ஆட்டோ மார்க்கெட்டை விரிவுபடுத்துகிறது டி.வி.எஸ்.: புது பெர்மிட்களால் சூடு பிடித்துள்ள மார்க்கெட்

எல்.பி.ஜி. ஆட்டோக்கள் கட்டுபடியாகும் விலையில் கிடைப்பதால் இப்போது அவை பிரபலமாகி விட்டது. இந்தப் பிரிவில் முன்னணிக்கு வர தீவிரமாக களம் இறங்கியுள்ளது டிவிஎஸ்.
டி.வி.எஸ். சிறிது காலத்திற்கு முன்புதான் ஆட்டோவை அறிமுகப்படுத்தியது. ஆனால், தற்போது தான் ஆட்டோ மார்க்கெட்டை விரிவுபடுத்துவதில் குறியாக உள்ளது. ஆட்டோ மார்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவது பஜாஜின் ஆர். இ. ஆட்டோ ரிக்ஷாக்கள் தான்.
கடந்த 12 ஆண்டு காலமாக புது ஆட்டோ பெர்மிட்கள் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது. சமீபத்தில்தான் அந்தத் தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதையடுத்து 8,000 பெர்மிட்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதில் 3,100 ஆட்டோ ரிக்ஷா பெர்மிட்கள் சென்னை பகுதிக்கும், 4,900 பெர்மிட்கள் மற்ற பகுதிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. தமிழக கம்பெனி என்பதால் டி.வி.எஸ். தற்போது விரிவடைந்து வரும் மார்ககெட்டில் 20 சதவிகிதத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கம்பெனியின் விற்பனை பிரிவுத் தலைவர் ஹெச். எஸ். கோயின்டி கூறியதாவது,
கொள்ளளவு தான் எங்கள் நிறுவனத்தின் தட்டுபாடு. புது பெர்மிட்கள் வழங்குவதை அடுத்து கிராக்கி அதிகமாகி உள்ளது. பெர்மிட் வாங்குபவர்களுக்கு பணத்தை ஏற்பாடு செய்யவும், மாடலைத் தேர்ந்தெடுக்கவும் சிறிது காலம் எடுக்கும். அதற்குள் டி.வி.எஸ். மக்களின் தேவையை சமாளிக்க தயாராகிவிடும். பெரும்பாலாண மாநிலங்கள் புதிதாக பெர்மிட்கள் வழங்குவது கம்பெனிக்கு நன்மையாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
டி.வி.எஸ். நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 3,108 ஆட்டோக்களை விற்றுள்ளது. கடந்த ஏப்ரல்-ஜூன் வரையில் 10,907 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மூன்று சக்கர வாகனங்களின் கிராக்கி அதிகரித்துள்ளதால் டி.வி.எஸ். கிங் வரும் மாதங்களில் பல மாநிலங்களில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








