இந்தியாவின் லைஃப் லைன் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றி சுவாரஸ்யத் தகவல்கள்!
லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் அல்லது ஜீவன் ரேகா எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்தியாவின் நடமாடும் ரயில் மருத்துவமனை தனது மருத்துவ சேவையில் 25 ஆண்டுகளை எட்ட இருக்கிறது.
நாட்டின் லட்சோபலட்சம் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வரும் இந்த ரயில் மருத்துவமனை, உலகின் முதல் நிரந்தர ரயில் மருத்துவமனையாக குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் மாயாஜால ரயில் என்று குறிப்பிடப்படும் இந்த ரயில் பற்றிய சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்
கடந்த 1991ம் ஆண்டில் இந்த ரயில் மருத்துவமனை சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரயில்வே துறை மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் இணைந்து இந்த ரயில் மருத்துவமனை திட்டத்தை உருவாக்கின. உலகிலேயே ரயிலில் அமைக்கப்பட்ட நிரந்தர மருத்துவமனை என்ற பெருமை இந்த ரயிலுக்கு உண்டு.

விரிவாக்கம்
கடந்த 2007ம் ஆண்டு இந்த ரயிலுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் தேவையை கருதி, கூடுதலாக 5 ரயில் பெட்டிகள் பிரத்யேக கட்டமைப்பு வசதிகளுடன் சேர்க்கப்பட்டது. இந்த ரயிலில் 2 மின் உற்பத்தி ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு இருப்பதுடன், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது.

தன்னார்வ நிறுவனம்
இங்கிலாந்தை சேர்ந்த இம்பேக்ட் இந்தியா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இந்த ரயிலை இயக்கி வருகிறது. உடல் குறைபாடுகளை களைவதற்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் விழிப்புணர்வுகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

ரயில்வே துறையின் பங்களிப்பு
இந்த லைஃப்லைன் எக்ஸ்பிரஸுக்கான ரயில் பெட்டிகள், ஓட்டுனர்கள் உள்பட 6 ஊழியர்களை இந்திய ரயில்வே துறை வழங்கியிருக்கிறது. சமையல் கூடம், மருத்துவ பணியாளர்களுக்கான ஓய்வறைகள், அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிகளுக்கான பிரத்யேக கண்காணிப்பு அறை என ஒரு பிரம்மாண்ட மருத்துவமனையாக செயல்படுகிறது.

மருத்துவ சேவை
கடந்த 25 ஆண்டுகளில் நாடு முழுவதும் பயணித்திருக்கும் இந்த ரயில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊரக பகுதி வாழ் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியிருக்கிறது. அன்னப்பிளவு சிகிச்சை, பல் மருத்துவம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அனைத்து மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

முழுமையான மருத்துவமனை
இந்த ரயிலில் இருக்கும் 5 பெட்டிகள் பல்வேறு மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவ ஆலோசனை வழங்கும் வசதிகளை கொண்டிருக்கிறது. இரண்டு பெட்டிகள் முழுமையான அறுவை சிகிச்சை அரங்கங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஆய்வகம், பல் மருத்துவமனை, எக்ஸ்-ரே கருவி, எல்சிடி டிஸ்பிளே கொண்ட கூட்ட அரங்கம் போன்ற வசதிகள் இந்த ரயிலில் உள்ளன.

அறுவை சிகிச்சை அரங்கம்
இரண்டு பெட்டிகளில் இரண்டு அறுவை சிகிச்சை அரங்கங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. முதல் அறுவை சிகிச்சை அரங்கத்தில் ஒரேநேரத்தில் மூன்று அறுவை சிகிச்சைகளை செய்வதற்கான படுக்கை வசதி மற்றும் உபகரணங்களை கொண்டிருக்கிறது.

அவசர சமயத்திற்கும் உதவும்
ஒரு அறுவை சிகிச்சை அரங்கத்தை தனியாக கழற்ற முடியும். இயற்கை பேரழிவு சமயங்களில் இந்த அறுவை சிகிச்சை ரயில் பெட்டியை தனியாக கழற்றி சம்பந்தப்பட்ட இடத்திற்கு சேவையை வழங்க முடியும்.

பயிற்சி
இந்த ரயில் மருத்துவமனையின் அறுவை அரங்குகளில் சிசிடிவி கேமரா மூலமாக, பயிற்சி மருத்துவர்களுக்கு நேரடியான அறுவை சிகிச்சை பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன.

இதர நாடுகளிலும்...
இந்த லைஃப்லைன் ரயில் பற்றி தெரிந்து கொண்டு சில வெளிநாடுகளும் இதேபோன்ற நடமாடும் ரயில் மருத்துவமனைகளை அறிமுகம் செய்தன. சீனாவிலும், மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ரயில் மருத்துவமனைகளும், வங்கதேசம் மற்றும் கம்போடியாவில் படகுகளிலும் இதுபோன்ற நடமாடும் மருத்துவமனைகளை துவங்கியிருக்கின்றனர்.

மீண்டும் விரிவாக்கம்
இந்த ரயிலில் மேலும் 2 ரயில் பெட்டிகளை சேர்த்து விரிவாக்கம் செய்ய இம்பேக்ட் இந்தியா பவுண்டேஷன் திட்டமிட்டு இருக்கிறது.

சேவை
கடந்த 25 ஆண்டுகளில் 1.15 லட்சம் கிலோமீட்டர் தூரம் இந்தியா முழுவதும் பயணித்து லட்சோபலட்சம் மக்களுக்கு மருத்துவ உதவிகளை இந்த ரயில் வழங்கியிருக்கிறது. இது இந்தியாவின் பெருமைக்குரிய விஷயமாகவே உலக அரங்கில் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








