ஃபாஸ்ட்டேக் கார்டுக்கு ரூ9 கோடி பில்! ரோல்ஸ் ராய்ஸ் காரோட விலையே அவ்வளவு வராதே!
ஃபாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்தியதற்காக ரூ 9 கோடி பில் கட்ட சொல்லி இளைஞர் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ரூ 90 டோல்கேட் கட்டணத்துக்கு பதிலாக ரூபாய் 9 கோடி கட்டணமாக விதிக்கப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெரும்பாலான டோல்கேட் கட்டணங்கள் தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டு முறையிலேயே நடக்கிறது. ஃபாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொண்டால் போதும் டோல்கேட்டை கடக்கும் போது அதில் உள்ள பணம் தானாக நம் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு அரசின் டோல்கேட் கணக்கிற்கு செலுத்தப்பட்டு விடும்.

டோல்கேட்டை வாகனங்கள் விரைவாக கடப்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்தியா முழுவதும் தற்போது 96 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் கார்டுகள் இணைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இந்த ஃபாஸ்ட் டேக் கார்டில் சமீபத்தில் இளைஞர் ஒருவருக்கு பெரும் குழப்படி ஏற்பட்டுள்ளது.
அவரது செல்போனிற்கு ஃபாஸ்ட் டேக் கார்டில் போதுமான பேலன்ஸ் இல்லை அதனால் தொடர்ந்து இந்த கார்டை பயன்படுத்த உடனடியாக ரீசார்ஜ் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவர் பேடிஎம் ஆப் மூலம் ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்கி இருந்தார். உடனடியாக அந்த ஆப் உள்ளே சென்று எவ்வளவு பாக்கியுள்ளது என செக் செய்துள்ளார்.

பாக்கியியைப் பார்த்ததும் அவருக்கே தலைசுற்றல் வந்து விட்டது. பேடிஎம் மேப்பில் அவரது ஃபாஸ்ட் டேக் கார்டிற்கு ரூபாய் ஒன்பது கோடி பணமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துள்ளார். ஃபாஸ்ட் டேக் அவசர உதவி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு உள்ளார்.
ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் டீம் பிஎச்பி தளத்தில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு ரூபாய் 9 கோடி செலுத்த சொல்லி பேடிஎம் ஆப் மூலம் வந்த செய்தியை ஸ்கிரீன்ஷாட் ஆக பதிவு செய்துள்ளார். இது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பதில் அளித்த ஒருவர் தனக்கும் இதேபோல ரூ1.5 கோடி வரை டோல்கேட் கட்டணம் செலுத்த சொல்லி செய்தி வந்ததாகவும் ஆனால் இது குறித்து தான் புகாரளித்த பின்பு இது ஒரு டெக்னிக்கல் பிரச்சனை எனவும் இது சரி செய்யப்பட்டு விட்டது எனவும் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டோல்கேட் பணப்பரிவர்த்தனை என்பது பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நம்பி வருகின்றனர். ஆனால் இதுபோன்று வெளியாகும் செய்தி மக்களின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் இருக்கிறது. இது போன்ற தொழில்நுட்ப பிரச்சனைகள் எங்கு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது
Source: team BHP


Click it and Unblock the Notifications








