ஹாங்காங்கில் கட்டப்பட்டிருக்கும் உலகின் மிக நீளமான கடல் பாலம்!
உலகின் மிக நீளமான கடல்பாலம் சீனாவில் கட்டப்பட்டுள்ளது. அது பற்றிய சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஆசிய பிராந்தியத்திலேயே மிகச்சிறப்பான போக்குவரத்து கட்டமைப்பை சீனா உருவாக்கி வருகிறது. ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து கட்டமைப்பை பலப்படுத்துவதில் சீனா மும்முரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், உலகின் மிக நீளமான கடல் பாலம் ஒன்றை சீனா கட்டி உள்ளது. விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்பட இருக்கும், இந்த பிரம்மாண்ட பாலத்தை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சீனாவிலுள்ள ஹாங்காங், மெகாவ், சுகாய் ஆகிய மூன்று நகரங்களை இணைக்கும் விதத்தில், கடலின் நடுவில் இந்த பாலம் 50 கிமீ நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. 2009ம் ஆண்டு இந்த இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.

இந்த பிரம்மாண்ட பாலத்தை அமைப்பதற்காக கடல் நடுவில் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்புக்கு மண் மற்றும் பாறைகளை நிரப்பி, இரண்டு செயற்கை தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த மணல் திட்டில் இரும்பு மற்றும் ராட்சத கான்க்ரீட் தூண்கள் ஊன்றப்பட்டு அதன் மீது இந்த பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.

இந்த 50 கிமீ தூரத்திற்கான கடல் வழி பாலத்தில் மற்றொரு சிறப்பும் உண்டு. செயற்கையாக உருவாக்கப்பட்ட இரண்டு தீவுகளுக்கு இடையில் 4 கிமீ தூரத்திற்கு சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்லும்.

இந்த இடத்தில் மேல்புறத்தில் கப்பல் போக்குவரத்து தங்கு தடையில்லாமல் நடைபெற ஏதுவாக இவ்வாறு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் கடும் புயல், ராட்சத அலை போன்றவற்றில் கூட எந்த பாதிப்பும் ஏற்படாத தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. அ்த்துடன், வாகனப் போக்குவரத்தும் இடையூறு இல்லாமல் நடப்பதற்கு பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு இருக்கிறது.

ஹாங்காங், மக்காவ், சுகாய் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையில் 4 மணிநேரமாக இருந்த கார் பயணம் இந்த பாலம் மூலமாக வெறும் 45 நிமிடங்களாக குறையும். இதனால், இந்த பகுதியில் மிகச் சிறப்பான போக்குவரத்து இணைப்பு பெறும்.

இந்த புதிய பாலம் மூலமாக சுற்றுலாத் துறையும், துறைமுகங்களுக்கான எளிதான இணைப்பு கிடைக்கவும் வழி வகை ஏற்படும். இந்த பாலம் உலகின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய பாலம் ரூ.6,700 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்கான முதலீடு மிக அதிகம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இந்த பாலம் திறக்கப்பட்டு, அடுத்த 20 ஆண்டுகளில் 3.5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Picture credit: HZMB


Click it and Unblock the Notifications








