எஃப்ஐஆர் போட சொல்லி காவல் துறையினருக்கு அதிரடி உத்தரவு... இனிமேல் இந்த தவறை செய்தால் அவ்ளோதான்!
ராங் சைடில் பயணம் செய்பவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யும்படி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் நிறைய பேர் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது கிடையாது. ராங் சைடில் (Wrong Side) பயணிப்பது, இந்தியாவில் வாகன ஓட்டிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுவான விதிமுறை மீறல்களில் ஒன்றாக இருக்கிறது. எதிரே சரியான திசையில் வந்து கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளுக்கு இது இடையூறை ஏற்படுத்துகிறது.

ராங் சைடில் பயணம் செய்வது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் பலர் உணர்வதில்லை. வாகன ஓட்டிகள் ராங் சைடில் பயணம் செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சுற்றி வருவதை தவிர்க்க வேண்டும், நேரத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களை இந்த விதிமுறை மீறலுக்கான முக்கிய காரணங்களாக கூறலாம்.

தேசிய நெடுஞ்சாலைகள், நகர சாலைகள், கிராமப்புற சாலைகள் என அனைத்து வகையான சாலைகளிலும் வாகன ஓட்டிகள் ராங் சைடில் பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. சில சமயங்களில் காவல் துறையினர் கூட இந்த விதிமுறை மீறலை கண்டும், காணாமல் இருந்து விடுகின்றனர். வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்ய இது ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

ஆனால் இனி ராங் சைடில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில், ராங் சைடில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆம், அங்கு இனிமேல் ராங் சைடில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவுள்ளது.

ராங் சைடில் பயணம் செய்பவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யும்படி, காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்களை பதிவு செய்யும்படியும் காவல் துறையினருக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. ராங் சைடில் பயணம் செய்ததற்காக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அத்துடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். எனவே மும்பையில் இனி ராங் சைடில் பயணம் செய்பவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் ராங் சைடில் பயணம் செய்வது குறையும் என எதிர்பார்ப்பதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பொது சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''ராங் சைடில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தொடர்பாக மும்பை காவல் துறையிடம் நீண்ட காலமாக புகார் அளித்து வருகிறோம். இதற்கான போட்டோக்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இந்த சூழலில் தற்போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என அறிவித்திருப்பது நல்ல நடவடிக்கை.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறோம். அத்துடன் இனிமேல் ராங் சைடில் பயணம் செய்வதை வாகன ஓட்டிகள் தவிர்த்து விடுவார்கள் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்றனர். மும்பையில்தானே நடவடிக்கை எடுக்கிறார்கள் என மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அலட்சியமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் ராங் சைடில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக இனி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தற்போது தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வைத்தால், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். எனவே போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் பணிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையினர் தற்போது தொடங்கியுள்ளனர்.

எனவே அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுவது உங்களுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். நீங்கள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பதுடன், தேவையில்லாமல் அபராதம் செலுத்துவதும் இதன் மூலமாக தவிர்க்கப்படும். அத்துடன் நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது மற்ற வாகன ஓட்டிகளுக்கும் நன்மை பயக்கும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








