எலக்ட்ரிக் வாகனங்களை நம்பி வாங்கலாம் போலயே!! எல்லாரும் இவி -ஐ நோக்கி தான் போறாங்க - உலகளவில் இதே நிலை தான்!
உலக எலக்ட்ரிக் வாகன தினம் (World EV Day) ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று, இந்த வருடமும் வருகிற செப்.9ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை முன்பை விட 50% அதிகரித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
நம் இந்தியா மட்டுமின்றி, உலகமே எலக்ட்ரிக்கை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. இதனால் நமது எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை நம்பியே இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. உண்மையில், அத்தகைய நிலையை நாம் வேகமாக எட்டி வருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனை வெளிக்காட்டும் வகையில், உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை நடப்பு 2023ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் (ஏப்ரல் -ஜூன்) 50% வளர்ச்சிக் கண்டுள்ளதாக செய்திகள் புள்ளி விபரங்களுடன் வெளிவந்துள்ளன. 50% என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அடைந்திருக்கும் வளர்ச்சி ஆகும். அதாவது, 2022 ஏப்ரல்- ஜூன் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல்- ஜூனில் 50% அதிக எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுவதும் வாங்கப்பட்டுள்ளன.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், 2022 ஏப்ரல்- ஜூனில் உலகளவில் விற்பனையான எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையில் பாதி இந்த 2023இன் 2ஆம் காலாண்டில் கூடுதலாக விற்பனையாகி உள்ளது. உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தை என்றால் அது சீனா தான். எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையிலும் நம்பர் ஒன் இடத்தில் சீனா உள்ளது.

ஆனால், மற்ற முன்னணி நாட்டு சந்தைகளுடன் ஒப்பிடுகையில், சீனாவில் உள்நாட்டு எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அடையும் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. அதாவது, உலகின் எந்தவொரு நாட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஆனது வளர்ச்சியை கண்டு வருகிறது. சீனாவிலும் அவ்வாறான நிலைமை தான். ஆனால் சீனாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனை அடையும் வளர்ச்சியின் வேகம் இந்த 2023ஆம் ஆண்டின் கடந்த 2ஆம் காலாண்டில் சற்று குறைந்துள்ளது.
எந்த அளவிற்கு என்றால், கடந்த 3 வருடங்களில் இந்த 2023ஆம் ஆண்டில்தான் 2ஆம் காலாண்டில் வழக்கத்தை விட இவி விற்பனை வளர்ச்சி சீனாவில் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, சீன இவி நிறுவனங்களால் உள்நாட்டில் மட்டுமே சந்தையை விரிவாக்கம் முடிவதாகவும், வெளிநாடுகளில் பெரியதாக விரிவாக்கம் செய்ய முடிவதில்லை என்பதாகும்.

இருப்பினும், உலகளவில் விற்பனையாகும் மொத்த எலக்ட்ரிக் வாகனங்களில் சுமார் 56 சதவீத வாகனங்கள் சீன இவி நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுபவை என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சீன ஆராய்ச்சி ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது, "பிஒய்டி ஆட்டோ, ஜிஏசி குழுமம் மற்றும் கீலே ஹோல்டிங்ஸ் ஆகியவை கடந்த காலாண்டில் உலகின் முதல் 5 எலக்ட்ரிக் பயணிகள்-வாகன தயாரிப்பு நிறுவனங்களில் இடம் பிடித்துள்ள 3 சீன இவி நிறுவனங்களாகும்.
மேற்கத்திய நாடுகளின் இவி நிறுவனங்களின் பெயர்கள் இல்லை. அவர்கள் தங்களது பெரும்பாலான கார்களை உள்நாட்டிலேயே விற்கின்றனர்" என்றார். இவர் கூறுவதை போல், மேற்கத்திய இவி நிறுவனங்கள் உலகின் பெரும் சந்தைகளான சீனா மற்றும் இந்தியாவில் தங்களது எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய விரும்பவில்லை. இதற்கு காரணம், அவை எலக்ட்ரிக் உடன் சேர்ந்து கார்களின் தரத்தையும் அதிரடியாக உயர்த்த முயற்சிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். மொத்த உலகமே எலக்ட்ரிக்கிற்கு மாறி வருவதால், இதனை பயன்படுத்தி கார்களை லக்சரி தரத்தில் உருவாக்கி அதிக விலையில் விற்கும் முயற்சியில் மேற்கத்திய நாட்டு இவி நிறுவனங்கள் (டெஸ்லாவை தவிர்த்து) செயல்பட்டு வருகின்றன. ஏனெனில், இதன் மூலமாக முதலீடுகள் அதிகமாகுவது மட்டுமின்றி, அதற்கேற்ப வணிகமும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









