இதுதான் உலகின் ஆகச்சிறந்த தனிநபர் விமானம்... உரிமையாளர் பெயர் ரகசியம்!
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த, விசாலமான இடவசதியுடன் கட்டமைக்கப்பட்ட போயிங் தனிநபர் விமானம் பார்ப்போரை வியக்க செய்கிறது. வர்த்தக பயன்பாட்டில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் அடிப்படையில்தான் இந்த தனிநபர் விமானம் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை தயாரான தனிநபர் ஜெட் விமானங்களிலேயே மிக மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த விமானத்தின் படங்கள் மற்றும் விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

சாதாரணமாக 240 முதல் 335 பயணிகள் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தையே தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்கள் செய்துள்ளனர்.

இந்த விமானத்தில் 40 விருந்தினர்கள் பயணிக்க முடியும். அவர்களுக்கான அனைத்து வசதிகளும், பணியாளர்களுக்கான வசதிகளும் உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த கெஸ்ட்ரல் ஏவியேஷன் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம்தான் இந்த விமானத்தை தயாரித்துள்ளது. பிற வடிவமைப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருக்கிறது.

ட்ரீம்ஜெட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய தனிநபர் விமானத்தை வடிவமைக்கும் பணிகளை ஆடம்பர படகு மற்றும் விமானங்களை வடிவமைத்து தருவதில் புகழ்பெற்ற பியரிஜீன் என்ற நிறுவனம் மேற்கொண்டது.

ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் இருப்பது போன்ற பெரிய ஹால், படுக்கை அறைகள், சாப்பாட்டுக் கூடம், சமையல் அறை, பொழுதுபோக்கு வசதிகள் நிரம்ப பெற்றிருக்கிறது. மொத்தத்தில் வீட்டை மறந்துவிடும் அம்சங்கள் உள்ளன.

உயரமான கூரை அமைப்பு, மரத்தாலான தரைதளம், குழைவு வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகள் என பறக்கும் மாளிகையாக காட்சி தருகிறது.

இந்த விமானத்தின் மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் முக்கிய படுக்கை அறையில் 42 இன்ச் டெலிவிஷன், நவீன வசதிகளுடன் கூடிய குளியல் அறை, உடை மாற்றும் அறை போன்ற நவீன வசதிகளை கொண்டது. எங்கு பார்த்தாலும் சொகுசு வசதிகளும், உயர்தரமான பாகங்களாலும் இழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விமானத்தை ஆசிய கண்டத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்காக தயாரித்ததாக கெஸ்ட்ரல் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், உரிமையாளரின் பெயரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

பறக்கும் மாளிகையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விமானத்தில் இடைநில்லாமல் 17 மணிநேரம் வரை பறக்க முடியும்.

சாதாரண 787 ட்ரீம்லைனர் மாடல் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 15,190 கிமீ தூரம் வரை பறக்கும். ஆனால், இந்த தனிநபர் மாடல் 18,149 கிமீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு வர்த்தக விஷயங்களுக்காக அடிக்கடி செல்வதற்கு ஏதுவாக இந்த விமானத்தை இதன் வாடிக்கையாளர் வாங்கியிருப்பதாக கருதப்படுகிறது. வீட்டில் இருப்பது போன்ற உணர்வை இந்த விமானம் தரும் என்பதில் சந்தேகமில்லை.

கெஸ்ட்ரல் நிறுவனமானது தனி நபர் விமானங்களை விற்பனை செய்வது, குத்தகைக்கு எடுத்து தருவது, கஸ்டமைஸ் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்கிறது.

கடந்த 37 ஆண்டுகளாக இந்த கஸ்டமைஸ் பணிகளை செய்து வரும் இந்த நிறுவனம் தற்போது உலகின் மிகப்பெரிய தனிநபர் விமானங்களில் ஒன்றாக இதனை நவீன வசதிகளுடன் உருவாக்கியிருக்கிறது.

இதுவரை 300க்கும் அதிகமான தனிநபர் விமானங்களின் விற்பனையிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மதிப்பு 50 பில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த விமானத்தின் உரிமையாளர் பெயரையும், இதன் மதிப்பு குறித்தும் கெஸ்ட்ரல் நிறுவனம் மூச்சு விடவில்லை.

- உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380!
- உலகின் காஸ்ட்லியான டாப்- 10 தனி நபர் பயன்பாட்டு விமானங்கள்!
- பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!


Click it and Unblock the Notifications








