இரு சக்கர வாகன கடன் வட்டி உயர்வு விற்பனையை பாதிக்கும்-ஹீரோ ஹோண்டா

பணவீக்கத்தின் அளவை 10 சதவீதத்துக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் பலன் கிடைத்தபாடில்லை. எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி அனைத்துக் கடன்களின் வட்டி வீதத்தையும் உயர்த்தியது. அதற்கும் முன்பே பல வங்கிகள் வட்டி வீதத்தை 1 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்திவிட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹீரோ ஹோண்டா தலைமை நிதி அலுவலர் ரவி சுத், "இந்த வட்டி வீத உயர்வு, மக்களின் வாங்கும் சக்தியை நிச்சயம் பாதிக்கும். 2010-ன் இரண்டாம் பாதியில் விற்பனை அளவு குறையும் வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு உற்பத்தியை 23 சதவீதம் அதிகரித்திருந்தது ஹீரோ ஹோண்டா. 2011 இறுதியில் மோட்டார் சைக்கிள் உற்பத்தியை 50 லட்சம் யூனிட்டுகளாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ 115 கோடி செலவிடுகிறது.
இன்னொரு பக்கம் போட்டி நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் ஹீரோ ஹோண்டாவுக்கு. டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்கள் புதுப்புது பைக்குகளை, சற்றே குறைந்த விலையில் இறக்கத் தீர்மானித்துள்ளன. மஹிந்திரா நிறுவனம் வேறு பைக் உற்பத்தியில் குதித்துள்ளது.
இந்தப் போட்டியையும் சமாளித்து, அதிக விற்பனையைக் காட்டுவது ஹீரோ ஹோண்டாவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்கிறார்கள் மார்க்கெட் நிபுணர்கள்.
இப்போதைய நிலவரப்படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வாகனக் கடன் வட்டியை 11.75லிருந்து 12.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியோ 15.75லிருந்து 16.25 சதவீதத்துக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.
"ஆனாலும் இந்தியர்களின் வாங்கும் சக்தி மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே அதிக உற்பத்தியில் இறங்கியுள்ளோம்" என்கிறார் ரவி.


Click it and Unblock the Notifications








