உ.பி-யில் அதிரடி: முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க வந்த ஜப்பான் தூதரின் காரை தூக்கிய காவலர்கள்..
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்ற ஜப்பான் தூதரின் காரை உ.பி காவல்துறை அதிகாரிகள் டோ செய்து தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் பொருப்பேற்றுக்கொண்டது முதலாக பல அதிரடி மாற்றங்களும், சீர்த்திருங்களும் செய்திகளாக தினமும் வெளிவந்தவண்ணமாக உள்ளது. இந்த செய்தியும் கூட தற்போது அவரைச் சுற்றித்தான் இருக்கிறது.

அதிரடி முதல்வர் என்ற பெயர் எடுத்துள்ள யோகி ஆதித்யநாத்தை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக இந்தியாவிற்கான ஜப்பான் நாட்டுத்தூதர் உத்தரப்பிரதேச தலைமைச் செயலகத்திற்கு சென்றுள்ளார்.

ஜப்பான் நாட்டுத் தூதர் கெஞி ஹிராமட்சு வந்திருந்த வெள்ளை நிற எஸ்யூவி கார் உத்தரப்பிரதேச தலைமைச் செயலகத்தின் வாசல் எண்-2 அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள புத்த கயா, சார்னாத் உள்ளிட்ட தலங்களுக்கு ஜப்பானில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இது தொடர்பாகவே ஜப்பான் நாட்டு தூதர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். முதல்வரை சந்தித்து விட்டு கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்த ஜப்பான் தூதர் தான் வந்த காரை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

தவறான இடத்தில் காரை நிறுத்தியிருந்ததால் போக்குவரத்து காவலர்கள் ஜப்பான் நாட்டு தூதரின் காரை ‘டோ' செய்யும் வாகனம் மூலமாக காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தூதர் என்று தெரியாமல் ஜப்பான் தூதரிடம் அபராத்திற்கான ஒப்புகை சீட்டை கொடுக்க வந்த போது தான், அவர் யார் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் தலைமைச் செயலக அலுவலக கார் ஒன்றின் மூலம் அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடமையில் மிகவும் கண்டிப்பான அதிகாரிகள் என்று உத்தரப்பிரதேச காவல்துறையினர் வெகு விரைவில் பெயர் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

ஏனெனில் இதற்கு முன்னதாக முதல்வர் யோகி ஆதித்தநாத்தின் பாதுகாப்புக்கு வந்த கான்வாய் வாகனத்தையே காவலர்கள் டோ செய்து தூக்கிச் சென்றுள்ளனர்.

சிறிது நாட்களுக்கு முன்னர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்வதற்காக தலைநகர் லக்னோவில் இருந்து ஜான்சி என்ற மாவட்டத்திற்கு முதல்வர் யோகி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அவருடைய பாதுகாப்புக்கு வந்த கான்வாய் வாகனம் ஒன்று கலெக்டர் அலுவலகத்தையொட்டி நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அக்காரை காவல்துறை அதிகாரிகள் டோ செய்து தூக்கிச் சென்றனர், இது தெரியாமல் கான்வாய் வாகனம் திருடப்பட்டுவிட்டதாக மாநிலம் முழுவதும் செய்தி பரவியது தனிக்கதை.


Click it and Unblock the Notifications








