"நடந்து போங்க, இல்லனா சைக்கிள்ல போங்க"... கர்நாடக முதல்வரின் திடீர் அறிவிப்பு... விஷயம் இருக்குங்க!!
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன் மாநில மக்களை "நடந்து செல்லுங்கள் அல்லது சைக்கிளில் பயணியுங்கள் என கூறியுள்ளார். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகள் அனைத்திற்கும் தற்போது நிலவும் மிகப்பெரிய தலைவலிகளில் ஒன்றாக காற்று மாசுபாடு பிரச்னை இருக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வாகனங்களில் இருந்து வெளிவரும் விஷத் தன்மை வாய்ந்த புகையே மிக முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவேதான், எரிபொருளால் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மக்களை மின்வாகன பயன்பாட்டிற்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டும் வருகின்றது. இவை சுற்று சூழலுக்கு நண்பனுக்கு செயல்படும் என்பதே இதற்கான முதன்மைக் காரணம் ஆகும். இம்மாதிரியான சூழ்நிலையில் மாற்று சிந்தனையாக தன் மாநில மக்களை சைக்கிளைப் பயன்படுத்துமாறு ஓர் மாநிலத்தின் முதலைச்சர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநில முதல்வர் பிஎஸ் எடியூரப்பாதான் இவ்வாறு கூறியிருக்கின்றார். இவரே காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் தன் மக்களை சைக்கிள் அல்லது பொது போக்குவரத்து பேருந்து அல்லது நடை பயணத்தை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருக்கின்றார்.

சுத்தமான காற்று மற்றும் தெளிவான நீர் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டான உரிமை என்பதைக் குறிபிட்ட அவர், "புவி வெப்பமடைதல் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக சுத்தமான மற்றும் தூய்மையான சூழல் கடினமாகி வருகின்றது. இது மனிதனுக்கும், இந்த பூமிக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது" என்றார்.

பெங்களூரு நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் தற்போது, நகரத்தின் தேவாலயம் தெரு (Church Street) எனும் பகுதியில் 'சுத்தமான ஏர் டெஸ்ட்பெட் டிரைவ்' எனும் செயல்பாடு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரத்தை மாசுபாட்டின் பிடியில் இருந்து மீட்டெடுக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த செயலின் அடிப்படையில், அந்த பகுதியில் வெறும் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.

வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களின் நடமாட்டத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை வருகின்ற பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், விரைவில் இந்த பகுதியில் மின் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.

நகர்ப்புற நில போக்குவரத்து இயக்குநரகம், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் யுனைடெட் கிங்டமின் கவண் வலையமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கர்நாடகா அரசு காற்று மாசினை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே துவக்க முயற்சியாக சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் 85 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக கூறிய முதலமைச்சர் எடியூரப்பா, இவற்றினாலயே மாநிலத்தில் 50 சதவீதம் காற்று மாசடைகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து, ஒவ்வொரு வருடமும் இதன் எண்ணிக்கை 10 சதவீதம் வரை அதிகரிப்பதாக கூறினார்.

இந்த நிலையிலேயே தன் மாநில மக்களை பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துமாறு கூறியுள்ளார். குறிப்பாக, அருகில் உள்ள பணிகளுக்கு மிதிவண்டி அல்லது நடை பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியிருக்கின்றார். மேலும், ஒவ்வொரு நபரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை தனது முதன்மைக் கடமையாக கருதி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபடுவதற்கு சத்தியம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








