சிங்கப்பெண்ணே.... ஆண்கள் வசம் இருந்த ஆட்டோமொபைல் துறையில் தடம் பதிக்கத் துவங்கிய பெண்கள்...
ஆட்டோமொபைல் துறையில் பெரும்பாலும் ஆண்களே பணியாற்றிய நிலையில் தற்போது பெண்களும் கணிசமாக அதிகமாகி வருகின்றனர். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஆட்டோமொபைல் துறை இதுவரை ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையாகவே இருந்து வருகிறது. ஆட்டோமொபைல் தயாரிப்பு முதல் விற்பனை சர்வீஸ் என பெரும்பாலும் ஆண்கள் தான் இருப்பார்கள். பெண்களின் பங்களிப்பு குறைவாக இருந்து வந்தது. அப்படியே இருந்தாலும், குறிப்பிட்ட பணிகளுக்காக மட்டுமே பெண்கள் இருந்தனர்.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பெண்கள் ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்யத் தயாராகிவிட்டனர். நிறுவனங்களும் ஆண் பெண் இடையே இருக்கும் வேறுபாட்டைக் களையத் தயாராகிவிட்டது. இதற்கு முதற்படியாக ஓலா நிறுவனம் தங்கள் ஆலைகளை முழுவதும் பெண்களை வைத்து இயக்கிய துவங்கியது.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ், ஹீரோ மோட்டாகார்ப், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களும் தற்போது தங்கள் நிறுவனங்களில் பாலின பாகுபாட்டை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 6 இடங்களில் தனது தயாரிப்பு ஆலைகளை நிறுவி வாகன உற்பத்தி செய்து வருகிறது.

தற்போது அந்த 6ஆலைகளிலும் சேர்ந்து 3000 பெண்கள் பணியில் இருக்கின்றார்கள். எல்லா விதமான பணிகளுக்கும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிய ரக கார் தயாரிப்பில் துவங்கி, ஹெவி கமர்ஷியல் வாகனம் தயாரிப்பு வரை பெண்கள் பணியில் உள்ளனர்.

இது குறித்து டாடா நிறுவனத்தின் தலைமை மனித வள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரி ரவீந்திகுமார் கூறும் போது : "டாடா நிறுவனத்தில் பெண்களைப் பல வதமான பொறுப்புகளுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். தற்போது நாங்கள் நினைப்பதை விடக் குறைவான பெண்களே பணியில் உள்ளனர். இந்நிலையில் புனேவில் இயங்கிவரும் எங்கள் ஆலையை முற்றிலும் பெண்களைக் கொண்டு இயங்க வைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது 1100 பெண்கள் அங்கு பணியாற்றுகின்றனர். மேலும் 1500 பெண்களை அடுத்த 2 மாதங்களில் பணியில் சேர்க்கவுள்ளோம். " எனக் கூறினார்.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களில் 50 சதவீதம் பெண்களாக இருக்கவேண்டும் என முடிவு செய்துள்ளனர். இந்த டார்கெட்டை அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்கும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது அந்நிறுவனத்தில் 34 சதவீதம் மட்டுமே அதாவது 2000 பெண்கள் மட்டுமே அந்நிறுவனம் குஜராத்தில் நடத்தி வரும் ஆலையில் பணியில் உள்ளனர்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் மொத்தம் 1500 பெண்கள் பணியில் உள்ளனர். அதாவது ஒட்டு மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 9.3 சதவீதம் பேர் பெண்களாக இருக்கின்றனர். இதை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தங்களது டோமினார் 400, பல்சர் ஆர்எஸ் 200 ஆகிய பைக்களை புனேவில் உள்ள சக்கன் ஆலையில் தயாரிக்கின்றனர். இந்த தயாரிப்பில் முழுவதும் பெண்களே ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனம் தங்கள் ஆலையில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 மடங்களாக உயர்த்தியுள்ளது. 2014ம் நிதியாண்டில் 148 பெண்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 667 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பெண்கள் பணியாற்றும் பகுதியில் தயாரிப்புகளும் அதிகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








