புதிய விதிமுறையின்படி 10 வழிகளில் உங்களது டிரைவிங் லைசென்ஸ் ரத்தாகும் வாய்ப்பு!
புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின்படி, விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுனர்களின் உரிமம் 10 வழிகளில் ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனை இந்த செய்தியில் காணலாம்.
அண்மையில் மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் லோக்சபாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சில விதிமீறல்களுக்கு மிக கடுமையான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விதிமீறலில் ஈடுபடுவோரின் டிரைவிங் லைசென்ஸ் 10 வழிகளில் ரத்தாகும் வாய்ப்பு இருப்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

2016 மோட்டார் வாகனச் சட்டத்தின் 206 பிரிவின் படி, வேக வரம்பை மீறி அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்தாகும் வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அபராதம் விதிக்கவும் வழி இருக்கிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதால் தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிக கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.10,000 வரை அபாரதம் விதிப்பதோடு, ஓட்டுனர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கான வாய்ப்பும் புதிய சட்டத்தில் இடம் இருக்கிறது.

பொது போக்குவரத்து சாலையில் ரேஸ் ஓட்டினாலும் உங்களது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். முதல்முறை எச்சரிக்கை கொடுக்கப்படும். இதே தவறை மீண்டும் செய்வோரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்பதை மனதில் வையுங்கள்.

இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் சென்றாலும் இப்போது டிரைவிங் லைசென்ஸ் செய்வதற்கான வழி இருக்கிறது. ரூ.2,000 அபராதம் அல்லது மூன்று மாதங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வோருக்கு ரூ.1,000 அபராதம் அல்லது மூன்று முறை இதே விதிமீறலில் ஈடுபட்டால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகளுக்கு வழி விடாமல் சென்றாலும் கடுமையான விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ரூ.10,000 அபராதம் அல்லது தொடர்ந்து இதே விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுனரின் டிரைவிங் லெசன்ஸ் ரத்து செய்யப்படும்.

கார் அல்லது பைக்குகளில் மாறுதல்கள் செய்திருந்தாலும் ஓட்டுனர் மற்றும் வாகனத்தின் உரிமங்கள் ரத்து செய்யப்படும். எனவே, இனி வாகனங்களில் மாறுதல் செய்ய விரும்புவோர் இந்த விதிமுறையை மனதில் கொள்வது அவசியம்.

சாலை சந்திப்புகளில் விளக்கு சமிக்ஞைகளை மதிக்காமல் சிக்னல் ஜம்ப் என்பதும் இப்போது அதிக விபத்துக்களுக்கு வழி வகுக்கிறது. மூன்று முறை சிக்னல் ஜம்ப் செய்தால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.1,000 வரை அபராதமும், மூன்று முறை தொடர்ந்து இதே தவறை செய்யும் ஓட்டுனர்களுக்கு 6 மாதங்கள் வரை டிரைவிங் லைசென்ஸை முடக்கி வைக்கும் வழிமுறையும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று, மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. தற்போது இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஒரு சில சிறிய மாறுதல்களுடன் விரைவில் அமலுக்கு வரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது சாலை விதிமீறல்கள் வெகுவாக குறையும் என தெரிகிறது. ஆனால், மிகச் சிறிய மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications