இந்தியாவின் நரபலி சாலையாக மாறிய யமுனா அதிவிரைவு சாலை!
விரைவாகவும், பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்கு எக்ஸ்பிரஸ் வே எனப்படும் விரைவு சாலைகள் உருவாக்கப்படுகின்றன. அப்படி, சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பெருமைமிகு சாலை திட்டம்தான் யமுனா எக்ஸ்பிரஸ் வே எனப்படும் அதிவிரைவு சாலை.
எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ, அதைவிடுத்து இப்போது இந்தியாவின் அதிக உயிர்களை காவு வாங்கும் சாலைகளில் ஒன்றாக யமுனா அதிவிரைவு சாலை மாறியிருக்கிறது. சமீபத்தில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியடைய வைப்பதாக இருக்கின்றன. அதில், பெறப்பட்ட தகவல்களின் மூலமாக இந்தியாவின் மிகவும் ஆபத்தான சாலை என்ற அவப்பெயரை பெற்றிருக்கிறது.

01. கனவு சாலை திட்டம்
டெல்லி அருகில் அமைந்துள்ள நொய்டாவிற்கும், ஆக்ராவிற்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த தடத்தில் இந்த சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பாதுகாப்பான அதேசமயம் விரைவான போக்குவரத்துக்காக இந்த சாலை திட்டம் பல போராட்டங்களை கடந்து செயல்படுத்தப்பட்டது.

02. பெரும் முதலீடு
ரூ.12,000 கோடி முதலீட்டில் யமுனா அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டது. 165 கிமீ தூரத்துக்கான இந்த சாலையின் மூலமாக டெல்லி- ஆக்ரா இடையிலான வாகன போக்குவரத்து மிக எளிதாக மாறியது.

03. திறப்பு விழா
2012ம் ஆண்டு ஆகஸ்ட் 9ந் தேதி யமுனா அதிவிரைவு சாலையை பொது பயன்பாட்டுக்காக உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் துவங்கி வைத்தார்.

04. ஆபத்தான சாலை
திறக்கப்பட்டது முதல் அதிக அளவிலான விபத்துக்களை இந்த சாலை சந்திக்க ஆரம்பித்தது. இதுதொடர்பாக, வழக்கறிஞர் ஒருவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றிருக்கிறார். அதில், இந்தியாவிலேயே மிக ஆபத்தான சாலையாக இது மாறியிருப்பது தெரிய வந்துள்ளது.

05. புள்ளிவிபரம்
திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 2,194 வாகன விபத்துக்கள் இந்த சாலையில் நிகழ்ந்துள்ளது. 2012 முதல் 2013 வரை 896 வாகன விபத்துக்கள் நடந்ததாகவும், 2014ல் மட்டும் 771 விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இந்த ஆண்டின் ஏப்ரல் வரை 252 விபத்துக்கள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புள்ளிவிபரங்களின்படி, சராசரியாக தினசரி இரண்டு விபத்துக்கள் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

06. உயிரிழப்புகள்
இந்த அதிவிரைவு சாலையில் இதுவரை 319 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெங்களூர் -மைசூர், மும்பை- புனே மற்றும் ஆமதாபாத் - பரோடா போன்ற அதிவிரைவு சாலைகளை ஒப்பிடும்போது, யமுனா அதிவிரைவு சாலையில் ஏற்படும் வாகன விபத்துக்களும், உயிரிழப்புகளும் மிக அதிகம் என ஆக்ரா மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் கே.சி.ஜெயின் தெரிவித்துள்ளார்.

07. அதிவேகம்
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிகாரி ஒருவர், மணிக்கு 100 கிமீ வேகத்திற்கு மேல் சென்ற வாகனங்கள்தான் விபத்தில் சிக்கி வருகின்றன. இந்த சாலையில் வேக வரம்பு இல்லாததே அதிக விபத்துக்களுக்கு காரணமாக இருக்கிறது. எனவே, வேக வரம்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

08. கட்டுப்பாடுகள்
வெளிநாடுகளில் உள்ள விரைவு சாலைகளில் பெரும்பாலானோர் சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக இருக்கின்றனர். அதேபோன்று, அங்கு சாலை விதிகளும், வேக வரம்பு உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகளும் அதிகம் உண்டு. ஆனால், இங்கு வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கார்களை ஓட்டுவதும், போதிய பயிற்சியும் இல்லாமலும், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வும் இல்லாததும், இதுபோன்ற சர்வதேச தரத்திலான சாலைகள் அமைத்தும் பயனற்றதாகியுள்ளது.


Click it and Unblock the Notifications