60 லட்சம் கிலோ எடையை இழுத்து கொண்டு அசால்டாக 120 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
உலகின் பவர்ஃபுல் ரயில் இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ள WAG12B ரயில் இன்ஜின் குறித்த விரிவான மற்றும் தெளிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் முக்கியமான போக்குவரத்து வசதி என்றால் அது ரயில் தான். இந்தியாவில் மிக அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமும் இந்திய ரயில்வே தான். ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே மட்டும் ஸ்தம்பித்துவிட்டால் இந்தியாவில் பொருளாதாரத்திலேயே மிகப்பெரிய சரிவு ஏற்படும். அந்த அளவிற்கு இந்திய ரயில்வே வளர்ந்துவிட்டது.

ரயில்களிலும் புதிது புதிதாகப் பல் தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டது. நிலக்கரி ரயிலில் துவங்கி பின்னர் டீசல் ரயில், எலெக்டரிக் ரயில், என வந்துவிட்டது. இன்று ரயில்வே இன்ஜினியில் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டன. இன்று பெரிய பயமுறுத்தும் சத்தம் இல்லாத பார்க்கவே அழகாக இருக்கும் இன்ஜின்கள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால் இன்றும் கொஞ்சம் பெரிய பயங்கரமான இன்ஜின்கள் தான் அதிக செயல் திறன்களுடன் செயல்படும் இன்ஜின்களாக இருக்கிறது.

இப்படியாக உலகில் மிகவும் பவர்புஃல் ரயில் இன்ஜின் எது தெரியுமா? எங்கே வெளிநாட்டில் எல்லாம் இல்லை இந்தியாவில்தான் உலகின் பவர்ஃபுல் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைத் தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். கடந்த 2006ம் ஆண்டு இந்திய அரசு இந்தியாவில் சரக்கு போக்குவரத்திற்கான கழகம் ஒன்றை உருவாக்கியது. அந்த கழகம் ஒரே ரயிலில் அதிகமான எடை கொண்ட சரக்குகளைக் கொண்டு செல்ல திட்டமிட்டது.

அதற்காக WAG9 என்ற எலெக்ட்ரிக் சரக்கு இன்ஜினை உருவாக்கியது. இதுதான் இந்தியாவிலேயே பவர்ஃபுல் ரயில் இன்ஜினாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு இந்திய ரயில்வே மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் மிக அதிகமாக எடைகளை இழுத்துச் செல்லும் 8 ஆக்ஸில் இன்ஜினிற்கான டிசைன உருவாக்கியது. இதை இந்திய ரயில்வே நிர்வாகம் பீகாரில் உள்ள மாதீபுரா பகுதியில் உள்ள எலெக்டரிக் இன்ஜின் உருவாக்கும் மையத்தில் வைத்து உருவாக்க முடிவு செய்தது.

இதற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யக் கோரப்பட்டது. ஜூன் 2013ம் ஆண்டு கோரப்பட்ட இந்த புள்ளிகளுக்கு 2015ம் ஆண்டு தான் முடிவு செய்யப்பட்டு அல்ஸ்டாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக WAG12A என்ற இன்ஜின் முதன் முறையாக வெளிநாட்டிலிருந்து ஒரே ஒரு இன்ஜின் வாங்கப்பட்டு அந்த டிசைனை அடுத்து அதை மேம்படுத்தி WAG12Bஎன்ற இன்ஜினை இந்திய ரயில்வே நிர்வாகம் அல்ஸ்டாம் நிறுவனத்துடன் ரூ25,000 கோடி ஒப்பந்தத்தில் உருவாக்கியது. இதன் முதல் இன்ஜினை பிரதமர் மோடி 2018 ஏப்ரல் 10ம் தேதி துவக்கி வைத்தார்.

இந்த இன்ஜின் 12,000 பிஎச்பி திறனை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் இந்த இன்ஜின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. இந்த இன்ஜினில் பயன்படுத்தப்படும் 90 சதவீதமான உதிரிப்பாகங்கள் இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்டன. 2018ம் ஆண்டு முதல் இன்ஜின் வெளியான நிலையில் அடுத்தடுத்து இன்ஜினகளை தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

2021ம் முதல் ஆண்டிற்கு 100 இன்ஜின்கள் விதம் 2028ம் ஆண்டிற்குள் மொத்தம் 800 இன்ஜின்களை தயாரிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இன்ஜின்கள் எல்லாம் 28 மீட்டர் நீளத்தில் தான் இருக்கும். இந்த இன்ஜின் 38 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மற்ற இன்ஜின்களை காட்டிலும் பல சிறப்பம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 8 ஆக்ஸில்களுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினின் டிசைன் குறைவான எனர்ஜி பயன்பாடு மற்றும் குறைந்த விலையில் இன்ஜினை இயக்குவதை மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த இன்ஜினில் அல்ஸ்டோம் பிரைமா டி8 தொழிற்நுட்பம் உள்ளது. இது காற்று மழை, தூசி என எல்லா சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படும். வெப்பத்தைப் பொருத்தவரை -50 டிகிரி முதல் +50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்திலும் செயல்படும்.

இந்த இன்ஜினில் டிரைவர் கேபின்கள் டிரைவர்களுக்கு நல்ல வசதியாகவும், நீண்ட தூரப் பயணத்திற்கு ஏற்றவாறும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டிரைவர் கேபின் ஏசி வசதியுடன் இருக்கும். இதுமட்டுமல்ல கேபின் உள்ளேயே சமைக்கும் வசதியும், சமைத்த உணவுகளைச் சேமித்து வைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது போக கழிவறை வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இது போக ரயிலின் பாதுகாப்பிற்காக ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் வசதியும், டிராக்கிங் மற்றும் மானிட்டரிங் சிஸ்டமும், வயர்லெஸ் கண்ட்ரோல் இன்ஜின், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ பைலட், அங்கு நடக்கும் சம்பவங்களைத் தகவல்களாகச் சேமிக்கும் பிளாக் பாக்ஸ் தொழிற்நுட்பம் ஆகியன இந்த இன்ஜினில் வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக பவர் கொண்ட ரயில் இன்ஜின் இது தான். இது முழு லோடு உடன் மணிக்கு 100-120 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த வேகம் சராசரி சரக்கு ரயில் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இந்த இன்ஜின் 60லட்சம் கிலோ அளவிலான எடையை இழுத்துச் செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications