ஒரு சின்ன தப்பு நடந்தா கூட காலி!! இந்தியாவை பற்றி என்ன நினைப்பாங்க? டெல்லியில் நடந்த நிகழ்வு!!
மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) வேன் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்தப்படி இளைஞர்கள் சிலர் நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவையும், இத்தகைய செயல்களில் ஈடுப்படுவது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நம் இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளும், விரைவுச்சாலைகளும் மேம்படுத்தப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு சிறிய நகரத்திற்கும் கூட நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாடு முழுவதும் சாலை வசதிகள் பெருகி வருவதால், சாலை போக்குவரத்து முன்பை விட மேம்பட்டதாக மாறி வருகிறது.

ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு சாலையில் எவ்வாறு வாகனம் ஓட்டுவது மற்றும் வாகனத்தில் பயணிப்பது போன்ற விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. மனம் ஏற்க மறுத்தாலும், இதுதான் உண்மை. இதன் வெளிப்பாடாகவே, நெடுஞ்சாலையில் இயங்கிக் கொண்டிருந்த மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் மேற்கூரையில் அமர்ந்தப்படி சில இளைஞர்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, நிகில் ராணா என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம். இந்த சம்பவம் டெல்லி- மீரட் விரைவுச்சாலையில் நடைபெற்றுள்ளது. டெல்லிக்கு அருகே உள்ள அக்ஷர்தம் கோயிலுக்கு அருகே இந்த குறிப்பிட்ட ஈக்கோ வேன் சென்றுக் கொண்டிருந்த போது இந்த வீடியோவை காட்சிப்படுத்தி உள்ளனர். டேஸ்போர்டு கேமரா மூலம் இந்த வீடியோவை காட்சிப்படுத்திய கார் ஓட்டியும் அதே சாலையில் அந்த ஈக்கோ வேனுக்கு பின்னால் சென்றுக் கொண்டிருந்துள்ளார்.

இதில் மற்றொரு கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்தில் ஈடுப்படுத்தப்பட்ட ஈக்கோ வேனில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளது. அதாவது, இந்த ஈக்கோ வேனை டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாடுகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர் என்பது அர்த்தமாகும். இந்த குறிப்பிட்ட மாருதி ஈக்கோ வேனின் மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதற்காக ராக் உள்ளது.
இதன் மூலமாகவே, வேனின் மேற்கூரையில் அமர்ந்திருந்த இருவரும் சவுகரியமாக கம்பியை பிடித்துக் கொண்டு பயணம் செய்துள்ளனர். இரு இளைஞர்கள் அமர்ந்திருப்பது மட்டுமின்றி, இந்த ஈக்கோ வேனின் மேற்கூரையில் சில பொருட்களும் உள்ளதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இரு பயணிகள் இவ்வாறு வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்திருப்பதற்கு காரணம், வாகனத்தினுள் இடம் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.

அதாவது, வாகனத்தினுள் நிறைய பயணிகளும், அவர்களது உடைமைகளும் நிறைந்துள்ளன. வாகனத்தினுள் இடம் கிடைக்காத காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். ஆனால் எப்படியிருந்தாலும், இவர்களது செயல் ஆபத்தானது மற்றும் இந்திய மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பானது ஆகும். ஏனெனில், மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும்போது எந்தவொரு பாதுகாப்பும் கிடைக்காது.
என்ன தான் ரூஃப் ராக்கை பிடித்தப்படி பயணித்தாலும், சில அசம்பாவிதங்களை தடுக்க முடியாது. குறிப்பாக, சட்டெர்ன் பிரேக்குகளின் போது நீங்கள் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்படலாம். ஏனெனில், சட்டெர்ன் பிரேக்கை எப்போது பிடிக்க வேண்டிவரும் என்பது டிரைவருக்கே தெரியாத போது, மேற்கூரையில் அமர்ந்திருப்பவர்களால் யூகிக்க முடியாது. அதேபோல், வளைவுகளில் திரும்பும்போதும் வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காலத்தில் அரசு பேருந்துகளில் கூட இவ்வாறு மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தனர். ஆனால் இன்று அத்தகைய செயல்கள் சட்டத்திற்கு புறம்பானவைகளாக கொண்டுவரப்பட்டு விட்டன. ஆனால் நம்மில் சிலர் இன்னமும் பழைய காலத்திலேயே இருக்கிறோம் என்பதை இத்தகைய செயல்களின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறான செயல்கள் உங்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தாக சென்று முடியலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications
