5 நிமிட ஜாலிக்காக இது தேவையா!! போலீஸார் செய்த தரமான செயல் - இணையத்தில் வைரலாகிய வீடியோ!
மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார்களின் பொனெட் மீது நின்றுக் கொண்டு இரு இளைஞர்கள் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, அவர்களுக்கு அதிரடியாக பெரிய அபராத தொகையை போலீஸார் விதித்துள்ளனர். யார் அந்த இளைஞர்கள்? எங்கு இந்த சம்பவம் நடந்துள்ளது? வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இணைய மோகம் யாரை தான் விட்டு வைத்தது. உயர் தரத்திலான கேமராக்களை கொண்ட மொபைல் போன்கள் வந்த பிறகு அன்றாட வாழ்நாளில் செய்யும் அனைத்தையும் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிடுபவர்கள் நம் இந்தியாவிலும் உருவாக ஆரம்பித்துவிட்டனர். சிலர் தங்களது வாழ்வில் முக்கியமாக நடக்கும் சம்பவங்களை மட்டும் இணையத்தில் பதிவிடுகின்றனர். அதாவது, புதியதாக வாகனம் வாங்குவது மற்றும் சுற்றுலா செல்வது போன்றவற்றை.

இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் வீடியோ எடுக்கப்படுகிறது என தெரிந்த பின் சிலரால் தங்களை கட்டுப்படுத்த முடிவதில்லை. இது அவர்களை ஆபத்தான செயல்களை கூட செய்ய வைக்கிறது. அவ்வாறே, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களில் சுற்றுலா சென்றவர்களில் இருவர் கார்களின் பொனெட்டின் மீது நின்றப்படி பயணம் செய்துள்ளனர். அவர்களது இந்த ஆபத்தான பயணத்தை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர்.
இந்த செயல்களில் ஈடுப்பட்டவர்கள் பின்னர் தங்களது இந்த உத்தரகாண்ட் சுற்றுலா குறித்த வீடியோக்களை ஒன்றாக எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட நெட்டிசன் ஒருவர் அந்த வீடியோவை டுவிட்டரில் உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில போலீஸார்கள் உடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அத்துடன், அதில் ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் வாகன பதிவெண்ணையும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போலீஸார் இவ்வாறு இணையம் வாயிலாக வரும் புகார்களை ஆராயவே தனி குழுவை கொண்டுள்ளனர். இந்த புகாரை டுவிட்டரில் அளித்தவர் ஏன் இரு மாநில போலீஸாரின் டுவிட்டர் கணக்குகளை மென்ஷன் செய்துள்ளார் என்றால், இந்த சம்பவம் நடந்தது உத்தர காண்டில், ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார்களும் உத்திர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டவை.
வீடியோவில் தெரிந்த சம்பந்தப்பட்ட ஸ்கார்பியோ கார்களின் நம்பர் பிளேட்டை வைத்து இந்த செயலில் ஈடுப்பட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு அபராத செல்லான் இ-மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த செயலில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவருக்கும் மிக பெரிய தொகையை போலீஸார் அபராதமாக விதித்துள்ளனர்.

எந்த அளவிற்கு பெரிய தொகை என்றால், இந்த ஆபத்தான செயலில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவருக்கும் தலா ரூ.52,000-ஐ அபராதமாக போலீஸார் விதித்துள்ளனர். மேலும், இந்த அபராதம் தொடர்பான செல்லானையும் போலீஸார் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது, பின்னர் சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு மிக பெரிய தொகையை போலீஸார் அபராதமாக விதிப்பது வாடிக்கையான ஒன்றே.
கடந்த ஆண்டில் கூட மும்பையில் பரபரப்பான சாலையில் வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களை போலீஸார் கைது செய்து 6 மாத காலம் சிறையில் அடைத்தனர். சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் இந்த இளைஞர்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, மிக பெரிய தொகையை அபராதமாக விதிப்பது மட்டுமின்றி, சிறைத்தண்டனைகளும் இவ்வாறான செயல்களுக்காக விதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுற்றுலாவுக்கு செல்லும்போது நம்மை அறியாமலேயே ஓர் குதூகலம் தானாக வந்துவிடுகிறது. ஆனால் அத்தகைய நேரத்தில் தான் நமது ஐம்புலன்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், இப்படிதான் பெரிய அபராதங்களுக்கு உள்ளாக வேண்டிவரும். ரூ.52,000 என்பது உண்மையில் மிக அதிகமான தொகை. ஆனால், இது விதிக்கப்பட வேண்டிய அபராதமே.


Click it and Unblock the Notifications