ரயில்ல பயணிக்கிறது ரொம்ப சந்தோஷம்... ஆனால், ஓட்டுறது ரொம்ப கஷ்டம்... !!

By Saravana

ரயில் பயணங்கள் என்றாலே ஆறிலிருந்து அறுபது வரை என அனைவருக்கும் சந்தோஷத்தை தருவதாக அமைகிறது. ஆனால், அந்த ரயிலை ஓட்டுவது என்பது... ஆம், நம் நாட்டிலேயே மிக கடினமான பணிச்சூழலில்தான் நம் ரயில் ஓட்டுனர்கள் பணிபுரிகின்றனர். பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், பிற போக்குவரத்து சாதனங்களை காட்டிலும் ரயில் எஞ்சினை இயக்குவதும், அந்த பணிச்சூழலும் மிக கடினமானதாகவே இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 25 மில்லியன் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும், 3 மில்லியன் டன் சரக்குகளை கொண்டு சேர்ப்பதற்கும் இந்த லோகோ பைலட்கள்தான் பொறுப்பு ஏற்றுள்ளனர். ஆனாலும், ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவரின் சந்தோஷத்திற்காக சம்பளம் என்ற ஒன்றைத்தவிர்த்து, பல விஷயங்களில் அவர்கள் தங்களது பணியில் சமரசங்களை செய்துகொண்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களது பணிச்சூழல் குறித்த நீங்கள் கேட்டிராத, தெரிந்திரா விஷயங்களை இங்கே காணலாம்.

பெரும் பொறுப்பு

பெரும் பொறுப்பு

ரயில்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு 25 மில்லியன் பயணிகளை பாதுகாப்பாக பயணிப்பதற்கும், 3 டன் மில்லியன் சரக்குகளை பத்திரமாக கொண்டு சேர்ப்பதிலும் ரயில் எஞ்சின் ஓட்டுனர்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

ஓட்டுனர்கள் எண்ணிக்கை

ஓட்டுனர்கள் எண்ணிக்கை

இந்திய ரயில்வேயில் 9,213 ரயில் எஞ்சின்கள் உள்ளன. சரக்கு, பயணிகள் ரயில்கள் என இதனை இயக்குவதற்கு 70,000 லோகோ பைலட்டுகள் என்று அழைக்கப்படும் ரயில் எஞ்சின் ஓட்டுனர்கள் பகுதி நேர முறையில் பணிபுரிகின்றனர்.

நேர்மையான பணியாளர்கள்

நேர்மையான பணியாளர்கள்

இந்திய ரயில்வே துவங்கப்பட்டு 163 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை ஒரு லோகோ பைலட் கூட ரயிலை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் விபத்தில் சிக்க வைத்ததில்லை. ஆனால், பலரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில், விபத்துக்களில் தங்களது இன்னுயிரை ஈந்த ரயில் எஞ்சின் ஓட்டுனர்கள் இங்கு ஏராளம்.

பணி நேரம்

பணி நேரம்

7 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை பணிபுரிகின்றனர். அதாவது 72 மணி நேர பணி 30 மணி நேர ஓய்வு என்ற விகிதத்தில் ஒவ்வொரு லோகோ பைலட்டுகளுக்கும் பணி நேரம் பிரித்தளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பணி நேரத்திற்கு பின் ரயில் எஞ்சின் ஓட்டுனர்களுக்கு ஓய்வு நேரம் ஒதுக்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், ரயில் தாமதமானால், அந்த தாமத நேரம், ஓய்வு நேரத்தில் கழிக்கப்பட்டுவிடும்.

இதுவும் கஷ்டம்...

இதுவும் கஷ்டம்...

தொடர் பணியால் லோகோ பைலட்டுகள் பலர் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் மிக குறைவு. பலர் வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கு வரும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸி இல்லை...

ஈஸி இல்லை...

ரயில் எஞ்சின் ஓட்டுனர் பணியை பலர் விரும்புகின்றனர். அவர்களுக்காக சில விஷயங்களை காணலாம். ஏற்கனவே 10வது 12ம் வகுப்பு படித்தவர்கள் உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது டிப்ளோமோ படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமில்லை, உடல் தகுதி மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவதும் அவசியம்.

பயிற்சி

பயிற்சி

அனுபவமிக்க லோகோ பைலட்டுடன் உதவி லோகோ பைலட் 60,000 கிமீ தூரம் வரை பணிபுரிய வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதன் பின்னர் யார்டுகளிலிருந்து ரயில் நிலையத்திற்கு எஞ்சினை இழுத்து வந்து நிறுத்தும் ஷன்ட் பைலட்டாக பணி உயர்வு பெறுவர்.

பணி உயர்வு

பணி உயர்வு

அதன் பிறகு சரக்கு ரயல்களில் லோகோ பைலட்டாக பணியமர்த்தப்படுவர். அதன் பின்னரே, பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டாக பதவி உயர்வு அல்லது ரயிலை இயக்குவதற்கான பொறுப்பு கொடுக்கப்படும். இதற்கு மிகுந்த பொறுமையும், அர்ப்பணிப்பு உணர்வும் இருக்க வேண்டியது அவசியம்.

ரொம்ப கஷ்டம்

ரொம்ப கஷ்டம்

சரக்கு ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கு குறிப்பிட்ட பணி நேரம் இருக்காது. எனவே, அவர்களது பணி நேரம் வரையறுக்கப்படாததாக இருக்கிறது. இதனால், பல மணி நேரம் தொடர்ந்து பணியில் இருக்கும் நிலை ஏற்படுகிறது.

பொறுப்பு

பொறுப்பு

ரயில்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தை சென்றடையும் பொறுப்பு லோகோ பைலட்டுக்கு உள்ளது. தாமதமானாலும், விபத்துக்கள் நேரிட்டாலும் அதற்கு முதல் பொறுப்பு ஏற்க வேண்டியவர் லோகோ பைலட்தான். நல்ல உடல் தகுதி, அவசர காலத்தை சமாளிக்கும் திறன், சமயோஜிதமாக முடிவு எடுக்கும் பொறுப்பு போன்றவையும் லோகோ பைலட்டுகளுக்கு இருக்க வேண்டும். குறிப்பேட்டையும் அவர்கள் தவறாமல் கையாள வேண்டும்.

ரிப்பேர்

ரிப்பேர்

பயணத்தின்போது ரயில் எஞ்சினில் ஏற்படும் சிறிய பழுதுகளை நீக்குவதற்கும் லோகோ பைலட்டுகளுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இதையெல்லாம்விட, கடும் வெயில், கடுமையான குளிர், மழை போன்ற அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் ரயிலை பாதுகாப்பாக இயக்க வேண்டியிருப்பதுடன், அந்த சீதோஷ்ண நிலைகளை உடலளவிலும் தாங்கும் உடல் தகுதியும் தேவை.

ஆள் பற்றாக்குறை

ஆள் பற்றாக்குறை

ரயில்வே துறையில் 20 சதவீதம் அளவுக்கு லோகோ பைலட் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், தற்போதுள்ள லோகோ பைலட்டுகளுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கிறது. இதனையும் அவர்கல் சமாளித்து வருகின்றனர்.

கோடை கால கஷ்டம்...

கோடை கால கஷ்டம்...

கோடை காலத்தில் எஞ்சின் சூடு கேபினை தாக்கும். இதனால், ரயில் எஞ்சினின் கேபினில் வெளிப்புற வெப்பநிலையை காட்டிலும் கூடுதலாக இருக்கும். அதாவது, வெளிப்புற வெப்பநிலை 38 டிகிரி செல்சியம் இருந்தால், ரயில் எஞ்சின் கேபினில் 45 டிகிரி முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி எடுக்குமாம். இது மிகப்பெரிய கொடுமை. குளுகுளு வசதி இருந்தால் ஓரளவு சமாளிக்க முடியும்.

அதுக்குகூட போக முடியாது...

அதுக்குகூட போக முடியாது...

ரயில் எஞ்சின்களில் கழிவறை வசதி கிடையாது. இதனால், பல மணி நேரத்திற்கு சிறுநீர் கழிக்கக்கூட முடியாத நிலையில் அவர்கள் பயணிக்கின்றனர். சிலவேளைகளில் ரயிலின் பின்புறத்தில் உள்ள ரயில் பெட்டிக்கு சென்று ஆசுவாசப்படுத்திக் கொள்வதுடன் சரி. அதுவும் குறித்த நேரத்தில் இறங்கி செல்ல முடியாது.

அப்பாடா...

அப்பாடா...

கிட்டத்தட்ட 163 ஆண்டுகள் கழித்து பயோ- டாய்லெட் பொருத்தப்பட்ட முதல் ரயில் எஞ்சினை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி வைத்துள்ளார். இதற்கு ரயில் எஞ்சின் ஓட்டுனர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்த டாய்லெட் வசதியுடன் தற்போது முதல் ரயில் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

டாய்லெட் கொடுக்கப்பட்டாலும், அதனை நினைத்த மாத்திரத்தில் பயன்படுத்த முடியாது. இதற்காக, அந்த கழிவறையின் கதவு கம்ப்யூட்டர் புரொகிராம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ரயில் எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போது கழிவறை கதவுகள் திறக்காது. நின்று கொண்டிருக்கும்போது மட்டுமே கதவு திறக்கும். கழிவறை உள்ள லோகோ பைலட் இருந்தால், ரயில் எஞ்சின் பிரேக்கை ரிலீஸ் செய்ய இயலாது. இதனால், வெளியாட்கள் அல்லது மற்றொரு ஓட்டுனர் ரயிலை இயக்க முடியாது. இதற்காக, கதவுகளிலும், கழிவறையிலும் பல சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

 மன அழுத்தம்

மன அழுத்தம்

சாப்ட்வேர் துறையில் பணிபுரிவோர் மட்டுமே மன அழுத்தத்தில இருப்பது போன்ற மாயை உள்ளது. ஆனால், இதுபோன்ற அரசுப் பணிகளில் பணிபுரியும் பலருக்கு வெளியில் சொல்ல முடியாத பல பிரச்னைகளுடனே, நமக்கு இன்முகத்துடனும், பொறுப்புடன் சேவையாற்றி வருவதை மறுக்க இயலாது. ஆம், ரயில் எஞ்சின் ஓட்டுனர்களில் பெரும்பாலானோர் கடும் மன அழுத்தத்திலும், உளைச்சலிலும் பணிபுரிவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் எஞ்சின் கேபினில் குளுகுளு வசதியும், கழிவறையும் அமைத்துக் கொடுத்தால், அவர்களது மன அழுத்தம் குறைய வாய்ப்பாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 9, 2016, 12:30 [IST]
English summary
Work Life Of Indian Loco Pilots.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+