இந்த வீடியோவ பார்த்தா அடுத்து உங்க பைக்கை ரோட்ல பார்க் பண்ணவே மாட்டீங்க! ஈஸியா தீ வச்சுட்டாங்க!
பார்க்கிங் செய்யப்பட்ட பைக்கில் தீ வைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பைக்கிற்கு தீ வைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவர் ஏன் தீ வைத்தார் என்பதற்கான விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
தென்கிழக்கு டில்லியில் உள்ள ஜெய்ட்பூர் பகுதியில் சமீபத்தில் ஒரு பைக் தானாக தீ பிடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஒரு பெண் அந்த பைக்கை வேண்டுமென்றே தீ வைத்தது தான் காரணம் எனத் தெரியவந்ததுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

இந்த சிசிடிவி காட்சிகளின் படி ஒரு பைக் இரவு நேரத்தில் ரோட்டில் பார்க் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் அந்த பக்கமாக வருகிறார். அவர் பார்க்கிங் செய்யப்பட்ட பைக்கின் அருகே செல்கிறார். பைக்கின் கீழே அமர்ந்து ஏதோ செய்கிறார். அதன் பின் ஒரு அடி பின்னே சென்று நெருப்பை பற்ற வைத்து பைக்கில் வீசுகிறார், பைக் தீ பிடித்து எரிகிறது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விடுகிறார்.
இவர் பைக்கில் தீ பற்ற வைத்ததைப் பார்க்கும் போது இவர் பைக்கின் அருகே அமர்ந்து அதன் பெட்ரோலை எடுத்து பைக்கில் மீது தெளித்துள்ளது தெரிகிறது. இது சிசிடிவி காட்சியில் சரியாகத் தெரியவில்லை என்றாலும் இவர் நெருப்பை பற்ற வைத்தவுடன் பைக் தீ பிடித்து எரிந்ததைப் பார்க்கும் போது இவர் இதைத் தான் செய்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கு பைக்கில் தீ வைத்துவிட்டுத் தப்பியோடிய இந்த பெண் வேறு ஒரு பகுதிக்குச் சென்று வேறு ஒரு பைக்கில் இதையே செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்பொழுது அப்பகுதியில் உள்ள மக்களிடம் அவர் மாட்டிக்கொண்டார். மக்கள் அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த பெண் ஏன் பைக்கிற்கு தீ வைத்தார் என்ற உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பெண் சுலபமாக பைக்கிலிருந்து பெட்ரோலை வெளியே எடுத்தது போல் கார்பரேட்டர் இருக்கும் பைக்குகளிலிருந்து எளிதாக பெட்ரோலை வெளியே எடுக்க முடியும். கார்பரேட்டர் உள்ள பைக்குகளில் காரேட்டரிலிருந்து வெளியே வரும் பெட்ரோல் இன்ஜினிற்கு செல்ல ஃபீடர் பைப் ஒன்று இருக்கும். இது பிளாஸ்டிக்-ரப்பர் பைப் தான் எளிதாகக் கழட்டி மாட்ட முடியும். பைக்கின் சாவியில்லாமலேயே இதைக் கழட்டி மாட்டலாம்.

பலர் இதன் மூலம் தான் ரோட்டில் நிற்கும் பைக்கில் பெட்ரோலை திருடுகின்றனர். ஆனால் நவீனக் காலத்தில் வரும் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் பைக்குகளில் இது சாத்தியம் கிடையாது. அந்த ரக பைக்குகளில் பெட்ரோல் டேங்கில் உள்ள பெட்ரோலை வெளியே எடுப்பது இவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இந்த வீடியோவில் இந்த பெண் தீ வைத்தது கார்பரேட்டர் கொண்ட ஒரு பைக்காகத் தான் இருக்க வேண்டும்.
இப்படியாக ரோட்டில் நிற்கும் பைக்குகளை தீ வைக்கும் சம்பவம் இது ஒன்றும் புதிதல்ல டில்லியிலேயே கடந்த 2022ம் ஆண்டு போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் டெலிவரி பாய் ஒருவர் தன் பைக்கிற்கு தீ வைத்த வீடியோ வைரலாக பரவியது. சமீபத்தில் டில்லியில் 23 வயது இளைஞர் மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் நின்ற எர்டிகா காருக்கு தீ வைத்தார். அந்த தீ அந்த காரை மட்டுமல்லாமல் அங்கிருந்த வேறு சில கார்களிலும் பரவி 20 கார்கள் தீக்கிரையாக்கின.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் வாகனங்களை பொது இடத்தில் மற்றவர்கள் சுலபமாக நெருங்கும்படியாக பார்க்கிங் செய்தால் இப்படியான ஆபத்துக்கள் வாகனங்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் எப்பொழுதும் வாகனத்தைப் பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்ய வேண்டும். இதனால் தேவையில்லாமல் உங்கள் வாகனம் சேதமாவதைத் தடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications









