இங்கிலாந்தில் உலகின் ராட்சத ஆகாய கப்பல் அறிமுகம்: சிறப்புகள் ஏராளம்!
உலகின் மிகப்பெரிய ராட்சத விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட் இந்த விமானம் தற்போது வர்த்தக ரீதியிலான தயாரிப்புக்கு ஏற்ற வகையில், முழுமையான வடிவமைப்பு நிலையை எட்டியிருக்கிறது.
பார்ப்பதற்கு ராட்சத பலூன் போல காட்சியளிக்கும் இந்த ஆகாய கப்பல் சாதாரண விமானங்களைவிட பல்வேறு சிறப்பம்சங்களையும், பயன்களையும் கொண்டிருக்கிறது. அவற்றை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

கைவிட்ட அமெரிக்கா
ஏர்லேண்டர் எச்ஏவி304 என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட 300 அடி நீளம் கொண்ட இந்த ஆகாய கப்பல் அமெரிக்க ராணுவத்துக்காக இங்கிலாந்தை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால், கடந்த 2013ம் ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட்டில் 40 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த விமானத்தை வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் அந்த விமானம் திரும்ப ஹைபிரிட் வெகிக்கிள்ஸ் நிறுவனத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

தளராத முயற்சி
அமெரிக்கா கைவிட்டாலும், இங்கிலாந்து அரசின் நிதி ஒத்துழைப்புடன் இந்த ஆகாய கப்பலை ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. தற்போது தயாரிப்பு நிலையை எட்டியிருக்கும் இந்த விமானத்திற்கு ஏர்லேண்டர்-10 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

உலகின் பெரிய விமானம்
தற்போது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானம் 240 அடி நீளம் கொண்டது. ஆனால், இந்த விமானம் 302 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது. அதாவது, ஒரு கால் பந்தாட்ட மைதானம் அளவுக்கு வடிவம் கொண்டது.

ஓடுபாதை தேவையில்லை
உலகின் மிகப்பெரிய விமானங்களுக்கு அதிக நீளமான ஓடுபாதைகளும், விமான நிலையங்களில் நிறுத்துவதற்கு விசேஷ கட்டமைப்புகளும் தேவைப்படும். ஆனால், இந்த விமானத்துக்கு ஓடுபாதையே தேவையில்லை என்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. அத்துடன், நிலம் மட்டுமின்றி, தண்ணீரிலும் தரை இறக்க முடியும்.

திறன்
ஏர்லேண்டர்-10 ஆகாய கப்பல் மூன்று வாரங்களுக்கு தரையிறங்காமல் வானில் பறக்கும் திறன் கொண்டது. இதனால், கண்காணிப்பு பணிகளுக்கு மிக ஏற்றதாக இருக்கும். இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் இயக்கக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு
ராணுவ கண்காணிப்பு, மீட்புப் பணிகள், ராட்சத தளவாடங்களை எடுத்துச்செல்வதற்கான சாதனமாகவும் இருக்கும். தவிரவும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான வசதிகளையும் கொண்டிருக்கும். ஒரே இடத்தில் கூட பல நாட்கள் பறக்க விட முடியும்.

சுற்றுச்சூழல் நண்பன்
இது பிற விமானங்களை காட்டிலும் 70 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனம் கொண்டது. ஆம், இந்த விமானத்தை மேலே எழுப்புவதற்கு 60 சதவீதம் ஹீலியம் வாயுவும், 40 சதவீதம் டீசலும் பயன்படுகிறது. இதற்காக, இந்த விமானத்தில் 4 வி8 டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முழுவதுமாக மின் மோட்டார்கள் மூலமாக இயக்கக்கூடிய ஏர்லேண்டரையும் தயாரிக்கும் திட்டம் உள்ளதாம்.

வேகம்
பிற விமானங்களை போன்று அதிவேகத்தில் பறந்து செல்லாது. அதிகபட்சமாக மணிக்கு 148 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், இடைநில்லாமல் 3 வாரங்கள் வரை பறக்கும் வசதி கொண்டது.

தயாரிப்பு செலவு
ஒரு ஏர்லேண்டர் விமானத்தை தயாரிக்க 60 மில்லியன் பவுண்ட் செலவு பிடிக்கிறதாம். அதேநேரத்தில், பிற விமானங்களை காட்டிலும் இதன் தயாரிப்பு செலவு குறைவாக இருக்கிறது.

பயணிகள் விமான மாடல்
ஏர்லேண்டர்-10 விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கை அமைப்புப்படி, 48 பயணிகள் அமர்ந்து செல்ல முடியும். மேலும், அதிர்வுகள் இல்லாத மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். எனவே, சுற்றுலாத் துறை பயன்பாட்டிற்கும் ஏதுவானதாக இருக்கும்.

சிறப்பாக இயங்கும்
அனைத்து சீதோஷ்ண நிலையிலும் சிறப்பாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பிற்பகுதியில் 200 மணி நேரம் வானில் பறக்கவிட்டு சோதனை செய்யப்பட உள்ளது.

தயாரிப்பு
வரும் 2018ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 12 ஏர்லேண்டர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், சில பயணிகள் விமான மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறப்பான போக்குவரத்து சாதனமாக இதனை குறிப்பிடுகின்றனர்.

செலவு
ஒரு ஏர்லேண்டர் விமானத்தை தயாரிக்க 25 மில்லியன் பவுண்ட் செலவு பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானத்தின் சிறப்பம்சங்கள்!


Click it and Unblock the Notifications








