கொஞ்ச நேர ஜாலி ரைடிற்காக, ரூ.8,000 அபராதத்திற்கு உள்ளான இளைஞர்!! சிறையிலும் அடைத்த போலீஸார்!
உத்திர பிரதேசத்தில் புனிதமான சராயு நதியில் மோட்டார்சைக்கிளை இறக்கியதற்காக வாலிபர் ஒருவருக்கு அதிரடியாக போலீஸார் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரபலமான சுற்றுலா தளங்களுள் ஒன்று சரயு நதி எனலாம். இந்து கடவுள் ராமர் உடன் தொடர்புப்படுத்தப்படுவதால், சரயு நதியில் நீராட தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இத்தகைய நதியில் தான் அயோத்யா நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கெத்து காட்டும் விதமாக மோட்டார்சைக்கிளை இறக்கி, பயணம் செய்துள்ளார்.
थाना को0अयोध्या पुलिस द्वारा विधिक कार्यवाही प्रचलित हैं। pic.twitter.com/fUd91pvqhn
— AYODHYA POLICE (ayodhya_police) July 5, 2022
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட இளைஞரை அடையாளம் கண்டு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். ஆற்றில் பைக்கை ஓட்டியது, சட்டையில்லாமல் பொது வெளியில் பைக்கை ஓட்டியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக அந்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த அயோத்யா நகர போலீஸார் இளைஞருக்கு இ-செல்லானை அனுப்பி வைத்துள்ளனர். இந்த இ-செல்லானில் தேதி, வாகன எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர்த்து, அபராத தொகை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த இளைஞருக்கு சுமார் ரூ.8,000-ஐ அபராதமாக அயோத்யா நகர போலீஸார் விதித்துள்ளனர்.

இந்த இளைஞர் மீது பைக் ஸ்டண்ட், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது மற்றும் அதிகாரத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட எந்தவொரு வழிக்காட்டுதலுக்கும் கீழ்படியாமை என மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 194டி, மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 129 மற்றும் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 179 என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆற்றில் மோட்டார்சைக்கிளை ஓட்டும் வீடியோவை போல் இந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு வெளியே நிற்கும் படமும் இணையத்தில் வைரலாகி உள்ளது. அத்துடன் இவர் சிறை கம்பிகளுக்கு பின்னால் நிற்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளாரா, கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்த விபரங்களை போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முந்தைய காலங்களில் இவ்வாறான சட்ட விதிமீறல்கள் ஏதேனும் நடந்திருப்பின் அதுதொடர்பான ஆதாரங்கள் போலீஸாரின் விசாரணைக்கு தேவையாக இருந்தது. ஆனால் தற்போது தவளை தன் வாயால் கெடும் என்பதை இவ்வாறு தங்களால் எடுக்கப்பட்ட வீடியோக்களே சம்பந்தப்பட்டவரை தண்டிக்க போதுமானதாக உள்ளது. இவ்வளவு ஏன், சிசிடிவி-ஆல் அபராதத்திற்கு உள்ளானவர்களை பற்றியும் பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அதேபோல், இ-செல்லான் முறை அமலுக்கு வந்த பிறகு, போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவரின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய தேவையும் நீங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவைகளை போலீஸார் அடையாளம் காண்கின்றனர். பிறகு சம்பந்தப்பட்டவருக்கு மின்னஞ்சல் வாயிலாக இ-செல்லானை அனுப்புகின்றனர், அவ்வளவுதான் வேலை முடிந்தது.

ஆற்றில் மோட்டார்சைக்கிளை இறக்குவது போன்ற அரிதான குற்றங்களுக்கு மட்டுமில்லாமல், சட்டத்திற்கு புறம்பாக வாகன பார்க்கிங், போக்குவரத்து சிக்னல்களை அலட்சியப்படுத்துவது உள்ளிட்ட பெரும்பான்மையான குற்றங்களுக்கும் போலீஸார் இ-செல்லான் முறையே கடைப்பிடிக்கின்றனர். இதன் மூலமாக குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு போக்குவரத்து சிக்னல்களிலும் சிசிடிவி கேமிராக்களையும், வாகனத்தின் வேகம் நிர்ணயிப்பானையும் போலீஸார் பொருத்தியுள்ளனர். அதுமில்லாமல் பாதுகாப்பு பணிகளுக்கான தனியார் சிசிடிவி கேமிராக்களின் எண்ணிக்கையும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. தண்டனைக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் உட்படவில்லையெனில் மட்டுமே அவரை தேடி கண்டுப்பிடித்து, அதற்கும் வழக்குகள் சேர்த்து சட்டத்திற்கு முன் நிறுத்துவது என போலீஸாரின் பணி நீள்கிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் நிச்சயம் எதிர்காலத்தில் நமது இந்தியாவிலும் குற்றஞ் செயல்களை வெகுவாக குறைக்கும் என போலீஸார் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஏனெனில், மேற்கண்ட இளைஞரின், சிறைக்கு பின்னால் இருக்கும் புகைப்படத்தையும், அபராத தொகையையும் காண்போர் இனி இவ்வாறான விதிமீறல் செயல்களில் ஈடுப்பட நிச்சயமாக யோசிப்பர். நம்மை சுற்றி போலீஸார் இல்லாவிடினும், நாம் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது என பயப்படுவர்.


Click it and Unblock the Notifications








