உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை: சுவிட்சர்லாந்தில் திறக்கப்படுகிறது!
ஆல்ப்ஸ் மலையை குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு நெருக்கமாக நடந்த பணிகள் தற்போது நிறைவு பெற்று இந்த பாதை திறக்கப்படுகிறது.
இந்த ரயில் பாதை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் என்பதோடு, இந்த வழிதடத்தால் பயண நேரமும் குறையும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆல்ப்ஸ் மலையில்..
ஆல்ப்ஸ் மலைத் தொடரில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், ஸூரிச் மற்றும் மிலன் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 40 நிமிடங்கள் வரை குறையும்.

பணிகள்
1947ம் ஆண்டிலேயே இந்த ரயில் பாதைக்கான ஸ்கெட்ச் போடப்பட்டது. இந்தநிலையில், பல தாமதங்களுக்கு பின் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி துவங்கியது.

சவால்கள்
மிக கடினமான பாறைகள் கொண்ட இந்த மலையில் நாள் ஒன்றுக்கு 100 அடி தூரம் குடைந்து இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் 28.2 மில்லியன் டன் பாறைகள் குடைந்து வெளியே எடுக்கப்பட்டிருக்கின்றன.

நீளம்
இந்த சுரங்க ரயில் பாதை 57 கிமீ நீளம் கொண்டது. கோதர்டு பேஸ் டனல் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், ஆல்ப்ஸ் மலையிலுள்ள கோதர்டு சிகரத்தின் உச்சியிலிருந்து 2,300 மீட்டருக்கு கீழே, அதாவது 7,545 அடிக்கு கீழாக இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வேகம்
இது மலைகள் சூழ்ந்த இடமாக இருந்தாலும், இந்த சுரங்கப் பாதை சமதளமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்த சுரங்கத்தில் செல்லும் ரயில் மணிக்கு 249 கிமீ வேகத்தில் இயக்க முடியும். இந்த சுரங்கப்பாதையை ரயில்கள் வெறும் 20 நிமிடத்தில் கடந்து விடும்.

வழித்தடம்
ஆல்ப்ஸ் மலையின் ஊடாக பயணிக்கும் ஸூரிச் - மிலன் இடையிலான இந்த ரயில் வழித்தடத்தில் 250 பாலங்களும், 7 சுரங்கப்பாதைகளும் அமைந்துள்ளன. தற்போது இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் 4 மணி நேரமாக உள்ளது. மற்றொரு சுரங்கப்பாதையிலும் பணிகள் நிறைவடைந்த பின், இந்த பயண நேரம் 2 மணி 45 நிமிடங்களாக குறையும்.

திறப்பு
வரும் ஜூன் 1ந் தேதி இந்த சுரங்க ரயில் பாதை திறக்கப்பட உள்ளது. முதலில் சோதனை ஓட்ட ரயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு டிசம்பர் 11ந் தேதியிலிருந்து பயணிகளுடன் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ரயில் இயக்கம்
இந்த ரயில் பாதை நாள் ஒன்றுக்கு 260 சரக்கு ரயில்களையும், 65 பயணிகள் ரயில்களையும் கையாளும் கட்டமைப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கட்டுமான செலவு
இந்த சுரங்க ரயில் பாதையை அமைப்பதற்கு 10.6 பில்லியன் யூரோ செலவிடப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா மற்றும் பொருளாதார ரீதியில் இந்த வழித்தடம் மிகுந்த முக்கியத்தும் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications








