உலகின் முதல் பறக்கும் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!!
உலகின் முதல் பறக்கும் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பறக்கும் காரின் விலை, விதிமுறைகள் உள்ளிட்ட விரிவானத் தகவல்களை இப்போது காணலாம்.
உலகின் முதல் பறக்கும் கார் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஏஎல்-வி லிபர்ட்டி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த பறக்கும் கார் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் வான் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிஏஎல் வி நிறுவனம்தான் இந்த பறக்கும் காரை தயாரித்துள்ளது. பிஏஎல் வி லிபர்டி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முதல் மாடல் லிபர்டி பயனீர் எடிசன் என்ற பெயரில் வந்துள்ளது.

மொத்தம் 90 பிஏஎல் வி லிபர்டி பறக்கும் கார்கள் விற்பனை செய்யப்படும். இதில், பாதிக்கும் மேற்பட்ட கார்கள் ஐரோப்பாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்திய மதிப்பில் ரூ.3.78 கோடி விலையில் லிபர்டி பறக்கும் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பறக்கும் காரை இயக்குவதற்கான பயிற்சிக்கான கட்டணமும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் வித்தியாசமான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இந்த காரில் சாலையில் இயக்குவதற்காக ஒரு எஞ்சினும், பறப்பதற்காக ஒரு எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

வெறும் 5 நிமிடங்களில் இந்த பறக்கும் கார் சாலையில் செல்வதற்கு ஏதுவாகவும், பறப்பதற்கு ஏதுவானதாகவும் மாறிக் கொள்ளும். சாலையில் செல்லும்போது இதன் ரோட்டர் பிளேடுகள் தானாக மடங்கிக் கொள்ளும்.

அதேநேரத்தில், இந்த பறக்கும் காரை இயக்குவதற்கு பைலட் லைசென்ஸ் தேவைப்படுமாம். மேலும், நாம் நினைப்பது போல எந்த இடத்திலும் மேல் எழும்பவோ அல்லது தரையிறக்கவோ முடியாதாம்.

எந்த தடைகளும் இல்லாத 90-200*200 மீட்டர் சதுர பரப்பிலான இடம் தேவை. சிறிய ஓடுபாதைகள், விமான நிலையங்கள், க்ளைடர் விமானங்களுக்கான தளங்களை பயன்படுத்தலாம் என்று பிஏஎல் வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பறக்கும்போது சிறிய வகை விமானங்கள் அளவுக்கு சப்தத்தை வெளிப்படுத்துமாம். அதேநேரத்தில், ஹெலிகாப்டரை விட மிக குறைவான சப்தத்தை இதன் எஞ்சின் வெளிப்படுத்தும்.

இந்த பறக்கும் காரில் பறக்கும்போது 199.7 எச்பி பவரை அளிக்க வல்ல எஞ்சின் மூலமாக இயங்கும். அதிகபட்சமாக 179 கிமீ வேகத்தில் பறக்கும். 3,500 மீட்டர் உயரம் வரை பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 498 கிமீ தூரம் வரை பறந்து செல்லும்.

இந்த பறக்கும் காரில் இரண்டு பேர் செல்ல முடியும். தற்போது இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு இந்த பறக்கும் காரின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. லிபர்டி காருக்கு 25,000 டாலர்கள் முன்பணத்துடனும், லிபர்டி ஸ்போர்ட் மாடலுக்கு 10,000 டாலர்கள் முன்பணத்துடன் முன்பதிவு பெறப்படுகிறது. இதை திரும்ப பெற முடியாது.

அதேநேரத்தில், 2,500 டாலர்கள் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது திரும்ப பெறக்கூடிய முன்பதிவு திட்டம். ஆனால், காத்திருப்போர் பட்டியலில் இந்த முன்பதிவு இடம்பெறும்.

பிஏஎல் வி லிபர்டி பயனீர் எடிசனில் 90 கார்களும் விற்று முடிந்த பின், லிபர்டி ஸ்போர்ட் என்ற அடுத்த பறக்கும் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது பிஏஎல் வி நிறுவனம். இந்த பறக்கும் கார் ரூ.2.78 கோடி விலை மதிப்பில் விற்பனைக்கு வருகிறது.
புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!
இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








