இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் ஆட்டம் ஓவர்... இனி வாலை சுருட்டிக்கணும்...
லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. இதன்படி டிரைவிங் லைசென்ஸ் பெறும் முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புபவர்கள், ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறும் சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதன்பின்பு அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அங்கு நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறும் தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்படும். அதாவது அவர்கள் அங்கு வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் இந்த ஓட்டுனர் பயிற்சி மையங்கள் அதிநவீன வசதிகளுடன் இருக்கும். வாகனத்தை எப்படி இயக்குவது? என்பது தொடர்பான உயர்தரமான பயிற்சி இங்கு வழங்கப்படும்.

இதற்காக சிமுலேட்டர்கள், வாகனத்தை ஓட்டி காட்டுவதற்கான டிராக் உள்ளிட்ட வசதிகள் அங்கு இருப்பது கட்டாயம். அத்துடன் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புபவர்கள் தேர்வில் பங்கேற்கும்போது, அது வீடியோவாக பதிவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.

முதலில் வாகன ஓட்டிகளுக்கு எப்படி வாகனத்தை ஓட்டுவது? என்பது தொடர்பாக முழுமையான பயிற்சி கிடைக்கும். சாதாரண சாலைகள் மட்டுமின்றி மலை பாதைகள் உள்பட பல்வேறு இடங்களில் எப்படி வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும்? என்பது தொடர்பாகவும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

இரண்டாவதாக, ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதாக எழுந்து கொண்டிருக்கும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம் பெற்று கொண்டு, தகுதியற்றவர்களுக்கு கூட டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் இருக்கின்றன.

ஆனால் இந்த புதிய நடைமுறை மூலமாக அந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முறையான பயிற்சி பெற்ற ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. பலருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அடிப்படை புரிதலே இல்லை.

உலகிலேயே சாலை விபத்துக்களால் மிக அதிகமான உயிர்களை பறிகொடுத்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதற்கு (ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்) இதுவே முக்கியமான காரணம். ஆனால் மத்திய அரசின் இந்த புதிய நடைமுறை மூலம் வருங்காலங்களில் இந்தியாவில் தகுதியான ஓட்டுனர்கள் உருவெடுப்பார்கள் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








