மும்பை- நியூயார்க் இடையே உலகின் அதிக கட்டண விமான சேவை அறிமுகம்!
எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமான சேவையை இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கின. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முதல் ஏர்பஸ் ஏ380 விமான சேவையை இந்தியாவுக்கு துவங்கியிருக்கிறது அபுதாபியை சேர்ந்த எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம்.
எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்யாத சூட் ரூமை எதிஹாட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதான் இதில் ஹைலைட். மேலும், மும்பைிலிருந்து நியூயார்க் இடையிலான ஏர்பஸ் ஏ380 விமான பயணத்திற்கு அந்த நிறுவனம் நிர்ணயித்திருக்கும் கட்டணம்தான் உலகிலேயே அதிக கட்டணம் கொண்ட விமான சேவை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாட்டர் சல்யூட் இல்லை
அபுதாபியிலிருந்து மும்பைக்கு முதல்முறையாக வந்த எதிஹாட் விமானத்திற்கு நீரை பீய்ச்சி அடிக்கும் வாட்டர் சல்யூட் வரவேற்பு கொடுக்கப்படவில்லை. காரணம், மஹாராஷ்டிராவில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம்தான். அதற்கு மாற்றாக மின்மினி விளக்கொளி வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்திய பணியாளர்கள்
அபுதாபியிலிருந்து மும்பை வந்த அந்த பிரம்மாண்ட விமானத்தை இயக்கிய கேப்டன் உள்பட 22 பணியாளர்களும் இந்தியர்தான் என்பது மற்றுமொரு பெருமை. ஹைதராபாத்தை சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணாதான் இந்த விமானத்தை இயக்கிய கேப்டன். மும்பையை சேர்ந்த இர்ஃபான் ரிஸ்விதான் முதன்மை அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்நாட்டிற்கும், வாழவைத்த நாட்டிற்கும் இடையில் இந்த பிரம்மாண்ட விமானத்தை இயக்குவது மகிழ்ச்சியாக இருப்பதாக ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.

சூட் ரூம்
ஏற்கனவே எமிரேட்ஸ் நிறுவனமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஏர்பஸ் ஏ380 விமானத்தை இந்தியாவிற்கு இயக்கி வந்தாலும், அதில் எக்கானாமி கிளாஸ் மற்றும் பிசினஸ் கிளாஸ் வகுப்பு இருக்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால், முதல்முறையாக 3 சூட் ரூம் கொண்ட ஏர்பஸ் ஏ380 விமானத்தை எதிஹாட் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனை ரெசிடென்ஸ் என்று எதிஹாட் குறிப்பிடுகிறது.

இருக்கை வசதி
அமெரிக்காவின் நியூயார்க்- அபுதாபி இடையில் சேவையளித்து வந்த விமானம்தான் தற்போது மும்பை வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் 496 இருக்கைகள் உள்ளன. அதில், 3 ரெசிடென்ஸ் வகுப்பு அறைகள், 3 முதல் வகுப்பு படுக்கை வசதி இருக்கைகல், 70 பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் மற்றும் 415 எக்கானமி கிளாஸ் இருக்கைகள் உள்ளன.

ரெசிடென்ஸ் வகுப்பு
ரெசிடென்ஸ் வகுப்பில் படுக்கையறை, அகலமான திரை கொண்ட தொலைக்காட்சி, தனி ரெஸ்ட் ரூம், உதவிகளை செய்வதற்கான தனி பணியாளர் ஆகியவற்றை கொண்டது. அதாவது, 7 ஸ்டார் ஓட்டல் அறை போன்ற வசதிகளை கொண்டது. இந்த அறையில் இருவர் பயணிக்க அனுமதியுண்டு.

அதிகபட்ச கட்டணம்
இந்த வகுப்பில் பயணிப்பதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், மும்பை- நியூயார்க் இடையிலான இந்த எதிஹாட் விமானத்தின் கட்டணம்தான் உலகிலேயே விமான சேவை துறையில் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணமாக குறிப்பிடப்படுகிறது.

கட்டண விபரம்
மும்பை- நியூயார்க் இடையில் இந்த விமானத்தில் பயணிக்க ஒருவழி பயணத்திற்கு 38,000 டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.25.22 லட்சம் கட்டணம். இருவழி பயணத்திற்கு ரூ.50 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பயண நேரம்
மும்பையிலிருந்து நியூயார்க் நகரத்தை இந்த விமானம் 19 மணிநேரத்தில் கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதர வழித்தடங்கள்
மும்பை- நியூயார்க் மட்டுமின்றி, மும்பை- அபுதாபி மற்றும் மும்பை - லண்டன், மும்பை- சிட்னி ஆகிய வழித்தடங்களிலும் ஏர்பஸ் ஏ380 விமானத்தை இயக்குகிறது எதிஹாட். வரும் 1ந் தேதி முதல் மெல்போர்ன் நகருக்கும் சேவை துவங்குகிறது. அபுதாபியிலிருந்து மும்பைக்கு ரெசிடென்ஸ் வகுப்பில் பயணிக்க ரூ.3.31 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதுசரி...
ஆசை யாரைவிட்டது. நடக்கறது நடக்கட்டும், இந்த விமானத்தின் ரெசிடென்ஸ் வகுப்பில் பயணிக்கலாம் என்று ஒரு தேதியை குத்து மதிப்பா தேர்வு செய்தால், Sold out அப்படீன்னு பதில் வருது. அதுசரி...!!

ரூ.15 லட்ச கட்டண வகுப்பில் ரூ.7,000 கொடுத்து பறந்த கில்லாடி விமானப் பயணி!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 பற்றிய நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்!


Click it and Unblock the Notifications








