போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமில் வழுக்கி விழுந்த இளைஞர்கள்! காஸ்ட்லீயான காரில் கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாங்க!
கார்களில் சன்ரூஃப் (Sunroof) வழங்கப்படுவது என்பது ஒரு காலத்தில் ஆடம்பர விஷயமாக இருந்த நிலையில், சமீப காலத்தில் அது அத்தியாவசியமானதாக மாறி உள்ளது. இன்றைய காலத்தில் கார் வாங்குபவர்கள் தாங்கள் வாங்கும் காரில் சன்ரூஃப் இருக்கிறதா என்பதைதான் முக்கியமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனாலேயே, கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் தாங்கள் விற்பனை செய்யும் அனைத்து கார்களிலும் சன்ரூஃப் வசதியை வழங்க முயற்சிக்கின்றன.
ஆனால், காரில் சன்ரூஃப்-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்க கூடிய விஷயமாக உள்ளது. கார்களில் சன்ரூஃப்-ஐ மூடிக் கொள்வது, திறந்துக் கொள்வது என்பது எல்லாம் அவரவர் விருப்பம். தேவையென்றால், பயணத்தின் நடுவே கூட திறந்து மூடிக் கொள்ளலாம்.

பயணம் முழுவதும் சன்ரூஃப்-ஐ திறந்து வைத்தப்படி கூட காரை ஓட்டலாம்; இதற்கெல்லாம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால், கார் சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பதற்கும், அதன் வழியாக வெளியே வந்து மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பது, அதன் வழியாக வெளியே வந்து காரின் மேற்கூரையில் அமர்வது உள்ளிட்ட செயல்களை எல்லாம் கார் ஓய்வு நிலையில் இருக்கும்போது செய்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை.
ஆனால், காரின் இயக்கத்தில் இருக்கும்போது இவ்வாறு செய்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கு சாலையை பார்ப்பதில் இடையூறாக அமைவது மட்டுமின்றி, வாகன ஓட்டிகளின் கவனம் சிதறடிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதால், இவ்வாறான செயல்களை சாலையில் கார் இயக்கத்தில் இருக்கும்போது மேற்கொள்ள இந்தியாவில் தடை உள்ளது. இதுகுறித்த விதிமுறை இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ளது.

மற்ற வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, இந்த செயல்களில் ஈடுப்படும் நபர்களுக்கும் காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், சன்ரூஃப் வழியாக பயணத்தின் போது வெளியே எட்டிப் பார்ப்பதை தவிர்க்குமாறு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் இங்கு சில இளைஞர்கள் ஜாலியாக பயணத்தின்போது கார் சன்ரூஃப் வழியாக வெளியே வந்து புகைபிடித்தப்படி பயணம் செய்துள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்பூரில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வை அநேகமாக இளைஞர்கள் தான் வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டு இருப்பர் என நினைக்கிறோம். அந்த வீடியோ எப்படியோ அங்கே சுற்றி இங்கே சுற்றி ராய்பூர் மாநகர போலீசாரின் கண்ணில் பட்டுள்ளது. அப்புறம் என்ன... காரின் நம்பர் பிளேட்டை வைத்து இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் அனைவரும் அதே உடையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக ராய்பூர் போலீசார் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர்கள் நடப்பதற்கே கொஞ்சம் சிரமப்படுவதில் இருந்து போலீசார் இளைஞர்களை வெளுத்து வாங்கி உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. ராய்பூரில் இந்த நிகழ்வு நடந்திருப்பினும், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். ஏனெனில், இந்த சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய ஜீப் காம்பஸ் (Jeep Compass) காரில் பஞ்சாப் மாநில நம்பர் பிளேட் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜீப் காம்பஸ் ஆனது நன்கு பவர்ஃபுல்லான மற்றும் உலகளவில் பிரபலமான அமெரிக்கன்-ஸ்டைல் எஸ்யூவி கார் ஆகும். அத்தகைய காரை இவ்வாறான செயலுக்கு பயன்படுத்துவது கார் ஆர்வலராக எவரொருவருக்கும் வருத்தமளிக்கும். கார் சன்ரூஃப்-ஐ எப்போது, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற தெளிவு மக்களிடம் ஏற்பட வேண்டியது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications









