ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு!
ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ தூரம் பயணிக்கும் காரை துருக்கியை சேர்ந்த இளம் மெக்கானிக் ஒருவர் உருவாக்கி இருக்கிறார். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரில் ஓடும் காரைவிட இந்த காரில் மற்றொரு சிறப்பும் உண்டு. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வருகிறது. எனினும், அன்றாட போக்குவரத்து தேவையில் பெட்ரோல், டீசல் இல்லாமல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைந்து வருகிறது.

இதற்காக, வாகனங்களுக்கான மாற்று எரிபொருளை உருவாக்கும் முயற்சிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகின்றன. மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்கள்தான் ஒரே தீர்வாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.

ஆனால், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான முறைகள் மூலமாக சுற்றுச்சூழல் மாசு அடைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும், மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி விலை மற்றும் அதன் பயண தூரம் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கும், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை வழங்கி வருகிறது.

இந்த சூழலில், தண்ணீர்தான் அடுத்த தீர்வாக கருதி பலரும் தண்ணீரில் இயங்கும் வாகனங்களுக்கான எரிபொருள் நுட்பத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் ஓடும் காரை உருவாக்கி, இந்த எரிநுட்பம் கொண்ட வாகனத்தை விரைவில் சந்தைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், துருக்கியின் காஸியன்டெப் என்ற இடத்தை சேர்ந்த முரத் அக்பஸ் என்ற 21 வயதே நிரம்பிய இளம் வாகன மெக்கானிக் ஒருவர் தண்ணீரில் ஓடும் காரை உருவாக்கி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் கார் ஹைப்ரிட் வகையிலான எரிநுட்பத்தை பெற்றுள்ளது.

அதாவது, தண்ணீர் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இதன் எஞ்சின் இயங்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார். அதாவது, நடைமுறை பயன்பாட்டுக்கு சிறப்பானதாக இருக்கும். இவரது காரில் இருக்கும் விசேஷ கருவி மூலமாக தண்ணீர் எரிபொருளாக பயன்படுத்த முடியும்.

இதன்மூலமாக, ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ தூரம் வரை இந்த கார் பயணிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தண்ணீரில் மட்டுமே செல்லும் வகையில் புதிய காரை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் பழைய காரில் வைத்து தனது ஹைப்ரிட் எரிநுட்ப கருவிகளை சோதித்துள்ளார். அந்த சோதனைகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருந்ததால், புத்தம் புதிய காரிலும் வைத்து சோதனைகள் செய்துள்ளார்.

தண்ணீரிலுள்ள ஹைட்ரஜனை தனியாக பிரித்து எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் இந்த காரை உருவாக்கி இருக்கிறார். ஹைட்ரஜன் வாயுவில் எஞ்சினுக்கு செலுத்தப்பட்டு இந்த எஞ்சின் இயங்குகிறது. இது இரண்டு எரிபொருளிலும் இயங்கும் என்பதே முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

மேலும், தான் உருவாக்கி இருக்கும் இந்த கார் சாதாரண மாடலைவிட 30 சதவீதம் கூடுதல் செயல்திறனை வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். தனது கண்டுபிடிப்பை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
Source: Dailybash


Click it and Unblock the Notifications








