பறக்கும் கார்களுக்கான உலகின் முதல் ஏர்போர்ட்... எங்கே இருக்கு? எப்படி இருக்கும்?.. இதோ சுவாரஷ்யமான தகவல்கள்!
பறக்கும் கார்களுக்கான (Flying Cars) உலகின் முதல் ஏர்போர்ட் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

விரைவில் இந்தியாவின் பறக்கும் கால் டாக்சி கனவு நிஜமாக இருக்கின்றது. அதாவது பறக்கும் கார்கள் வெகு விரைவில் நாட்டில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இதற்கான பணிகளில் சில முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் உலகின் முதல் பறக்கும் கார்களுக்கான ஏர்போர்ட் பற்றிய விபரம் வெளி வந்திருக்கின்றது.

அந்த ஏர்போர்ட் ஏற்கனவே பறக்கும் கார்கள் டேக்-ஆஃப் செய்வதற்கு பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நாட்டிலேயே உலகின் முதல் பறக்கும் கார்களுக்கான ஏர்போர்ட் அமைந்திருக்கின்றது. இந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அர்பன் ஏர் போர்ட் நிறுவனமே பறக்கும் கார்களுக்கான ஏர்போர்டை உருவாக்கியிருக்கின்றது.

எங்கு அமைந்திருக்கின்றது?
ஏர் ஒன் என்று அழைக்கப்படும் இந்த உலகின் முதல் பறக்கும் கார்களுக்கான ஏர்போர்ட் லண்டனில் இருந்து சுமார் 155 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோவென்ட்ரி எனும் பகுதியிலேயே அது அமைந்திருக்கின்றது. இந்த ஏர்போர்ட் யுஏபி மற்றும் கோவென்ட்ரி நகர கவுன்சில் ஆகியவற்றின் கூட்டணியிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

எவ்வளவு கால இடைவெளியில் ஏர்போர்ட் உருவாக்கப்பட்டது?
ஏர் ஒன் பறக்கும் கார்களுக்கான ஏர்போர்ட் 15 மாதங்களிலேயே கட்டி முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில பணிகள் முழுமையடையாத நிலை தென்படுகின்றது. அதேவேலையில், ஏற்கனவே சோதனையோட்டத்தின் அடிப்படையில் இந்த ஏர்போர்ட் தற்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. வெகுவிரைவில், அது வெகுஜன பயன்பாட்டிற்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எந்த நேரத்தில் வேண்டுமானால் இந்த நிகழ்வு அரங்கேறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூஜ்ஜியம் உமிழ்வு வசதிக் கொண்ட ஏர்போர்ட்
ஏர் ஒன் ஓர் முழுக்க முழுக்க தன்னாட்சி தொழில்நுட்ப வசதிக் கொண்ட ஏர்போர்ட் ஆகும். இங்கு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த கருவியும் பயன்பாட்டில் இருக்காது என கூறப்படுகின்றது. எலக்ட்ரிக் ட்ரோன்கள் மற்றும் ஏர் டாக்சிகளுக்காக பிரத்யேகமாக இது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட ஏர்போர்டை அர்பன் ஏர் போர்ட் லிமிடெட் இங்கிலாந்தில் உருவாக்கியிருக்கிறது. விரைவில் தானாக இயங்கக் கூடிய ட்ரான்கள் மற்றும் பறக்கும் கார்கள் உலகையே ஆள இருக்கின்றன. பார்சல் சேவை தொடங்கி அவசர ஆம்புலன்ஸ்களாகவும் அவை செயல்பட இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, விபத்து மற்றும் அசம்பாவிதங்களின் மீட்பு வாகனமாக பயன்படும் வகையிலும் சில ட்ரோன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பறக்கும் வாகனங்களுக்கு உதவும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ஏர்போர்ட் உருவாக்கப்பட்டிருப்பது வாகன ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கியிருக்கின்றது.

உலக நாடுகளில் மட்டுமின்றி இந்தியாவிலும் வெகு விரைவில் பறக்கும் கால் டாக்சி பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இ-பிளேன் நிறுவனம் ப்ரோட்டோ டைப்பிலான பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்தியது.

ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர் பிரஞ்சல் மேத்தா ஆகியோரால் நிறுவப்பட்ட நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பறக்கும் கால் டாக்சி. இ200 என பெயரிடப்பட்டிருக்கும் அந்த பறக்கும் கார் மின்சாரத்தால் இயங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டின் மத்திக்குள் பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ200 ஓர் இரண்டு இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்சி ஆகும். ஒரு முறை முழுமையான சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த பறக்கும் டாக்சி ஹெலிகாப்டர்களை போல் செங்குத்தாகவே டேக்-ஆஃப் ஆகும். ஆகையால், விமானங்களுக்கு தேவைப்படுவதைப் போல் ஓடுதளம் இதற்கு தேவைப்படாது. செங்குத்தாக வான் நோக்கி எழும்பவும், அதிக தூரம் பறக்கவும் இ200 இல் நான்கு ப்ரோபெல்லர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், இரண்டு செங்குத்தாக டேக்-ஆஃப் செய்யவும், மற்ற இரண்டு முன்னோக்கி பறக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: கடைசி இரு படங்கள் தமிழக நிறுவனமான இபிளேன் தயாரித்த இ 200 கால் டாக்சியின் படங்கள் ஆகும். இவை உதாரணத்திற்காக இங்கு வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








