இவைதான் வெளியே புறப்பட ராசியே இல்லாத நேரம்.. டேட்டாவே இததான் சொல்லுது! தயவுசெய்து நேரலம்-காலம் பாத்து போங்க!
வெளியே செல்லும்போதும், நல்ல காரியத்திற்காக போகும்போதும், நேரம், காலம் பாத்து புறப்படணும்னு அந்த காலத்து பெரியவங்க சொல்வாங்க. இது எந்த அளவுக்கு சரியோ, தவறோனு தெரியாது. ஆனால், இன்றைய நவீன காலத்திலும் இதை கடைபிடிக்க வேண்டும் என சொல்வதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. சில புள்ளி விபரங்களே குறிப்பிட்ட சில நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துவதுதான் ஆச்சரியத்தின் உச்சம். அந்த நேரங்கள் என்ன? ஏன் அந்த நேரங்களில் பயணிப்பதை தவிர்க்குமாறு கூறப்படுகிறது? என்பது போன்ற தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
நாடு முழுக்க வாகன விபத்துகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே டெல்லி போக்குவரத்துத் துறை அதிர்ச்சியான ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அது வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, பெரும்பாலான சாலை விபத்து மரணங்கள் இரவு 9 மணி தொடங்கி விடியற்காலை 2 மணிக்குள்ளாகவே அரங்கேறுகின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஏனெனில், வெளியில் புறப்படுபவர்கள், குறிப்பாக, வெளியூர்களுக்கு பயணிப்பவர்கள் பலர் இரவு நேரங்களையே தேர்வு செய்கின்றனர். மிக முக்கியமாக இரவு 9 தொடங்கி விடியற்காலை 3 மணியையே பலர் வெளியூர்களுக்கு பயணிக்க தேர்வு செய்கின்றனர்.
இந்த நேரத்திலேயே சாலையில் போக்குவரத்து குறைந்துக் காணப்படும், குறிப்பாக, நெடுஞ்சாலைகள் மிகவும் காலியாக இருக்கும். எனவே போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் போய்விட முடியும் பலர் என கருதுகின்றனர். இத்தகையோருக்கே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் டெல்லி போக்குவரத்து துறையின் சமீபத்திய ரிப்போர்ட் அமைந்திருக்கின்றது.
பொதுவாகவே இரவு நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படும் என்பதால் பெரும்பாலான வாகனங்கள் அதிக வேகத்தில் அப்போது பயணிக்கும். இதுதவிர, சரக்கு வாகனங்களும் மிக அதிக அளவில் இரவு நேரங்களில் பயணிக்கும். இந்த நிலையே அதிக விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றது. அதாவது, சாலை காலியாக இருக்கும் என்பதால் வாகனங்கள் மிக அதிக வேகத்தில் பயணிக்கும்.
இந்த மாதிரியான நேரங்களிலேயே கவன சிதறல் மற்றும் பிற காரணங்களால் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்தைச் சந்திக்கின்றன. குறிப்பாக, வாகன ஓட்டிகள் சிலர் தூக்க கலக்கத்துடன் வாகனங்களை இயக்குவதாலும் விபத்துகள் அரங்கேறுகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரம் அமைந்திருக்கின்றது.
அது 2022 ஆம் ஆண்டில் அரங்கேறிய விபத்துகள் பற்றிய புள்ளி விபரங்களையே வெளியிட்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிக எண்ணிக்கையில் விபத்துகள் அரங்கேறி இருப்பதை இந்த புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 1,517 விபத்துகள் அரங்கேறி இருப்பதாகவே டெல்லி போக்குவரத்துத் துறை வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துகளால் அதிகபட்சமாக 1,571 பேர் இறந்திருக்கின்றனர். இந்த அளவிற்கே மிகப் பெரிய அளவில் உயிர் பலியை சாலை விபத்துகள் வாங்கியிருக்கின்றன. இது டெல்லி விபத்து புள்ளி விபரம் மட்டுமே ஆகும். மேலும், இது 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 28 சதவீதம் அதிகம் ஆகும்.
மேலும், இந்த விபத்துகளில் அதிகம் ஆண்களே பலியாகி இருக்கின்றனர். 89 சதவீதம் ஆண்களும், 11 சதவீதம் பெண்களும் உயிரிழந்திருக்கின்றனர். பெரும்பாலானோர் 30 முதல் 39 வயதுடையவர்கள் என கூறப்படுகின்றது. இதேபோல், ஒட்டுமொத்த விபத்துகளில் 50 சதவீதம் பாதசாரிகளாலும், 45 சதவீதம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களால் அரங்கேறியவை என்றும் கூறப்படுகின்றது.
இதேபோல், சனிக் கிழமை, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய கிழமைகளிலேயே அதிக விபத்துகள் அரங்கேறி இருப்பதாக தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் சனிக்கிழமைகளிலும், அவ்வாறு சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் அதிகளவில் திரும்புவதாலுமே அந்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பாக, இரவு நேரங்களில் அரங்கேறும் விபத்து நிகழ்வுகளிலேயே மோதிவிட்டு தப்பியோடும் நிகழ்வு அதிக அளவில் அரங்கேறுவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்திருக்கின்றது. ஆகையால், பயணங்களை மேற்கொள்வது என்றால் இரவு நேரங்களை தேர்வு செய்ய வேண்டாம் என்பதே எங்களின் வேண்டுகோள் ஆகும். குறிப்பாக, 9 மணி முதல் விடியற்காலை 2 மணிக்குள் அவசியமின்றி பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது. அப்படியே அவசியம் கருதி பயணிப்பவர்கள் அதிக கவனத்துடன் பயணிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications








