ஆள் இல்லை என்பதற்காக பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது? இளைஞர்கள் செய்த காரியத்தின் அதிர்ச்சி வீடியோ
பொது சாலையில் இளைஞர்கள் செய்த அதிர்ச்சிகரமான ஒரு காரியத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இரவு நேர ஊரடங்கு விதிமுறைகளை மீறி இளைஞர்கள் சிலர் சாலையில் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் உற்சாகமாக நடனமாடுவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது.

அவர்களுக்கு அருகே மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் நிறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களில் ஒருவர் அதன் மேற்கூரை மீது ஏறி நடனமாடுவதையும் நம்மால் காண முடிகிறது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 போட்டியிட்டு வருகிறது.

இந்த காரின் முன்பு இளைஞர்கள் நடனமாடும் வீடியோ காவல் துறையையும் சென்றடைந்தது. சம்பந்தப்பட்ட இளைஞர்களை பிடிப்பதற்காக அவர்கள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோவில் காரின் பதிவு எண் தெளிவாக தெரிகிறது. அதனை அடிப்படையாக வைத்து இளைஞர்களை பிடிக்கும் முயற்சியில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பாடலை மிகவும் சப்தமாக வைத்து கொண்டு இளைஞர்கள் நடனமாடுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இரவு நேரம் என்பதால், அங்கு வேறு யாரும் இல்லை. கண்டறியப்பட்டவுடன் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் அகமதாபாத் நகரில் ஊரடங்கு அமலில் உள்ளது.

எனவே அத்தியாவசிய பணிகள் என்றால் மட்டும், அதிகாரிகள் அனுமதியுடன் செய்து கொள்ளலாம். மற்றபடி மக்கள் வீடுகளில் இருந்து தேவையில்லாமல் வெளியே வர கூடாது. இப்படிப்பட்ட சூழலில் இளைஞர்கள் சிலர் கும்பலாக பொது சாலையில் நடனமாடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு சிலர் இப்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறி கொண்டுதான் உள்ளனர்.

அவர்களது வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். அத்துடன் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் எப்போது திருப்பி வழங்கப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

இதற்கிடையே கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டை போல் இம்முறையும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மெல்ல மெல்ல ஓய்ந்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லி போன்ற வட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை நன்றாக குறைந்திருப்பது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஊரடங்கு விதிமுறைகள் இன்னும் தளர்த்தப்படலாம் எனவும், வாகன போக்குவரத்து உயரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








