Zojila Tunnel மூலம் ஆசியாவிலேயே இந்தியாவுக்கு கிடைக்கவுள்ள பெருமை - மத்திய அரசு இதை மார்த்தட்டி சொல்லலாம்!!
ஆசியாவிலேயே வேறெந்த நாட்டிலும் இல்லை என்பதுபோல், உயரமான இடத்தில் புதிய சுரங்கப்பாதையை அமைக்க நமது இந்திய அரசு தயாராகி வருகிறது. தற்சமயம் இத்தகைய சுரங்கப்பாதையில் நீளமானதாக உள்ள அடல் சுரங்கப்பாதையை பின்னுக்கு தள்ளவுள்ள இந்த புதிய சுரங்க சாலையை பற்றி முழுமையாக இனி பார்க்கலாம்.
பரந்து விரிந்து மல்லாக்க படுத்திருக்கும் மலைகளை குடைந்து சுரங்க சாலைகளை அமைப்பது இயற்கையின்படி தவறு என்றாலும், அந்த இயற்கையில் அடங்கும் நாமும் சவுகரியமான மற்றும் விரைவான போக்குவரத்துக்காக மலைகளை தோண்ட வேண்டி உள்ளது. இந்த கருத்தின்படி, மக்களுக்கு சுரங்க சாலைகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு பல்வேறு சுரங்க சாலைகளை நாடு முழுவதும் எழுப்பி வருகிறது.

அதில் ஒன்றாக, ஜோஜிலா சுரங்கப்பாதை ஜம்மூ & காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 13 கிமீ நீளத்தில் அமைக்கப்பட உள்ள இது ஆசியாவிலேயே மிக உயரமான பகுதியில் அமைய உள்ள சுரங்கப்பாதையாக புகழப்பட உள்ளது. தற்சமயம் இந்த பெருமையை இந்தியாவின் அடல் சுரங்கப்பாதை கொண்டுள்ளது. ஜம்மூ & காஷ்மீரில் அமையும் ஜோஜிலா சுரங்கப்பாதையை முழுவதுமாக கட்டி முடிப்பதற்குள் 2026ஆம் ஆண்டு வந்துவிடும் என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 10) ஜோஜிலா சாலையை திறந்து வைத்த போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உறைய வைக்கும் பனி விழும் பகுதிகள் என அனைத்தையும் ஒருங்கிணைப்பதால் இந்தியாவின் ஆல்-வெதர் சாலை என ஹைலைட் படுத்தி புதிய ஜோஜிலா சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாலையின் ஓர் அங்கமாகவே புதிய ஜோஜிலா சுரங்கப்பாதை அமைய உள்ளது.

2026இல் முடிக்கப்படும் என அமைச்சர் கூறினாலும், அதற்கு முன்பாக இந்த சுரங்கப்பாதையின் பணிகள் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் உள்ள ட்ராஸ் என்ற பகுதியையும், கண்டெர்பல் மாவட்டத்தில் உள்ள பால்டல் என்ற பகுதியையும் இணைக்கும் விதத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஜோஜிலா சுரங்கப்பாதையினால் பயணம் 1 மணிநேரத்திற்கும் கீழ் குறையும் என அந்த பகுதி வாகன ஓட்டிகள் இந்த சுரங்கப்பாதைக்கு ஆவலாக காத்து கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இந்த சுரங்க சாலைப் பணிகள் ஏற்கனவே 40% நிறைவடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஸ்ரீநகர்-கார்கில்-லே தேசிய நெடுஞ்சாலையில் அமையவிருக்கும் இந்த சுரங்க சாலை ஆனது சுமார் 11,578 அடி உயரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சுரங்கச்சாலை ஆனது ஒரே குழாய் ஆக அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரே வழியாகவே நேர்-எதிர் என இரு பாதைகளும் செல்லும்.

ஆஸ்திரேலியன் ஸ்டைலில் இந்த புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்க பணியை மேகா பொறியியல் & உள்கட்டமைப்பு லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திடம் மத்திய அரசு வழங்கியுள்ளது. "இந்த சுரங்க பணியில் நாங்கள் 3 முக்கிய விஷயங்களை எட்டியுள்ளோம். சுரங்கத்தின் பாதுகாப்பு, பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் பணி நடக்கும் வேகம் என்பவை அந்த 3 விஷயங்கள்" என மேகா நிறுவனத்தின் திட்ட முதன்மை அதிகாரி ஹர்பல் சிங் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஆசியாவிலேயே உயரத்தில் அமைக்கப்பட்ட நீளமான சுரங்கப்பாதை இந்தியாவில் இருப்பது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயமாகும். இத்துடன் நிற்காமல், இந்த பெயரை தொடர்ந்து இந்தியாவே வைத்திருக்கும் பொருட்டு, மற்றொரு நீளமான சுரங்கப்பாதையை உயரமான இடத்தில் மத்திய அரசு உருவாக்கி வருவது உண்மையில் பாராட்டுக்கு உரியது. அத்துடன், ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் இந்த சுரங்கச்சாலை குறைக்கும்.


Click it and Unblock the Notifications









