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அங்கிருந்த போலீஸார் மற்றும் மருத்துவர்களிடம் இருந்து இதுகுறித்து போதுமான பதில் கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நிகழக்கூடியவை தான், இருப்பினும் இவ்வாறான செயல்கள் நிச்சயம் தண்டனைக்குரியவையே.


Click it and Unblock the Notifications








