உக்ரைனின் கனவை சல்லி சல்லியாக நொறுக்கிய ரஷ்யா படை! உலகின் மிக பெரிய விமானத்திற்கு ஏற்பட்ட சோகம்!
உலகின் மிகப்பெரிய கார்கோ வாகனமான மிரியா ரஷ்யாவால் அழிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் மிகப் பெரிய கார்கோ விமானமாகக் கருதப்படும் மிரியா (Antonov-225 Mriya) ரஷ்யா படையெடுப்பால் அழிக்கப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உக்ரைன்-ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகின்றது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக அது போராக மூண்டுள்ளது.

இந்த போரை ஆரம்பித்து வைத்திருக்கும் ரஷ்யா, இதற்கு காரணமாக உக்ரைனை குற்றம் சாட்டுகின்றது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய இருப்பதையே பெரும் குற்றச்சாட்டாக முன் வைத்து, அந்நாட்டின்மீது மிக தீவிரமான போரை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையிலேயே உலகின் மிகப் பெரிய விமானமான அன்டோனோவ் ஏஎன்225 மிரியா அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உக்ரைன் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலோபா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "ரஷ்யா நமது மிரியா-வை அழித்திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசின் கனவை அவர்களால் ஒரு போதும் அழிக்க முடியாது. நாம் வெற்றி பெறுவோம்" என கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ராணுவத்தால் அழிக்கப்பட்டிருக்கும் மிரியா விமானம் வரலாற்று சிறப்புமிக்க கார்கோ வாகனமாகும். இது, உக்ரேனியாவைச் சேர்ந்த அன்டனோவ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த விமானத்தை டெட்லிஃப்ட் எனவும் அந்நாட்டு விமானத்துறை அழைத்தது.

மிக மிக அதிக எடைக் கொண்ட பொருளைக்கூட மிக எளிதில் கையாளும் திறனை அது கொண்டிருக்கின்ற காரணத்தால் இவ்வாறு ஏஎன் 225 மிரியா விமானத்தை அவர்கள் அழைத்திருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த விமானத்தில் 32 வீல்கள் லேண்டிங் சிஸ்டத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

250 டன் வரையிலான பொருட்களை கூட எதில் ஏற்றி செல்ல முடியும். இதுமட்டுமின்றி 4,500 கிமீ தூரம் வரை இது பயணிக்க திறனைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பிரம்மிக்க வைக்கும் திறன் கொண்ட கார்கோ விமானத்தையே ரஷ்யா அழித்திருக்கின்றது.

மிரியா 84 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது, 276 அடி நீளத்தைக் கொண்ட விமானம் ஆகும். எனவேதான் இது உலகின் மிக பெரிய விமானமாகப் பார்க்கப்படுகின்றது. இது மணிக்கு 850 கிமீ வேகத்தில் பறக்கும் திறனைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. உக்ரைன் மொழியில் 'மிரியா' என்பது 'கனவு' என பொருளாகும்.

இந்த மாபெரும் கனவே தற்போது சிதைக்கப்பட்டிருக்கின்றது. அழிக்கப்பட்ட விமானத்தின் படம் மற்றும் என்ன மாதிரியான சேதம் அடைந்துள்ளது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து அன்டோனோவ் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விமானம் தற்போது வல்லுநர்களின் கை வசம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைத்து சேதங்கள் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர். விரைவில் இதுகுறித்த விரிவான விபங்கள் வெளியிப்படும்" என தெரிவித்துள்ளது.

கீவ் ஹாஸ்டோமெல் விமான நிலையத்தில் வைத்தே ரஷ்யா இவ்விமானத்தை அழித்திருக்கின்றது. இவ்விமானத்தை மறு சீரமைப்பு செய்ய 3 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் வெகு நீண்ட நாட்களும் இதற்கு தேவைப்படும் எனவும் கூறப்படுகின்றது.

கொரோனா பேரிடர் காலத்தில் இவ்விமானம் பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் உதவி பொருட்களை ஏற்றிச் செல்ல விமானம் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய விமானத்திற்கே மிக மோசமான நிலை ரஷ்யாவின் படையெடுப்பால் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

மிரியா அதன் முதல் பறத்தலை நிகழ்த்தியது 1988 ஆம் ஆண்டிலேயே ஆகும். சோவியத் வானூர்தி திட்டத்தின் ஒரு பகுதியாகவே இவ்விமானம் கட்டமைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் விமானம் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது.


Click it and Unblock the Notifications








