105 கிமீ வேகத்தில் பறந்த கார்... டிரைவர் சீட்டில் யாரும் இல்லை... குடிபோதையில் இளைஞர்கள் செய்த ஷாக் சம்பவம்...
கார் மணிக்கு 105 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பறந்து கொண்டிருந்தபோது, மூன்று இளைஞர்கள் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமூக வலை தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதில், காருக்குள் மூன்று பேர் அவர்களது இருக்கைகளில் நடனமாடி கொண்டுள்ளனர். அவர்களுக்கு அருகே பீர் பாட்டில்கள் உள்ளன. அவர்கள் மூன்று பேரும் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் கார் மணிக்கு 105 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

ஆனால் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் யாரும் இல்லை. ஆம், அது டெஸ்லா கார். காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு அவர்கள் மூவரும் நடனமாடியுள்ளனர். டெஸ்லா ஆட்டோபைலட் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறோம். தெரியாதவர்களுக்கு ஆட்டோபைலட் குறித்து கொஞ்சம் விளக்கி விடுகிறோம்.

டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் காரை அதுவாகவே இயக்கி கொள்ளும். ஸ்டியரிங், ஆக்ஸலரேட்டர், பிரேக் என அனைத்தையும் அதுவே கட்டுப்படுத்தி கொள்ளும். சரியாக சொல்வதென்றால், நீங்கள் காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு தூங்கி கொண்டு கூட வரலாம். உங்கள் புரிதலுக்காக மட்டுமே நாங்கள் இவ்வாறு கூறுகிறோம்.

உண்மையில் அவ்வாறு செய்ய கூடாது என டெஸ்லா நிறுவனம் கூறுகிறது. அதாவது காரை ஆட்டோபைலட்டில் போட்டாலும், ஓட்டுனர் தனது இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என டெஸ்லா நிறுவனம் தெரிவிக்கிறது. எப்போது வேண்டுமானாலும் காரை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ள டிரைவர் தயாராக வேண்டும்.

கடந்த காலங்களில் ஓட்டுனர்கள் பலர் டெஸ்லா காரை ஆட்டோபைலட்டில் போட்டு விபத்தில் சிக்கியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், சிலர் டெஸ்லா காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு செல்போனில் திரைப்படங்களை பார்த்து கொண்டு செல்வது, தூங்கி கொண்டு செல்வது போன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஓட்டுனர் இருக்கையில் யாரும் அமர்வதில்லை.

டெஸ்லா நிறுவனம் ஆட்டோபைலட்டை தற்போது படிப்படியாக மேம்படுத்தி கொண்டுள்ளது. எனவே தற்போதைய நிலையில் ஓட்டுனரின் கவனம் சாலையில் இருப்பது அவசியம். ஆனால் பல அசம்பாவிதங்கள் நடந்த பின்னரும், அதனை புரிந்து கொள்ளாமல் சிலர் தொடர்ந்து விபரீதமான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டே உள்ளனர்.

அந்த வகையில்தான் டெஸ்லா காருக்குள் மூன்று பேர் நடனமாடிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பாதுகாப்பானது கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டெஸ்லா கார்களை பலர் இப்படி தவறாக பயன்படுத்தி வரும் நிலையில், டெஸ்லா நிறுவனம் நடப்பாண்டில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எப்போது கார் விற்பனையை தொடங்கும்? என பலர் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அனேகமாக நடப்பாண்டு மத்தியில் அது நடக்கலாம் என தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. எனினும் டெஸ்லா நடப்பாண்டு இந்தியாவில் கால் பதிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








