சீனாவை முந்தியாச்சு!! இன்னும் அமெரிக்கா மட்டுமே... 2014க்கு பிறகு இந்திய நெடுஞ்சாலை துறையின் சாதனைகள்!
பரந்த சாலை கட்டமைப்பை கொண்ட நாடுகள் வரிசையில் சீனாவை முந்தி 2வது இடத்தை நமது இந்தியா பிடித்துள்ளது. உலகளவில் 2வது இடத்தை பிடிக்கும் அளவிற்கு நம் நாட்டில் எவ்வளவு தொலைவிற்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன? இந்திய நெடுஞ்சாலை துறை செய்துள்ள சாதனைகள் என்னென்ன? என்பதை இனி பார்க்கலாம்.
ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அந்த நாட்டின் சாலைகளின் தரமும், பயன்பாட்டில் இருக்கும் சாலைகளின் நீளமும் வெளிக்காட்டும் என பொருளாதார நிபுணர்கள் கூறுவர். ஏனெனில் அப்போதுதான் உள்நாட்டில் புதிய புதிய நிறுவனங்கள் முளைக்கும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் தைரியமாக வணிகத்தை துவங்கும். இந்த கருத்தை நம் மத்திய அரசு எப்போதுமே ஆணித்தனமாக நம்புகிறது.

இந்தியா, உலகின் மிக பெரிய பரப்பளவு கொண்ட நாடுகளுள் ஒன்று. நாட்டின் பரப்பளவு அதிகமாக உள்ளதெனில், அதற்கேற்ப சாலை வசதிகளும் பரந்து இருத்தல் அவசியம். இதனை நன்கு புரிந்துக்கொண்டு செயல்பட்டுள்ள இந்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து மட்டும், அதாவது பாஜக கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு சுமார் 1.45 லட்ச கிமீ தொலைவிற்கு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக பரந்த & நீளமான சாலை கட்டமைப்பு வசதிகளை கொண்ட நாடுகள் வரிசையில் சீனாவை முந்திக்கொண்டு உலகளவில் நம் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது; முதலிடத்தில் அமெரிக்கா தொடர்கிறது. இதுகுறித்து சமீபத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2014இல் இருந்து தனது அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை விவரித்தார்.

2014இல் இருந்து கடந்த 9 வருடங்களில் இந்தியாவில் பல்வேறு புதிய பகுதிகளில் விரைவுச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறும் அமைச்சர் நிதின் கட்கரி, 9 வருடங்களுக்கு முன்பு வரையில் இந்தியாவில் 91,287 கிமீ தொலைவிற்கு மட்டுமே சாலை நெட்வொர்க் இருந்ததாகவும், கடந்த சில வருடங்களில் தேசிய நெடுஞ்சாலை துறை பல புதிய தேசிய நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் இருந்து 30,000கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு நெடுஞ்சாலைகள் நாடு முழுவதும் போடப்பட்டுள்ளன. இதில் டெல்லி-மீரட் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்ட லக்னோ-காஸிபூர் விரைவுச்சாலைகளும் அடங்குகின்றன. அதுமட்டுமின்றி, இதில் 7 உலக சாதனைகளும் அடங்குவதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதாவது, கடந்த 2023 மே மாதத்தில் 100கிமீ தொலைவிற்கான புதிய விரைவுச்சாலை உலக சாதனைக்காக வெறும் 100 மணிநேரத்தில் அமைக்கப்பட்டது. இதேபோன்று, கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அமராவதி - அகோலா இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண்-53இல் 75கிமீ தொலைவிற்கு 105 மணிநேரம் 33 நிமிடங்களில் கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டது. இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சில மாதங்களுக்கு முன் மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா சாலை கட்டமைப்பு வசதிகளிலும் சீனாவை முந்தியிருப்பது தற்போது மத்திய அமைச்சரின் தகவலின் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது. இந்திய நெடுஞ்சாலை துறையின் சாதனைகள் இதோடு நின்றுவிட போவதில்லை. ஏனெனில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் டெல்லி-மும்பை விரைவுச்சாலை பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளன.


Click it and Unblock the Notifications









