மெர்சிடிஸ் காரை வாங்கும் திட்டத்தில் இருந்த பாக்ஸிங் வீராங்கனை - மஹிந்திரா சொன்ன அந்த ஒரு விஷயம்...
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி வாகனத்தை பெற்றதன் காரணமாக மெர்சிடிஸ் கார் ஒன்றை வாங்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் தெரிவித்துள்ளார். யார் அவர்? என்பது குறித்த விபரங்களையும், மஹிந்திரா தார் வாகனத்தை பற்றியும் இனி பார்க்கலாம்.
மஹிந்திரா தார் வாகனத்திற்கு நமது நாட்டில் தனி ரசிகர் கூட்டம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. விலை சற்று அதிகம் என்பதால் நிறைய பேரால் இந்த தரமான மஹிந்திரா வாகனத்தை வாங்க முடிவதில்லை என்றாலும், வாங்கிய சிலரையும் விரைவாகவே தார் கவர்ந்துவிடுகிறது. இந்த வரிசையில் புதியதாக இணைந்திருப்பவர், இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை நிகாட் ஸரீன் (Nikhat Zareen) ஆவார்.

தலைநகர் டெல்லியில் நேற்று (மார்ச் 26) உலக குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட நிகாட் ஸரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் வியாட்நாம் நாட்டை சேர்ந்த நிகுயென் தி டம் வீராங்கனையை தோற்கடித்து பட்டத்தை இந்தியாவிற்கு வாங்கி தந்துள்ளார். நிகாட் ஸரீனுக்கு இது 2வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் ஆகும். மேலும் இந்த சாம்பியன்ஷிப் பட்டத்துடன் ரூ.1 இலட்சம் பரிசுத்தொகையும் நிகாட் ஸரீனுக்கு வழங்கப்பட்டது.
இந்த பரிசுத்தொகையை பெற்ற போது, இந்த தொகையில் மெர்சிடிஸ் காரை வாங்க திட்டமிட்டுள்ளதாக நிகாட் ஸரீன் தெரிவித்தார். ஆனால் அதன்பின் மஹிந்திரா நிகாட் ஸரீனுக்கு தார் வாகனம் ஒன்றை பரிசாக வழங்க உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து, நிகாட் ஸரீன் தனது மெர்சிடிஸ் கார் திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தார். மேலும் இந்த ரூ.1 இலட்சம் பரிசுத்தொகையை இஸ்லாமியர்களின் புனித பயணமான உம்ராவுக்கு தனது பெற்றோர்களை அனுப்ப செலவிட உள்ளதாகவும் நிகாட் ஸரீன் கூறியுள்ளார்.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சமீப ஆண்டுகளாக, நாட்டிற்கு புகழை பெற்று தந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தனது தார் வாகனத்தை பரிசாக வழங்கி வருகிறது. குறிப்பாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 2022 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு தார் வாகனங்களை மஹிந்திரா வழங்கியது. இதற்கு முன்பாக, 2021ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைபற்றிய இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கும் தார் வழங்கப்பட்டது.
இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக களம் கண்ட 6 இளம் வீரர்களுக்கு 6 தார் வாகனங்களை மஹிந்திரா வழங்கியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இவர்களை தொடர்ந்து தற்போது குத்துச்சண்டை வீராங்கனை நிகாட் ஸரீனும் மஹிந்திரா தார் வாகனத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து நிகாட் ஸரீன் அளித்துள்ள பேட்டியில், "இதை பற்றி நான் நினைத்து பார்க்கவே இல்லை. கடந்த முறை நான் மெர்சிடிஸ் கார் ஒன்றை பெற உள்ளதாக தெரிவித்து இருந்தேன்.

ஆனால் தார் வாகனத்தை நான் பரிசாக பெற்றுள்ளதால், மெர்சிடிஸ் காரை வாங்க வேண்டாம் என தற்போது யோசித்து வருகிறேன். ரம்ஸான் நடைபெற்று வருவதால், எனது பெற்றோர்களை உம்ராவுக்கு அனுப்ப விரும்புகிறேன்" என தெரிவித்தார். மஹிந்திரா இதுகுறித்து, "மஹிந்திரா வலிமைமிக்க பாக்ஸிங் ஐகானுக்கு வாழ்த்துக்கள். இவரது மகத்தான சாதனைக்கு எங்களது பாராட்டுகளாக பிராண்டின் புதிய தார் டோக்கன் செய்யப்பட்டுள்ளது" என தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறு நாட்டிற்கு பெருமை பெற்ற தந்த விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கு தனது பாராட்டை தனது தயாரிப்புகளின் மூலமாக மஹிந்திரா தெரிவித்து வருகிறது. இவ்வாறான செயல்கள் மஹிந்திரா நிறுவனத்தின் மீது மக்களுக்கு ஓர் நல்ல கண்ணோட்டத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பிராண்டின் மதிப்பையும் நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும்.


Click it and Unblock the Notifications