போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: புதிய மஞ்சள் பெட்டிகள் சந்திப்பு திட்டம் அறிமுகம்
நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய சாலைத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
வேலைவாய்ப்பு, கல்வி, தொழில், வியாபாரம், வசதி வாய்ப்புகள் என பல்வேறு காரணங்களால் லட்சக்கணக்கான மக்கள் நகரங்களில் குடியேறி வருவதனால் பல்வேறு பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன. அதில் முக்கியமான ஒன்றாக வாகன நெரிசலை கூறலாம்.

பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலைகள் விரிவடையாத காரணத்தால் இந்தியாவில் அனேக நகரங்களிகளில் போக்குவரத்து நெரிசல் என்பது தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 5கிமீ தொலைவு செல்லக்கூட மணிக்கணக்கில் பயணநேரம் நீள்கிறது.

மக்களில் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் தங்களது பொன்னான நேரம் வீணாவதாக வருந்துகின்றனர். பெங்களூரு மாநகரத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்திய அளவில் இந்நகரம் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. தற்போது இதற்கு தீர்வாக புதிய திட்டம் ஒன்றை பெங்களூரு போக்குவரத்து துறை செயல்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சந்திப்புகளில் ‘Yellow Box Junction' எனப்படும் மஞ்சள் நிற கோடுகள் கொண்ட பெட்டிகளை வரைந்துள்ளனர். மிகவும் வினோதமாக உள்ள இந்த மஞ்சள் வண்ண கோடுகள் சந்திப்பு போக்குவரத்து நெரிசலுக்கு எப்படி தீர்வு தரப் போகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்..

முதலில் இந்த திட்டம் எப்படி தோன்றியது என தெரிந்துகொள்ளலாம். 1967ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள லண்டன் மாநகரில் இத்திட்டம் முதல் முதலாக செயல்படுத்தப்பட்டது. வெகு விரைவிலேயே லண்டன் நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவந்தது இத்திட்டம்.

இது செயல்படும் விதம் பற்றி தெரிந்துகொள்வோம்:
போக்குவரத்து சந்திப்புகளில் மஞ்சள் வண்ணத்தில் சதுர வடிவ பெட்டிகள் தொடர்ச்சியாக வரையப்பட்டிருக்கும். இது ‘Yellow Box Junction' எனப்படுகிறது. இதை கடந்து செல்ல சில விதிகள் உள்ளது. இதனை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்.

விதி 1:
சாலை சந்திப்பை கடந்து எதிரே உள்ள சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மஞ்சள் வண்ண பெட்டிகளை நெருங்கும் முன் எதிரில் உள்ள சாலையில், வாகனங்கள் கடந்து செல்ல இடம் இருக்கிறதா என்பதனை தெரிந்துகொள்ள வேண்டும். இடம் இருந்தால் தாராளமாக இந்த மஞ்சள் வண்ண பெட்டிகளை கடந்து செல்லலாம்.

விதி 2:
நேர் சாலையில், சந்திப்பை கடக்கும் வாகனங்கள் இந்த மஞ்சள் வண்ண பெட்டிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது.

விதி 3
நேராக இல்லாமல் வலது அல்லது இடப்புறமாக திரும்பும் வாகங்களுக்கு மட்டுமே இந்த மஞ்சள் நிற பெட்டிகளில் வாகனத்தை நிறுத்த அனுமதி உள்ளது. ஆனால் வாகனத்தை நிறுத்தும் முன்பு பின்புறமும், முன்புறமும் மற்ற வாகங்கள் கடந்து செல்ல போதுமான இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும்.

அபராதம்
இந்த விதிகளை மீறி மஞ்சள் பெட்டிகளுக்குள் நிறுத்தப்படும் வாகங்களுக்கு அபராதம் விதிக்க அருகிலேயே காத்திருப்பர் போக்குவரத்து காவல்துறையினர்.

இந்த விதிகளை மீறி மஞ்சள் பெட்டிகளுக்குள் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 500-ம் மற்றும் நான்குசக்கர வாகங்களுக்கு ரூ.700 ம் அபராதமாக வசூலிக்கப்படும்.

தவறான இடத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு ரூ.100, சிக்னல் ஜம்பிங்கிற்கு ரூ.100 மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ரூ.300 இருசக்கர வானங்களுக்கு / ரூ.500 நான்கு சக்கர வாகனங்களுக்கு என்றபடி இந்த அபராதத் தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், வாகன ஓட்டிகள் அனைவரிடமும் ஒருங்கிணைந்த சாலை விதிகளை கடைப்பிடிக்கும் ஒழுக்கம் ஏற்படுமானால் வாகன நெரிசல் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலே உள்ள வீடியோவில் மஞ்சள் பெட்டிகள் திட்டத்தின் செயல்முறை விளக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூரூ மாநகரத்தில் தற்போது தான் இத்திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் சென்னை, டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் இத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








