சவால்களை கடந்து சரித்திரத்தில் இடம்பிடித்த காஷ்மீரில் அமைக்கப்பட்ட உலகின் உயரமான சாலை!
உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலை காஷ்மீரில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
வாகன போக்குவரத்துக்கு உகந்த உலகின் மிக உயரமான சாலை காஷ்மீரில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா- சீனா எல்லையோரும் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய சாலை பெரும் சவால்களை எதிர்கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் இந்த சாலை இமயமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. எல்லையோர சாலை கட்டுமான நிறுவனம்[BRO] இந்த சாலையை அமைத்துள்ளது. இதுதான் இப்போது உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலையாக பெருமை பெற்று இருக்கிறது.

புரொஜெக்ட் ஹிமாங்க் என்ற பெயரில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த சாலையை பல சவால்களை கடந்து பிஆர்ஓ நிறுவனம் அமைத்துள்ளது. லே பகுதியிலிருந்து சுமார் 230 கிமீ தூரத்துக்கு அப்பால் சீன எல்லையோரம் அமைந்திருக்கும் சிசும்லே மற்றும் டெம்சோக் ஆகிய கிராமங்களை இந்த சாலை எளிதாக இணைக்கும்.

இந்த கிராமங்கள் இந்திய- சீன எல்லையோரம் அமைந்திருப்பதால், இதனை இணைப்பது பாதுகாப்பு ரீதியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சாலை கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் பல சவால்களை கடந்து அமைக்கப்பட்டு இருப்பதாக பிஆர்ஓ நிறுவனத்தின் தலைமை பொறியாளர், பிரிகேடியர் டிஎம். புர்விமத் தெரிவித்துள்ளார்.

இந்த சாலை திட்டத்தின் சவால்கள் குறித்து புர்விமத் கூறுகையில்," மிக உயரமான மலைப் பகுதி மட்டுமின்றி, அடிக்கடி மாறும் மிக மோசமான வானிலையும் கட்டுமானப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.

கோடை காலங்களில் மைனஸ் 20 டிகிரி வரையிலும், குளிர்காலங்களில் மைனஸ் 40 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலை நிலவும் பகுதி இது. இந்த பகுதியில் மிக குறைவான ஆக்சிஜன் கிடைக்கும். இந்த பகுதிகளில் கட்டுமானப் பணிகள் செய்வது பணியாளர்களின் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சாலையை அமைக்கும் பணியில் இருந்த கட்டுமானப் பணியாளர்கள், எந்திரங்களை இயக்கியவர்கள் 10 நிமிடத்திற்கு ஒருமுறை சுவாசிக்க வேண்டி, ஆக்சிஜன் பெற கூடாரத்திற்கு வர வேண்டி இருந்தது.

பணியாளர்களில் சிலருக்கு நினைவு இழப்பு, ரத்த அழுத்த பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு போன்ற பல உடல்நல பிரச்னைகளை எதிர்கொண்டனர். மேலும், எந்திரங்கள் உயரமான பகுதிகளில் பழுதடைந்துவிட்டால், அதனை சரிசெய்வதும் பெரும் பிரச்னையாக இருந்தது.

எல்லையோர பாதுகாப்பு மற்றும் தேச நலன் கருதி, இந்த சாலையை காலக்கெடுவுக்குள் கட்டி முடிக்க, எங்களது குழுவில் இருந்த பணியாளர்கள் இரவு நேரத்திலும் வேலை செய்தனர். இந்த சாலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த பின்னர்தான் வேலைக்கு அனுமதித்தோம்.

ஆனால், பல சவால்களை கடந்து இந்த சாலையை முழுமைபெற வைத்துள்ளோம். இந்த திட்டத்திற்கான செலவு ஒரு பொருட்டல்ல. தேசத்திற்கான கொள்கைகளில் முக்கியத்துவம் அளித்து இந்த சாலையை கட்டமைத்துள்ளோம்," என்று கூறினார்.

தற்போது காஷ்மீரில் உள்ள கர்துங்லா பாஸ் மற்றும் சாங்லா பாஸ் ஆகிய கணவாய்கள் கடல் மட்டத்திலிருந்து முறையே 17,900 அடி மற்றும் 17,695 அடி உயரத்தில் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் பயணிப்பது சாகச மற்றும் மோட்டார்சைக்கிள் பயண பிரியர்களின் வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது. இனி இந்த புதிய சாலை அவர்கள் வாழ்வின் லட்சியமாக அமையலாம்.

ஆனால், இந்த சாலையில் மிக மோசமான வானிலை, அபாயங்கள் காரணமாக, இந்த சாலையில் பயணிக்க அனுமதி தரப்படுமா என்பது ஒருபக்கம். மிக மோசமான சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் இங்கு செல்வதை மோட்டார்சைக்கிள் பயண ஆர்வலர்கள் தவிர்க்க விரும்புவார்கள் என்றே கருதலாம்.


Click it and Unblock the Notifications








