வாழ்த்து மழையில் நனையும் இளைஞர்... இப்படி ஒரு தயாரிப்பை உருவாக்கியவரை எப்படிங்க பாராட்டாமல் இருக்க முடியும்?
ஒடிசாவை சேர்ந்த இளைஞருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக சைக்கிள் தினம் நேற்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சஸ்வத் ரஞ்சன் சாஹூ என்ற கலைஞர் உருவாக்கியுள்ள தயாரிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக சஸ்வத் ரஞ்சன் சாஹூவிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

உங்களுக்கு Penny Farthing cycle பற்றி தெரிந்திருக்கும் என நம்புகிறோம். தெரியாதவர்களுக்காக சிறிய முன் உதாரணம். இது பழங்கால சைக்கிள் ஆகும். முன் சக்கரம் மிகவும் பெரிதாகவும், பின் சக்கரம் மிகவும் சிறிதாகவும் இருக்கும். தற்போது இந்த சைக்கிள்களை காண்பது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது.

அப்படிப்பட்ட அரிதான சைக்கிளின் பிரதியை சஸ்வத் ரஞ்சன் சாஹூ உருவாக்கியுள்ளார். அவர் இதனை எப்படி உருவாக்கினார்? என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. 3,600க்கும் மேற்பட்ட தீக்குச்சிகளை பயன்படுத்தி, சஸ்வத் ரஞ்சன் சாஹூ இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளார். 1870களில் இருந்த மாடலை போன்று அவர் தற்போது உருவாக்கியுள்ள சைக்கிள் உள்ளது.

இதன் நீளம் 50 இன்ச்கள். அகலம் 25 இன்ச்கள். இந்த சைக்கிளை உருவாக்குவதற்கு சஸ்வத் ரஞ்சன் சாஹூ 7 நாட்களை எடுத்து கொண்டுள்ளார். சரியாக உலக சைக்கிள் தினத்திற்கு முன்னதாக வேலையை முடித்து விட்டார். இதுகுறித்து சஸ்வத் ரஞ்சன் சாஹூ கூறுகையில், ''நான் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது இந்த சைக்கிளை பார்த்துள்ளேன். அப்போதே இந்த சைக்கிள் என்னை கவர்ந்து விட்டது.

எனவே இது போன்ற சைக்கிளை சொந்தமாக்க வேண்டும் என்று விரும்பினேன். எனினும் எங்கள் பகுதியில் தற்போது இந்த சைக்கிள் கிடைப்பதில்லை. இதனால் உலக சைக்கிள் தினத்தையொட்டி, இந்த சைக்கிளை உருவாக்க வேண்டும் என நினைத்தேன்'' என்றார். மேலும் இதன் மூலமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

காருக்கு பதில் மக்கள் சைக்கிளை பயன்படுத்த முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதுடன், நமது உடல் நலத்திற்கும் நல்லது என்பதால், சைக்கிளுக்கு மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என சஸ்வத் ரஞ்சன் சாஹூ தெரிவித்துள்ளார். உண்மையில் மோட்டார் வாகனங்களுக்கு, சைக்கிள் மிக சிறந்த மாற்று என்பதில் சந்தேகமில்லை.

இதுகுறித்து சஸ்வத் ரஞ்சன் சாஹூ இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளதாவது: சைக்கிள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த கைவினை பொருளை நான் உருவாக்கினேன். சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என நான் அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாமல், நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் மோட்டார் வாகன பெருக்கத்தால் தற்போது காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகரித்து விட்டது. அத்துடன் இந்தியர்கள் பலர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, மோட்டார் வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளன. இந்த 2 பிரச்னைகளுக்கும் சைக்கிள் நல்ல தீர்வு என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








