மூட்டை மூட்டையா வந்தது இதுதானா! ஷோரூம் ஊழியர்களை கதற விட்ட இளைஞர்... எல்லாரும் கதிகலங்கி போயிட்டாங்க!
தெலங்கானா மாநிலம் மாஞ்சேரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இந்தியாவில் உள்ள மற்ற இளைஞர்களை போலவே, இவருக்கும் கேடிஎம் (KTM) நிறுவனத்தின் பைக்குகள் மீது ஆர்வம் அதிகம். கேடிஎம் பைக் வாங்குவதை இவர் தனது கனவாகவே வைத்திருந்தார். அதை வெகு சமீபத்தில் நிறைவேற்றியும் காட்டியுள்ளார்.
கேடிஎம் பைக் வாங்கியதெல்லாம் ஒரு செய்தியா? என அவசரப்படாதீர்கள். வெங்கடேஷ் தனது கனவாக இருந்து வந்த கேடிஎம் பைக்கை எப்படி வாங்கினார்? என்பதுதான் செய்தியே. மாஞ்சேரியல் பகுதியில் உள்ள கேடிஎம் நிறுவனத்தின் டீலர்ஷிப் கதவுகளை, வெங்கடேஷ் சமீபத்தில் தட்டினார். பைக் வாங்குவதற்கு ஒரு வாடிக்கையாளர் வந்தால், சேல்ஸ்மேன்கள் சந்தோஷம்தான் அடைவார்கள். ஆனால் வெங்கேடஷின் வருகை, கேடிஎம் டீலர்ஷிப் சேல்ஸ்மேன்களுக்கு ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் வெங்கேடஷ், 1 ரூபாய் நாணயங்களுடன் வந்தார். கேடிஎம் டீலர்ஷிப்பிற்கு, வெங்கடேஷ் ஒரு மினி டெம்போவில் வந்தார். அந்த மினி டெம்போவில், 112 பைகள் இருந்தன. அவை அனைத்திலும் 1 ரூபாய் நாணயங்களாக வைக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் 1 ரூபாய் நாணயங்களை ஏற்று கொள்வதற்கு, கேடிஎம் ஷோரூம் ஊழியர்கள் தயக்கம் காட்டினர். ஆனால் கேடிஎம் பைக்குகளின் மீது வெங்கடேசுக்கு இருந்த ஆர்வத்தை பார்த்து, பின்னர் அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இறுதியாக 2.85 லட்ச ரூபாயை செலுத்தி, வெங்கடேஷ் தனது கேடிஎம் பைக் கனவை நிறைவேற்றி கொண்டார். இந்த 2.85 லட்ச ரூபாய்க்கும் அவர் 1 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்தார். 2.85 லட்ச ரூபாய்க்கு 1 ரூபாய் நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு அரை நாள் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. கேடிஎம் ஷோரூம் ஊழியர்கள் பொறுமையாக இந்த தொகையை எண்ணி முடித்துள்ளனர். அதன் பிறகு, வெங்கடேசுக்கு கேடிஎம் பைக் டெலிவரி கொடுக்கப்பட்டது.
வெங்கடேசுக்கு சிறு வயதில் இருந்தே சேமிப்பு பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தனது கனவு பைக்கை வாங்குவதற்காக அவர் ஆரம்பத்தில் இருந்தே நாணயங்களை சேமித்து வந்துள்ளார். இதன்படி சுமார் 40 ஆயிரம் 1 ரூபாய் நாணயங்களை அவர் சேமித்து வைத்திருந்தார். எஞ்சிய நாணயங்கள் வங்கிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டவை என கூறப்படுகிறது. இதை செய்து முடிப்பதற்கு சுமார் ஒரு மாதம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 ரூபாய் நாணயங்களை கொண்டு, கேடிஎம் பைக்கை வாங்கும் விஷயம் செய்தி நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டது. எனவே செய்தியாளர்களும் அந்த கேடிஎம் ஷோரூமிற்கு சென்று விட்டனர். இந்த செய்தி தற்போது பொதுமக்கள் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. வெங்கடேஷின் சேமிப்பு பழக்கத்தை சமூக வலை தளங்களில் தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் புதுமையான முயற்சியின் மூலம் பைக் வாங்கியதற்காகவும் அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்து கொண்டுள்ளனர்.
ஆனால் தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த காலங்களில் பலர் நாணயங்களை கொடுத்து, பைக் வாங்கியுள்ளனர். நாணயங்களை கொடுத்து கார் வாங்கியவர்களும் கூட இங்கே இருக்கின்றனர். நாணயங்கள் மூலம் கார், பைக் போன்ற வாகனங்களை வாங்குவது தற்போது இந்தியாவில் ஒரு 'டிரெண்ட்' ஆகவே மாறி வருகிறது. இதே பாணியை வெங்கடேசும் தற்போது பின்பற்றி, தனது கேடிஎம் பைக் கனவை நிறைவேற்றி கொண்டுள்ளார்.
இந்த பைக்கை பாதுகாப்பாக ஓட்ட அவருக்கு வாழ்த்துக்கள். கேடிஎம் பைக்குகள் மின்னல் வேகத்தில் பறக்க கூடியவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு ஓட்டுவது நன்மை பயக்கும். கேடிஎம் மட்டுமல்லாது, எந்தவொரு இரு சக்கர வாகனம் என்றாலும், ஹெல்மெட் அணிந்து கொண்டு ஓட்டுவதுதான் சாலை விபத்துக்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். எனவே ஹெல்மெட் அணிய ஒருபோதும் மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications








