இதுக்கு முன்னாடி யானைகளை வெச்சு யாரும் இப்படி காசு சம்பாதிச்சது இல்ல! வைரல் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி!
டிராஃபிக் சிக்னல்களில் (Traffic Signals) இருக்கும் பிச்சைக்காரர்கள், இந்திய நாட்டின் மிக மோசமான அடையாளமாக மாறி விட்டனர். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான டிராஃபிக் சிக்னல்களில் பிச்சைக்காரர்களை நம்மால் பார்க்க முடியும். அவர்களால் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதங்களில் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
அவசரமாக சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவது இதில் மிக முக்கியமான பிரச்னை. இது மோசமான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) வழிவகுக்கலாம். ஆனால் இந்தியாவின் டிராஃபிக் சிக்னல்களில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, இந்த பிரச்னை தற்போது வேறு வடிவம் எடுத்து வருகிறது.

யானைகளை வைத்து ஆசிர்வாதம் வழங்கி பாகன்கள் பணம் சம்பாதிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் யானைகள் மூலம் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்ததை நீங்கள் பார்த்துள்ளீர்களா? நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது உண்மைதான். சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral video) ஒன்று வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் 2 பாகன்கள், 2 யானைகளை வைத்து, வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. வாகன போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள், பஸ்கள் என பல்வேறு வகையான வாகனங்களையும் மறித்து பாகன்கள் பணம் பறித்துள்ளனர்.
ஆனால் இரு சக்கர வாகனங்கள்தான் அவர்களின் முக்கியமான குறியாக இருந்துள்ளது. உருவத்தில் பெரிய யானைகளை பார்த்தவுடன், வாகன ஓட்டிகள் அச்சப்படுவதை இந்த வீடியோவில் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. மேலும் பாகன்கள் யானைகளின் முன் பகுதி கால்களை தூக்க வைத்தும், வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றனர்.
இதன் காரணமாக ஒரு சில வாகன ஓட்டிகள் வேண்டா வெறுப்பாக பணம் கொடுத்து விட்டு செல்கின்றனர். ஒரு வாகன ஓட்டியோ, கல்லை எடுத்து கொண்டு யானைகளை துரத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் மேற்கு வங்கம் அல்லது வங்க தேசத்தில் நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இதற்கு முன்பாக ஆசிர்வாதம் வழங்கி பணம் சம்பாதித்த பாகன்களைதான் நாம் பார்த்துள்ளோம். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த பாகன்கள் யானைகள் மூலம் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்துள்ளனர். யானைகளை வைத்து இப்படி பணம் சம்பாதித்தது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும்.
ஆனால் இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பாகன்கள், வாகன ஓட்டிகளை மட்டும் துன்புறுத்தவில்லை. கூடவே யானைகளையும் சேர்த்து துன்புறுத்தியுள்ளனர். என்னதான் பழக்கப்படுத்தப்பட்டவையாக இருந்தாலும் கூட, யானைகள் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களை தாக்கலாம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஆபத்தானது.
அத்துடன் இது போன்ற செயல்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும். இதன் காரணமாக அவர்கள் பதற்றத்திற்கு ஆளாகலாம். பதற்றத்துடன் வாகனம் ஓட்டும்போது, மிகவும் மோசமான சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இத்தகைய விபரீத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








