ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிமீ பயணம்..உலகின் முதல் தெர்மல் பேட்டரி பிளாண்ட் இந்தியாவில் திறப்பு..
ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிமீ பயணம் செய்யும் வகையிலான தெர்மல் பேட்டரிகளை உருவாக்கும் உலகின் முதல் தொழிற்சாலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையிலான தெர்மல் பேட்டரிகளை உருவாக்கும் உலகின் முதல் தொழிற்சாலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து விட்டது. எனவே பெட்ரோல், டீசலுக்கான மாற்று வழியை கண்டறிந்தே ஆக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக முன்னிறுத்தப்படுவது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். வரும் 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும், எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவை காட்டிலும் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்தான், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வெகு வேகமாக மாறி கொண்டிருக்கின்றன.

குறிப்பாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில், அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளிவிட்டு, நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது சீனா. எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறைவான செலவில் அதிக தூரம் பயணிக்கலாம் என்பதே இதற்கு காரணம்.

தற்போது எலக்ட்ரிக் வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம் இயான் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லித்தியம் இயான் பேட்டரிகளில் ஏராளமான நிறைகள் இருந்தாலும், ஒரு சில குறைகளும் இருக்கவே செய்கின்றன.

லித்தியம் இயான் பேட்டரிகள் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே உழைக்கும். அதன்பின் அதனை மாற்ற வேண்டிய தேவை உள்ளது. லித்தியம் இயான் பேட்டரிகளின் ஆற்றலும் மிக குறைவாக உள்ள சூழலில், அதன் விலை மிக அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வாக இருப்பது தெர்மல் பேட்டரி.

தெர்மல் பேட்டரி பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் பஸ்களை, ஒரு முறை சார்ஜ் செய்தால், 800 கிலோ மீட்டர் வரை சுலபமாக பயணம் செய்ய முடியும்! 4-8 மணி நேரத்தில், இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து விடலாம்.

தெர்மல் பேட்டரிகள், கார்பன் வெளியேற்றத்தையும் பெருமளவில் குறைத்து விடும் என்பதால், இவை சுற்றுச்சூழலுக்கும் உகந்தவையாக கருதப்படுகின்றன. எனவே லித்தியம் இயான் பேட்டரிகளை காட்டிலும், தெர்மல் பேட்டரிகள்தான் அதிக பயன் வாய்ந்தவையாக உள்ளன.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தெர்மல் பேட்டரி தொழில்நுட்பத்தில், இந்தியா வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. ஆம், உலகின் முதல் தெர்மல் பேட்டரி தொழிற்சாலை இந்தியாவில் திறக்கப்பட்டிருப்பது, உலக நாடுகள் பலவற்றின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

உலகின் முதல் தெர்மல் பேட்டரி பிளாண்ட் அமையப்பெற்ற மாநிலம் என்ற அந்தஸ்தை ஆந்திரா பெற்றிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவராக அறியப்படும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் இந்த தொழிற்சாலையை திறந்து வைத்திருக்கிறார்.

எனவே இனி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. அதாவது எலக்ட்ரிக் வாகனங்களின் தலையெழுத்தை தீர்மானிக்க போகும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த அந்தஸ்திற்கு, இந்தியா மிக நெருக்கமாக வந்துவிட்டது என்றே சொல்லலாம். அந்த அந்தஸ்தை எட்டிபிடிப்பதற்கான முதல் படிதான், ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை.

பெஸ்ட் எனப்படும் பாரத் எனர்ஜி ஸ்டோரேஜ் டெக்னாலஜி (Bharat Energy Storage Technology-BEST) என்ற இந்திய நிறுவனம்தான், இந்த தெர்மல் பேட்டரி பிளாண்ட்டை அமைத்திருக்கிறது. தெர்மல் பேட்டரிகளின் வணிக ரீதியிலான உற்பத்தி, அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தொடங்கவுள்ளது.

தெர்மல் பேட்டரிகளின் பயன்பாடு எலக்ட்ரிக் வாகனங்களோடு மட்டும் முடிந்து விடாது. டெலிகாம் டவர்களிலும், வணிக நிறுவனங்களிலும் இதனை பயன்படுத்த முடியும். எலக்ட்ரிக் பஸ்கள், தொலைதொடர்பு அமைப்புகளுக்கான பேட்டரிகள்தான் இங்கு முதலில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

தெர்மல் பேட்டரிகளை பயன்படுத்துவதன் மூலம், எலக்ட்ரிக் வாகன போட்டியில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை பின்தள்ளும் வல்லமை வாய்ந்த நாடாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு, சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக மட்டும் இந்தியா செலவிட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதன் மூலமாக மட்டுமே, பெட்ரோல், டீசல் இறக்குமதியை கணிசமாக குறைக்க முடியும். இந்த சூழலில், உலகின் முதல் தெர்மல் பேட்டரி தொழிற்சாலை இந்தியாவில் திறக்கப்பட்டிருப்பது, அந்த இலக்கை எட்டுவதற்கான நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








